Sunday, December 30, 2012

கேட்பார் இல்லையா?


சிவபெருமானுடைய ஆலய பூஜைகள் பாதிக்கப்பட்டால் , நாட்டில் மழை குறைந்துவிடும் என்றும் , களவு அதிகரிக்கும் என்றும் திருமூலரின் திருமந்திரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருக்கிறது. நாட்டின் தற்போதைய நிலை சொல்லித் தெரியவேண்டியதில்லை. மழை குன்றியதால், வற்றாத காவிரியாறும் வற்றிப்போய்க் கிடக்கிறது. கோவில் சொத்துக்களில் கை வைக்கும் அளவுக்குக் களவு பெருகி விட்டது.

ஆயிரக்கணக்கான ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் கைப்பிடியில் இருப்பதாகச்  செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றின் இன்றைய மதிப்பு பல ஆயிரம் கோடிகளைத் தாண்டக்கூடும். பூஜைகள் தட்டுப்பட்டாலே ஆள்பவர்களுக்குத் தீங்கு வரும் என்று திருமந்திரத்தில் கூறப்படுவது ஒரு பக்கம் இருக்கட்டும். அப்பூஜைகளை மீண்டும் பழையபடி துவங்கத் தேவையான நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும்போது, கோயில் நிலங்களே ஏப்பம் விடப்பட்ட நிலையில் , நடவடிக்கை எடுக்கத் துவங்கியுள்ளது வரவேற்க வேண்டியதுதான்.  ஐ ம்பது ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது தான் புரியவில்லை.

இதற்கிடையில், இந்து அறநிலையத் துறை உயர் அதிகாரி ஒருவர், " வருமானத்தின் அடிப்படையில் கோயில்களைப் பிரிப்பதில்லை. அனைத்துக்  கோயில்களையும் ஒரேமாதிரி நிர்வகித்து வருகிறோம் " என்று கூறியதாகச் செய்தி வெளியாகியுள்ளது. அப்படியானால் எல்லாக் கோயில்களிலும் ஒரேமாதிரி சம்பளம் வழங்கப்படுகிறதா? எத்தனையோ கோயில்களில் மாத சம்பளம் முன்னூறும் நானூறும் கொடுக்கப்படும்போது , அதிகாரிகளின் சம்பளம் மாத்திரம் ஏறாமலேயே இருக்கிறதா? பதவி உயர்வு தான் கொடுக்காமல் இருக்கப் படுகிறதா? மாதக் கணக்கில் சம்பள பாக்கி உள்ள கோயில்கள் எத்தனையோ இருப்பது தெரியாதா? ஆள் பற்றாக்குறை என்ற நொண்டி சாக்கை எத்தனை நாள் தான் சொல்லிக் கொண்டு இருக்கப் போகிறார்கள்?  உற்சவங்கள் நின்றுபோன ஆலயங்களில் அவை நின்றது நின்றது தான். மீண்டும் துவக்க உபயதாரர் முன்வந்தால், அர்ச்சகர் சொந்தப் பொறுப்பில் கையெழுத்துப் போட்டு உற்சவ மூர்த்திகளை காப்பகத்திலிருந்து எடுத்துக் கொண்டு வந்து விட்டு, விழா முடிந்தவுடன் அவரே திரும்பக் கொண்டு காப்பகத்தில் வைக்கும் நிலை வேடிக்கையாக இல்லை? நிர்வாக அதிகாரி ஏன் பொறுப்பேற்கக் கூடாது? நிலைமை இவ்வாறு இருக்கும்போது  எவருமே பொறுப்பு ஏற்கத் தயங்குவார்கள்.

