Saturday, January 14, 2012

என்றும் புதியது


வேதமே தர்மத்திற்கு மூலம் என்றும் அதை ரக்ஷித்தால், அது நம்மை ரக்ஷிக்கும் என்று சொல்லுவார்கள். ரக்ஷிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அதை நசிப்பதையும் , கேவலப் படுத்துவதையும் அல்லவா பார்த்துக்கொண்டு இருக்கிறோம்! அதிலும் திரை உலகம் இச் செயலைப் பல ஆண்டுகளாகச் செய்துவந்தபோதிலும் கண்டிப்பவர்களைக் காணோம். அண்மையில் ஒரு திரைப் படத்தில் கதாநாயகனைக் காட்டும்போது புருஷ சூக்தம் ஒலிக்கப் படுவதாக ஒரு இணைய தளத்தில் வெளியான செய்தியை ஒரு பெண் சுட்டிக் காட்டியிருந்தார். பெண்ணாக இருந்தாலும் வேத தர்மத்தின் பால் அவர் கொண்ட அக்கறையை மற்றவர்களும் காட்டினால் நல்லது.

முன்பெல்லாம் கூடுமானவரையில் ஸ்டூடியோக்களுக்கு உள்ளேயே கோயில் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது கேட்பார் இல்லாமல் போனதால்  கோயில் வளாகத்துக்குள் ஆடல் (?) பாடல் (?) காட்சிகள் படமாக்கப் படுகின்றன. இவ்வளவு ஏன்? கோயில் மேல் தளக் கூரையில் இவற்றை எடுக்கிறார்கள். சின்னத்திரைக்காட்சிகளும் இதற்கு விதி விலக்கல்ல. இதில் மிகப் பெரிய கொடுமை என்ன என்றால், கோயிலுக்கு வரும் பக்தர்களை படப்  பிடிப்பு நடப்பதால் விரட்டி அடிப்பதே. இதற்கெல்லாம் அனுமதி அளிக்கும்  கோயில் நிர்வாகிகள் இந்தப் பாவத்திற்குத் துணை போகிறார்கள்.கும்பாபிஷேகம் செய்வது கோவிலைப் புனிதப் படுத்துவதற்கு என்று சொல்லிக்கொண்டு கூடவே இப்பாவங்களையும் அனுமதிப்பதால் அக்குடமுழுக்கு செய்தும் பலன் ஏதும் இருக்காது. கோயிலுக்குள்ளே செல்லும் பக்தர்களைத் தடுப்பதற்கு இவர்கள் யார்? அதிலும் கேவலமான நடனங்களும், கோவிலுக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத பாடல்களும் படமெடுக்கும் போ து நமது பண்பாடு எங்கே ஒளிந்து கொண்டது? தொட்டதற்கெல்லாம் நாகரிகம், பண்பாடு என்று முழங்குபவர்கள் இதில் மட்டும் மௌனம் சாதிப்பது ஏன்?   இது அடுத்தவர்களின் வழிபாட்டு உரிமையை மீறும் செயலாகத்  தோன்றவில்லையா? மத நம்பிக்கையையும் சடங்குகளையும் இழிவு படுத்துவதை  சட்டம் எப்படித் தடுக்கப் போகிறது? இதற்கு நீதிமன்றங்கள் தான் தீர்வு சொல்ல வேண்டும்.

இன்னும் ஒரு மனித உரிமை செயலை சமுதாயம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பதையும் இங்கே சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. போகி பண்டிகையின் போது ,பழையன போக்கலும் புதியன புகுத்தலும் என்று சொன்னாலும் சொன்னார்கள் , தற்போது அதை அரைகுறையாகப் புரிந்துகொண்டவர்கள் , தங்கள் வீட்டிலுள்ள பழைய துணிமணிகளையும் வேண்டாத சாமான்களையும் விடியற்காலையில் கொளுத்த ஆரம்பித்து விடுகிறார்கள். அந்தத் தீயில் , ப்ளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருள்களும் அடங்கும். ஊரே புகைமண்டலம் ஆகி விடுகிறது.வெளியில் போனால் மூச்சு திணறுகிறது. மாசுக் கட்டுப் பாடு வாரியமும் ,காவல் துறையும் என்ன செய்வார்கள் ,பாவம்! ஊ த வேண்டுமே என்று சங்கை ஊ துகிறார்கள். இப்படி அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் கொடுப்பது தான் நமது பண்பாடா? சமூக ஆர்வலர்கள் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் வெறும் குரல் கொடுத்தால் போதாது. இக்குரல் உதட்டளவில் நில்லாமல் உள்ளத்திலிருந்து வர வேண்டும்.

தற்கால நிலையைப் பார்க்கும் போது வேறு விதமாகச் சிந்திக்கத் தோன்றுகிறது. பழைய நல்ல பழக்க வழக்கங்களைப் போக்காமல், புதியன என்று சொல்லிக்கொண்டு நம் கலாசாரத்தைப் புதைக்கும் திரைப்படங்களையும்,சீரியல்களையும் , ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பதே இப் பண்டிகையை அர்த்தமுள்ளதாக ஆக்கும். தீய எண்ணங்களை எரிப்பதும் ,பழையதாகத் தோன்றினாலும் என்றும் புதியதாக நிற்கும் நமது பாரம்பர்யத்தைப் பின்பற்றி, ஒளிவீசச் செய்வதுவே  நம்மைப் புனிதப்படுத்தும். குப்பைகளைக் கொளுத்தும் தீயாக போகிப் பண்டிகை நின்று விடக்கூடாது. நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற விலைமதிக்கமுடியாத சிந்தனைகளைப் புடம் போட்டுப் பார்க்கும் ஞானத் தீயாக அது இருக்கட்டும்.வேதமும் வேள்வியும் ஆன ஞான பரமேச்வரன் இப்படிப்பட்ட ஞானத்தை நம் எல்லோருக்கும் வழங்கி அருள வேண்டும்.

No comments:

Post a Comment