Tuesday, January 31, 2012

மகாதேவன் சேவை மூலம் மக்கள் சேவை

                             இந்து சமயத்தின் பழமையையும் பெருமைகளையும் சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் , மக்களுக்கு அது ஆற்றும் சேவைகளை  அறிமுகம் செய்யும் நோக்கத்துடன் நான்காவது ஆண்டாக, இம்முறை, சென்னையில் இந்து சமய ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி விமரிசையாக நடந்தது. 150 -க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஏராளமானோர்  இதற்கு வருகை தந்தது மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்தது.

பொருள் மற்றும் வர்த்தகக் கண்காட்சிக்கும் ஆன்மீகக் கண்காட்சிக்கும் உள்ள வேற்றுமை நன்றாகவே தெரிந்தது. இங்கு வந்தவர்களின் ஆன்மீக தாகம் நன்றாகவே வெளிப்பட்டது. என்னதான் வைத்திருக்கிறார்கள் என்று வேடிக்கை பார்ப்பவர்களை விட, தங்களுக்குத் தெரியாததைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மிக்கவர்களே அதிகம் காணப்பட்டார்கள். சிலருக்குத்தான் எத்தனை எத்தனை சந்தேகங்கள்! ஒரு பெண்மணி ருத்ராக்ஷம் அணிவதைப் பற்றி அடுக்கடுக்காகக் கேள்விகள் கேட்டார். ' பெண்கள் ருத்ராக்ஷம் அணியலாமா; எவ்வளவு பெரிய அளவு வரை அணியலாம். தாலியோடு இணைத்து அணியலாமா; படுப்பதற்கு முன் கழற்றி வைத்து விட வேண்டுமா; ஒரிஜினல் ருத்ராக்ஷத்தை எப்படித் தெரிந்து கொள்வது; எத்தனை முகம் கொண்ட ருத்ராக்ஷம் அணியலாம் " இப்படி ஏராளமான கேள்விகள். இவ்வளவுக்கும் பதில் தெரிந்து கொண்ட பிறகு அவர்களாகவே முன்வந்து ருத்ராக்ஷம் வாங்கிச் சென்றபோது அவர்கள் முகத்தில் திருப்தி நிலவியது. ஒரு ஸ்டாலில் இலவசமாகவே ருத்ராக்ஷம் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.

ஓரிடத்தில் பழைய சிவாலயங்களில் திருப்பணி செய்ய வேண்டியது பற்றியும் ,மற்றொறு இடத்தில் அச்சிவாலயங்களில் தீபம் ஏற்ற வேண்டியதன் அவசியம் பற்றியும் விளக்கம் கொடுத்தார்கள். வேறொர் இடத்தில் ஒரு செடியின் இலையைக் கொண்டே தீபம் ஏற்ற முடியும் என்று சொல்லி, அச் செடியை விற்றுக்கொண்டு இருந்தார்கள். சில முக்கியப் பிரமுகர்களும் வருகை தந்திருந்தார்கள்.

இவ்வளவுக்கும் இடையில் www.shaivam.org அமைத்திருந்த அரங்கம் பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும். எந்த பிரதிபலனையும் எதிர் பாராமல் சிவத்தொண்டு ஆற்றும் இணைய தளம் இது. 5000 த்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் அருமையாக வடிக்கப் பெற்றுள்ளன. மாநிலங்களில் உள்ள சிவாலயங்கள் பற்றிய முழுத் தகவல்கள், பன்னிரு திருமுறைகள்,சைவ சித்தாந்த நூல்கள்,புராணங்கள் ஆகியவற்றின் மூல பாடங்கள், தமிழிலும் வட மொழியிலும் உள்ள துதிப் பாடல்கள், பதிவு செய்யப்பட பாடல்கள், வீடியோ காட்சிகள், பல்வேறு நிகழ்ச்சிகளைக் கொண்ட 24 மணி நேர ரேடியோ -- இப்படிச்  சிவனருளை வாரி வழங்குகிறது இந்த இணைய தளம். இராப்பகலாக இதற்கு உழைப்பவர்கள் இக்கண்காட்சியில் அந்த இணைய  தள நிகழ்ச்சிகளையும் பதிவுகளையும் காட்டி அருமையாக விளக்கியது பாராட்டுக்குரியது. இதை மற்றவர்களும் வீட்டிலிருந்தே கண்டு பயன் பெறுவது ஒன்றே அவர்களுக்குச்  செய்யும் கைம்மாறு.

ஒரு பெண்மணி கண்ணீர் மல்கத் தனது குறையையும் வெளியிட்டார்: " எனக்கு 60 வயது ஆகிறது.குழந்தைகள் வெளி நாட்டில் வேலை பார்க்கிறார்கள். நானோ கோயில்களில் தொண்டு செய்வதில் பெரிதும் ஆர்வம்  காட்டுபவள். இதைக் கண்டு என் குடும்பத்தோர் பரிகாசம் செய்கிறார்கள். எனக்குத் தேவாரம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆனால் குடும்பத்தோர் இதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன். நான் என்ன செய்வேன்" இப்படி அப்பெண்மணி புலம்பியது நெகிழ வைத்தது. உலகத்தவர்கள் தன்னைப் பித்தன் என்று எள்ளி நகையாடியது பற்றிக் கவலைப் படாத மாணிக்கவாசகர் தன் நெஞ்சில் இறைவனை  நீங்காமல் கண்டதுபோல் நமக்குப் பக்குவம் ஏற்படவில்லையே. இறைவா, நீயே இதற்குத் துணை செய்ய வேண்டும்.  

No comments:

Post a Comment