அறநிலையத்துறையால் ஆலயங்களுக்குப் தேவையான  பாதுகாப்பு வழங்கப் போதிய நிதி இல்லை என்பது நம்பும்படியாக இல்லை. நின்றால் கட்டணம்,உட்கார்ந்தால்  கட்டணம் என்று எதற்கு எடுத்தாலும் வசூலிக்கப் படும் சிறப்புக் கட்டணங்கள் எங்கே போகின்றன? அப்படி வசூலாகும் இடங்களோ அத்தனை விழாக்களையும் உபயதார்களைக் கொண்டே நடத்தி விடுகின்றன. ஆலயத் திருப்பணிகளுக்கு நிதி வழங்கப்படுவது தெரியாதா என்று கேட்கலாம். அதில் தான் எத்தனை சிக்கல்கள்; எத்தனை முறைகேடுகள். கட்டட ஒப்பந்ததாரர்களின் தரமற்ற வேலைகள். திருப்பணிகள் இப்படிச் செய்து சில ஆண்டுகளுக்குள் மேற்கூரை ஒழுகுவதையும், சுவர்களில் விரிசல்கள் காணப்  படுவதையும்தான் பார்க்கிறோமே! அனுமதிக்கப்பட்ட வேலைகள் முறையாக நடை பெறுகின்றனவா என்று எத்தனை நிர்வாக அதிகாரிகள் பார்வை இடுகின்றனர்?  அவர்களுக்கு வேண்டியதெல்லாம் கும்பாபிஷேகப் பத்திரிகையில் பெயரும், கோவில் மரியாதையும் தான்.

"தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் பழமை வாய்ந்த கோயில்கள் இருக்க  வேண்டும் என்பது , ஒரு தரப்பு பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது" என்று ஒரு நிருபர் , தமிழ் செய்தித்தாள் ஒன்றில் எழுதியுள்ளார். சட்ட திட்டங்களை வேண்டுமானால் மாற்றிவிட்டு அவ்வாறு செய்யக் கூடும். இதனால் நிலைமை சீராகும் என்று கூற முடியுமா? தொல்லியல்  துறை யின் கண்காணிப்பிலுள்ள கோயில்களில் ஆறு கால பூஜை நடைபெறுகிறதா? அல்லது சிப்பந்திகளுக்கு முறையான சம்பளம் வழங்கப்படுகிறதா? பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணிகள் செய்யப்பெற்று கும்பாபிஷேகம் நடத்தப்பெறுகிறதா? வாசலில் போர்டு போட்டுவிட்டு ஒரு காவலாளியை நியமிப்பார்கள். அவரும் சுய நினைவில் இருப்பவராக இருந்தால் அதிருஷ்டம். இப்படியிருக்கும்போது உற்சவங்கள் நடத்தப் பெறுமா என்ற கேள்விக்கே இடமில்லை. இருந்தாலும் , மக்களுக்கும், அரசுக்கும் கோயில்கள் பாழாவதை நினைவூட்டிய அப்பத்திரிகைக்கு நன்றி. சுட்டிக்காட்டுவதோடு நின்று விடாமல்,      " ஜெயித்துக் காட்டுவோம்" என்று கல்விப் பணி செய்வது போலக் "கோயில்கள் மீண்டும்         பொ லி யச் செய்வோம்" என்று செயல் படலாமே! அதனால் எத்தனையோ கோயில்கள் புனரமைக்கப் படும் அல்லவா?  முன்னுதாரணமாக இந்தப் பத்திரிகையே ஒரு வைப்பு நிதி ஏற்படுத்தினால் நூற்றுக்கணக்கான நல்லெண்ணம் படைத்தவர்கள் தாமும் தாராளமாக உதவ முன்வர மாட்டார்களா?  சுட்டிக்காட்டுபவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் தீர்வு காண முயலுவோர் மிகச் சிலரே! அவர்களுள் பத்திரிக்கை உலகுக்கும் பிறருக்கும்  முன்னோடியாகத் திகழ்ந்து நற்பெயர் பெற இந்த அரிய சந்தர்பத்தை நழுவ விடலாமா? சிந்திக்க வேண்டுகிறோம்.      

Monday, November 26, 2012

நாதஸ்வரத்திற்கு ஆபத்தா??


கேரளத்துக் கோயில்களுக்குச்  சென்று வந்தவர்களுக்கு ஒரு விஷயம் நன்றாகக் கவனத்திற்கு வந்திருக்கும். பாரம்பர்யம் எவ்வாறு அங்கு காப்பாற்றப்படுகிறது என்பதே அது. ஆண்கள் சட்டை அணிந்து செல்ல மாட்டார்கள். கோயில் கருவறையில் மின் விளக்கே இருக்காது. நெய் தீபமே சுடர் விட்டு எரியும். சன்னதியில் வீண் வம்பு அடிப்பவர்களைப் பார்ப்பது மிகமிக அரிது. கோயில் சுத்தத்தின் இருப்பிடமாக இருக்கும். குருவாயூர் போன்ற பிரபலமான கோயில்களிலும் பிராகாரத்தில் லட்டு கடையோ, பிற கடைகளோ இருப்பதைக் காண முடியாது. எல்லாம் கோயிலுக்கு வெளியில் தான். தூணுக்குத் தூண் , உண்டியல்களையும் காணோம்! அவர்களால் இக் காலத்திலும் எப்படி இவற்றைக் கடைப்பிடிக்க முடிகிறது என்று பார்த்தால், தெய்வத்தின் மீதும் , பாரம்பர்யத்தின் மீதும் அவர்கள் காட்டும் மதிப்பும் மரியாதையுமே காரணம் எனலாம்.

  தமிழகக் கோயில்களில் நிலைமை எப்படி இருக்கிறது என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. நாளுக்கு நாள் மாற்றங்கள் கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் நடக்கும் பூமி இது. கட்டுப்பாடு இல்லாமல் தறிகெட்டுப் போகும் போது இப்படித்தான் ஆகிவிடும். எதையும் மீறும் மனோபாவம் வந்துவிட்டால் கலாசாரமாவது ஒன்றாவது!

இங்கு சட்டை,கைலி, பேண்ட் என எதை வேண்டுமானாலும் அணிந்து கொண்டு ஆலயத்திற்குச் செல்லத் தடை ஏதும் இல்லை. கேட்டால் மனம் சுத்தமாக இருந்தால் போதும் என்று வாதம்  செய்வார்கள். தானே சாமிக்குத் தூபம், தீபம் முதலியன காட்டுவார்கள். நந்தியைக் கட்டிக்கொண்டு ரகசியம் பேசுவார்கள். பிராகாரத்தில் அமர்ந்துகொண்டு ஊர்க்கதை பேசுவதோ  கை வந்த கலை. பேசும் போது வெறும் வாயோடு பேசலாமா? தேவஸ்தான பிரசாதக்(?) கடைகள் தான் இருக்கின்றனவே, கொரித்துக் கொண்டே பேசுவதற்கு!

கோயில்களில் தானே நாம் மிகுந்த தமிழ் பற்று உடையவர்கள் என்று காட்டிக் கொள்ள முடியும்! வீட்டில் தேவார திருவாசக பாராயணம் செய்யாதவர்கள் கோயில்களில் சர்ச்சை  செய்வார்கள். பிற கோயில்களில் , மகா மண்டபத்தில் தேவாரம் ஒலிக்கப்படுவது போலத்  தில்லைக்  கோயிலிலும் ஒலித்தால் அதற்கு எதிர்ப்பு. சாமிக்குப் பக்கத்திலேயே சென்று பாடினால் என்ன என்று! இதெல்லாம் வேடிக்கையாகத் தோன்றவில்லை? தேவையற்ற காழ்ப்பு உணர்ச்சி வித்திடப்படுகிறது. கும்பாபிஷேகத்தைத் தமிழிலேயே, திருமுறைகளை ஓதிச் செய்தால் என்ன என்று சில பேர்கள் கிளம்பியிருக்கிறார்கள். திருமால் கோயில்களில் இதைத்  திவ்வியப் ப்ரபந்தம்  ஓதியபடியே செய்தால் என்ன என்று யாராவது கேட்கிறார்களா பாருங்கள்.

காலம் காலமாகப் போற்றப்பட்டுவந்த மேளம், நாதஸ்வரம் ஆகியவற்றிற்கும் இப்போது ஆபத்து வந்து விட்டது. கோயில்களில் நடக்கும் வைபவங்களில் கேரளத்து செண்டா வாத்தியக் காரர்கள் வரவழைக்கப் படுகின்றனர். தமிழகக் கிராமக் கலையான மேளமும் நாதஸ்வரமும் ஓரம்  கட்டப் படுகின்றன. அவற்றை வளர்த்ததே கோயில்கள் தான் என்பதை மறுக்கமுடியாது. ஒரு காலத்தில் , ஸ்வாமி புறப்பாட்டின் போது, நாதஸ்வரக் கலைஞர்கள் வாசிப்பதைக் கேட்க இரவு முழுதும் வீதிகளில் சங்கீத ரசிகர்கள் இருந்தார்கள்.

இப்பொழுது இவ்வளவு சங்கீத சபாக்கள் இருந்தும், நாதஸ்வரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுவதில்லை. தென்மாவட்டங்களில் திருமணங்களிலும் செண்டா வாத்தியம்தான் கொடி கட்டிப் பறக்கிறது. இந்த நிலை நீடித்தால் நாதஸ்வரம் வாசிப்பவர்களைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டி வந்து விடும். கேரள பூமியின் கலாசாரத்தை அவர்கள் காப்பாற்றுவதைப் போலத் தமிழகத்தின்  கலைகளைக் காப்பாற்ற வேண்டாமா?  பஞ்சமுக வாத்தியமும் பாரி நாயனமும் காட்சிப் பொருள்கள் ஆகி விட்டதைப் போல மேளமும் நாதஸ்வரமும் ஆகிவிடாமல் காப்பாற்றப் பட வேண்டும். யார் சொன்னால் எடுபடுமோ தெரியவில்லை. சொல்ல வேண்டியவர்கள் மௌனம் சாதித்துக் கொண்டே இருந்தால் ஒவ்வொரு பாரம்பர்யக் கலையும் நசித்துப்போய் விடும் என்பதில் சந்தேகமே இல்லை.
 

Thursday, November 22, 2012

சிவ முக்தி பெற்ற சீலர்


                                               சிவமுக்தி பெற்ற சீலர்  
          சிவபாதசேகரன், திருவாதிரையான் திருவருட் சபை, சென்னை.


 திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீன  23-வது மஹா சந்நிதானம் அவர்கள் சிவப்பேறு அடைந்துவிட்டார்கள் என்ற செய்தி, ஆதீன அன்பர்களுக்கு மட்டுமல்ல; அனைத்துச் சைவ உலகிற்கும் அதிர்ச்சியைத் தந்து,ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்திவிட்டது. சுமார் நாற்பது ஆண்டுகள் பீடாதிபதியாக இருந்தபோது, இவர்கள் செய்த சிவதர்மங்கள் கணக்கில் அடங்கா. ஆதீனக் கோயில்கள் பல திருப்பணி செய்யப்பட்டு நித்தியபூஜைகள் செவ்வனே நடைபெறலாயின. குருமூர்த்தங்களும், சந்தனாச்சார்யார்களின் அவதாரத்தலங்களும் திருப்பணி செய்யப்பட்டன. நூல்கள் பல அச்சடிக்கப்பெற்றன. இலவச வெளியீடுகள் அன்பர்களுக்கு அளிக்கப்பட்டன. கோசாலைகள் பராமரிக்கப்பட்டன. தமிழ்ப்புலவர்களும்,ஒதுவாமூர்த்திகளும், சிவாசார்யர்களும் கௌரவிக்கப்பட்டனர். சுமார் 150 இடங்களில் அன்னதானம் செய்யப்பட்டது. மாணவர்களுக்குக் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஆதரவற்றோர்களுக்கும்,நலிந்தோர்களுக்கும் நித்திய அன்னதானம்   செய்யப்பட்டது. மடத்துகோயில்களுக்கு மட்டுமல்லாமல் அறநிலையத்துறையின் கோயில்களின் திருப் பணிக்கும் கும்பாபிஷேகத்திற்கும் உதவி அளிக்கப்பட்டது. 

திருவாதிரையான் திருவருட் சபையின் பணிகளைக் கண்டு மிக்க மகிழ்வோடு, ஆக்கமும், ஊக்கமும்  தந்தவர்கள் ஸ்ரீ சந்நிதானம் அவர்கள். சின்னப்பட்டத்தில் இருந்தபோதிலிருந்தே, இவ்வாறு நம்மைப் பணி செய்ய ஊக்குவித்தவர்கள் இவர்கள். மிகவும் பிற்பட்ட நிலையில் இருக்கும் கிராமக் கோயில்களின் சிவாச்சார்யர்களுக்கு நமது சபை உதவி வழங்கும்போது, தாமும் இருவருக்கு உதவி வழங்கிய கருணை மனம் படைத்தவர்கள் நமது குருமூர்த்திகள். கடந்த ஆடி- சுவாதியன்று ஸ்ரீ கௌரி மாயூரநாத ஸ்வாமி ஆலயத்தில் சிவாகமத்தில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு ஆசி வழங்கியபோது, நமது சபை , ஆலய மடைப்  பள்ளிகளில் பணி புரிவோர்க்கு  உதவித்தொகை வழங்க முன்வந்தபோது, தாமும் இருவருக்கு, அதே நிகழ்ச்சியின் போது உதவி, நமக்கும் பொன்னாடை போர்த்தி, ஆசி வழங்கினார்கள். 


 திருத் தலையாலங்காடு ஸ்ரீ நர்த்தனபுரீச்வரர் ஆலய கும்பாபிஷேகப் பத்திரிகையை ஸ்ரீ மகா சந்நிதானத்தில்   சமர்ப்பித்தபோது, மிகவும் மகிழ்ந்தவர்களாக, கும்பாபிஷேக மருந்து முழுவதையும் அளிப்பதாகவும்,அதை இடிக்க ஆட்களையும் அனுப்பி வைப்பதாகவும் கூறினார்கள். " வேறு ஏதாவது தேவைப்படுமா?" என்று அவர்கள் கேட்டபோது ,அடியேன்,இக் கோயிலுக்கு ஸ்ரீ நடராஜ மூர்த்தியின் விக்ரகம் இல்லாதது குறையாக இருக்கிறது. ஸ்வாமி இங்கு முயலகன் மீது நடமாடியதாகத் தல வரலாறு கூறுவதாலும், ஆதீன பூஜா மூர்த்தி ஆனந்த நடராஜப் பெருமான் ஆனதாலும், மடத்தின் சார்பாக, மூன்று அடி உயரமுள்ள ஆடல்வல்லானையும், சிவகாம சுந்தரியையும் உபயமாக அளித்து அருளுமாறு வேண்டினேன். சற்றும் தாமதிக்காமல் , அதற்கான ஏற்பாடுகள் செய்ய மடத்து சிப்பந்திகளுக்கு உத்தரவிட்டு அருளினார்கள் என்பதை மிக்க நன்றியுடன் கூறிக்கொள்ளக்  கடமைப் பட்டிருக்கிறேன். ஆலய மகாகும்பாபிஷேகத்திற்கு வருகை தந்ததோடு, மண்டலாபிஷேகத்தன்று, ஆதீன உபயமாக, ஆடல்வல்லான், சிவகாமவல்லி,காரைக்கால் அம்மை ஆகிய மூர்த்திகளை வழங்கியதோடு, ஸ்ரீ நடராஜ மூர்த்தியின் ஆறு அபிஷேகங்களும் ஆதீன உபயமாக நடைபெறும் என்று அறிவித்தார்கள். தவிரவும், ஆலய சிவாச்சார்யாருக்கு ஒவ்வொரு மாதமும் உதவித்தொகை வழங்குவதாகவும் கூறிய கருணைத்திறம்  போற்றுதற்கு உரியது.

திருவாவடுதுறை ஆதீனம் சுமார் அறுநூறு ஆண்டுகளாகச் செய்துவரும், குரு- க்ஷேத்ர பரிபாலனங்கள் இவர்களது ஆட்சிக் காலத்தில் மேலும் வளர்ச்சி பெற்று, மக்கள் சேவையும் கூடவே சேர் ந்து அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றது. இந்நிலையில், அக்குருமூர்த்திகள் நம்மிடையே வழிகாட்டும் ஆசானாக இனி இல்லை என்பது துக்கத்தை மேலிடச் செய்கிறது. இனி, 24 - வது குருமூர்த்திகளாகப் பட்டமேற்பவர்களும் இக்குருபரம்பரையின் புகழை மேலோங்கச் செய்யவும், சைவ நெறி தொடர்ந்து தழைத்து ஓங்கவும், ஞானமா நடராஜப் பெருமானது குஞ்சித மலரடிகளை வணங்கிப் போற்றுவோமாக.  
   

Friday, November 9, 2012

ஒளி விளக்கு ஏற்ற வாருங்கள்.


ஒளி மயமான தீபாவளித் திரு நாளில் ஒலி மயமும் சேர்ந்துவிடுவதால்  குழந்தைகளின்  மகிழ்ச்சிக்குக்  கேட்கவா வேண்டும்?  பொழுது எப்பொழுது விடியப்போகிறது என்று ஆவலுடன்  இருப்பார்கள். தலை தீபாவளி கொண்டாடுபவர்கள் ,நடுத்தர வயதுக்காரர்கள், பெரியவர்கள் என்று ஒவ்வொருவரும் இம்மகிழ்ச்சியைப் பல விதமாகக் கொண்டாடினாலும்  சதுர்த்தசி தினமான தீபாவளியன்று விடியற்காலையில் தலைக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டு நீராடுவது எவ்வளவோ தலைமுறைகளாக நடைபெறுவதொன்று.சதுர்த்தசி , பரமேச்வரனுக்கு மிகவும் உகந்த நாள். அமாவாசைக்கு முன் வரும் சதுர்தசியை பிரதி மாதமும் மாத சிவராத்திரி யாகவும், மாசி மாதத்தில் வருவதை மகாசிவராத்திரி என்றும் கொண்டாடுகிறோம். தீபாவளியும் மாஸ  (ஐப்பசி மாத ) சதுர்தசியே. நடராஜப் பெருமானுக்கு ஆண்டு தோறும்  நிகழும் ஆறு அபிஷேகங்களில், மூன்று , சுக்ல பக்ஷ( வளர் பிறை)   சதுர்தசிகளில் ( ஆவணி, புரட்டாசி, மாசி  மாதங்களில்) நடைபெறுகிறது. தீபாவளியன்று செய்யும் ஸ்நானம் ,கங்கா ஸ்நானமாகக் கருதப்படுகிறது.

அவரவர்கள் தங்கள் சக்திக்கு ஏற்றபடி கொண்டாடிமகிழும் இந்த சமயத்தில் , சக்திக்கு மீறிய செலவுகள் செய்வதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். துணிமணிகளோ,பட்டாசுகளோ  என்ன விலை விற்றாலும் வாங்குவோர் ஏராளம். வயதானவர்கள் சிலர் மட்டும் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்ப்பார்கள். "காசைக் கரியாக்காதே" என்று முதியவர் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்! இப்படித் தாராளமாகச் செலவு செய்பவர்கள் , பிறருக்கு உதவுவதிலும் தாராளம் காட்டினால் நல்லது. இந்த வேளையில் ஏதாவது ஓரிரு குடும்பங்களில் தீபாவளி பிரகாசிக்கச் செய்யலாமே! 

நாம் மீண்டும் மீண்டும் கிராமக் கோயில்களைப் பற்றியும் அதில் பூஜை செய்பவர்களைப் பற்றியும் கவலைப் பட வேண்டியிருக்கிறது. ஏனென்றால் , ஆதரிப்போர் யாரும் இல்லாத சூழ்நிலைக்கு அவர்களில் பலர் தள்ளப்பட்டுள்ளனர். எத்தனை கோயில்கள் தீபாவளியன்றும் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன  என்பதை அறியும்போது , நாம் நமக்கு மட்டும் எதையும் குறைத்துக் கொள்ளாமல் , கோயிலைப் பற்றி அதிகம் கவலைப் படாமல் இருக்கிறோமோ என்று தோன்றுகிறது. யாராவது மனது வைத்துப் புது வஸ்திரங்கள் வாங்கிக் கொடுத்தால் உண்டு. இல்லாவிட்டால் , வழக்கமான எண்ணெய் பிசுக்கு ஏறிய பழைய வஸ்திரமே அன்றும் சார்த்த வேண்டியிருக்கிறது.  

நாம் எண்ணெய் ஸ்நானம் செய்வது போல் கோவிலில் இருக்கும் மூர்த்திகளுக்கும் எண்ணெய் ஸ்நானம் செய்வித்துப் புது வஸ்திரங்கள் சார்த்த வேண்டாமா? இந்த வருஷம், கிராமங்களில் உள்ள  ஐந்து சிவாலயங்களுக்குத்  தலா ரூ ஆயிரத்தை நமது சபை  வழங்குகிறது. இதனை ஏற்றுப் போற்றும் அன்பருக்குச் சிவனருள் பெருகுவதாக. இதில் ரூ 250 , கோயிலில் உள்ள எல்லா மூர்த்திகளுக்கும் தீபாவளியன்று சார்த்த உபயோகிக்கப்படும். மீதமுள்ள ரூ 750 , ஆலய அர்ச்சகருக்குத் தீபாவளியை முன்னிட்டு சம்பாவனையாக அளிக்கப்படுகிறது.   சாத்தனூர், திருமங்கலம் (குத்தாலம் அருகில்), கோட்டூர், திருக்களர், இடும்பாவனம் ஆகிய தலங்களின்  அர்ச்சகர்களுக்கு இத்தொகை அனுப்பப் பட்டுவிட்டது. பலரும் தமக்கு முடிந்த அளவில் இது போன்ற விசேஷ தினங்களில் ஆலயங்களுக்கும் அர்ச்சகர்களுக்கும் உதவ முன்வர வேண்டும்.ஒளி விளக்கு ஏற்ற வாருங்கள்.

"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்றபடி, நாம் மகிழ்ச்சியோடு தீபாவளி கொண்டாடும் இச்சமயத்தில், இன்னும் சிலர் முகங்களிலாவது மகிழ்ச்சியைக் காண வகை செய்யலாம் அல்லவா? 

Wednesday, October 31, 2012

பெண்மையைப் போற்றுவோம்



நண்பர் ஒருவர் தனக்கு வந்திருந்த வலைப்பதிவை அனுப்பியிருந்தார். சில பள்ளிக்கூடங்களில் பெண் குழந்தைகள் நெற்றிக்குப் பொட்டு வைக்காமலும் தலையை வாரிப் பின்னிக்கொண்டு பூச்சூடாமலும் வரவேண்டும் என்று நிர்வாகம் நிர்பந்திப்பதால் நமது பாரம்பர்யம் விலகிச் செல்வதைப் பற்றிய ஆதங்கம் அது. பள்ளிகள் அதுபற்றிக் கவலைப் படாத நிலையில், தங்கள் குழந்தைகள் எப்படியோ படித்தால் போதும் என்று பெற்றோர்கள் வேறு வழி இல்லாமல் இருந்துவிடும் நிலை. வீட்டிலாவது நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுப்போம் என்று சில பெற்றோர்கள் மனதைத் தேற்றிக் கொள்கிறார்கள். நண்பர் மீண்டும் ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார். அதை எழுதியவர் ஒரு பெண்மணி. 

ஆண்கள் நெற்றிக்கு எதுவும் இட்டுக்கொள்ளாதபோது பெண்கள் மட்டும் ஏன் இட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறார். பூக்கள் வைத்துக்கொள்வதும், வளை அணிவதும் அழகுபடுத்திக் கொள்வதற்காக மட்டுமே என்கிறார் அவர். ( பூங்குழல் நாயகி, கோல்வளை நாயகி போன்ற அம்பிகையின் பெயர்களை இப்போது நினைவுக்கு வரவழைத்துக் கொண்டு சங்கடப் படவேண்டாம்)  அவற்றை அணிவதால் ஏற்படும் பலனுக்கு உத்த்திரவாதம் எதுவும் இல்லையாம்.  "ஆண் ஆதிக்கம்" உள்ள சமுதாயத்தில்  ( ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர், முதலிய பதவிகளில் பெண்கள் சாதித்து இருக்கிறார்களே என்று கேட்கக் கூடாது)  விதவைப் பெண்களும் பொட்டு வைத்துக் கொள்வது அவர்களுக்குப் பாதுகாப்பு என்கிறார் இந்தப் பெண்.( பொட்டணிவதால் எந்தப் பலனும் இல்லை என்ற இவர் இப்படி மாற்றுக் கருத்து வழங்குவது ஏன் என்று புரியவில்லை.) 

ஒரு காலத்தில் திருமாங்கல்யமும் காலில் மெட்டியும் அணிந்து வந்த ஆண்கள் அவற்றைக் கைவிட்ட பிறகு பெண்கள் மட்டும் அவற்றைப் பின்பற்ற வேண்டுமா என்பது இவரது கேள்வி.ஆணுக்கும் பெண்ணுக்கும் விதிமுறைகளில் பேதம் ஏன் என்று கேட்கிறார் இவர். மேலும் ஆண்கள் தங்களது பாரம்பர்ய உடைகளை அணியாமல் பேண்டும் சட்டையும் அணியும் போது , பெண்களும் மாறினால் என்ன தவறு என்பது இவரது வாதம். ( உண்மை தான். அதற்காக ஆண்கள் செய்யும் தவறுகள் அத்தனையையும் பெண்களும் செய்யலாம் என்று பச்சைக் கொடி காட்டுவது போல் இருக்கிறது.) ஆண்களுக்கு விதிமுறைகள் எதுவும் இல்லையா- அவை கடலில் எறியப்பட்டு விட்டனவா என்று கேட்கிறார் இப்பெண்மணி.  பெண்களை ஆண்கள் குறை கூறிக்கொண்டு இருப்பதுபோல் ஏன் பெண்களும் ஆண்களின் குறைகளை எடுத்துக் கூறக் கூடாது என்கிறார்.(தாராள மாகக் கூறலாமே! இப்போது அப்படி யாரும் கூறவில்லை என்றா சொல்கிறீர்கள்?)   கோயில்களில் உள்ள பெண் வடிவங்களின் ஆடை அலங்காரங்கள் போல பிற பெண்களும் அணியும்போது ஏன் இவ்வளவு கூச்சல் என்கிறார். (உயிருள்ள வடிவங்கள் இவ்வாறு அணிவதால் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை இப்பெண்மணி மறந்து விட்டார் போலிருக்கிறது! வெளி நாட்டவர்களுக்கு மேலேழுந்தவாறு தோன்றுவதை எல்லாம் ஏற்றுக்கொள்வதோ மறுப்பதோ உங்கள் கையில் அல்லவா இருக்கிறது!) 

பல புருஷர்களைக் கொண்டவளைப் பதிவிரதை என்று புராணங்கள் சொல்லும்போது தற்காலத்தில் மட்டும் ஏன் அவ்வாறு செய்யத் தடை என வினவுகிறார்.( ஏக புருஷ விரதம் பூண்ட சீதா தேவி, அருந்ததி, அனுசுயா போன்ற பதிவிரதைகளையும், ஏக பத்தினி விரதம் பூண்ட ராமபிரானையும் பற்றிப் புராணங்களில் படித்திருப்பீர்களே!) எனவே, கடவுளர்களைவிடத் தற்கால இளைஞர்கள் பரிசுத்தமானவர்களாம்              ( எல்லோருமா அப்படி?) 

மேலே குறிப்பிட்ட கருத்துக்கள் அப்பெண்மணியின் சொந்தக் கருத்துக்களாக இருக்கலாம். காலம் எவ்வளவோ மாறிவரும் போதும் பெரும்பாலான பெண்மணிகள் நமது பாரம்பர்யத்தைக் காப்பாற்றி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. அதனால் தானோ என்னவோ பழைய காலம் முதல் இந்து மதம் அவர்களுக்குச் சிறப்பான ஸ்தானம் வழங்கியிருக்கிறது. புதியதாக ஒரு வீடு கட்டி, கணவன் மனைவியர் குடிஏறுவதாக வைத்துக் கொள்வோம். பெண்ணின் நக்ஷத்திரத்தை வைத்தே கிரகப்பிரவேச நாள் நிச்சயிக்கப்படுகிறது. அவளே வீட்டின் எஜமானியும் ஆவாள். "க்ரஹிணி" என்று அவளை மட்டுமே சொல்லும் சாஸ்திரம், ஆணை எஜமானனாகச் சித்தரிப்பதில்லை. அவள் உயிரோடு இருக்கும் வரையில்தான் கணவன் அக்னிஹோத்திரம் செய்ய உரிமை உண்டு. பெண் குழந்தைகளை உரிய பருவத்தில் கல்யாணம் செய்து கொடுத்து அவளுக்குப் பாதுகாப்பு அளிப்பது முக்கியமாகக் கருதப்பட்டது. வேலைக்கும் சென்று விட்டு, வீட்டு வேலையையும் செய்ய வேண்டும் என்று இரட்டைப் பாரம் தூக்குவது இக்காலத்தில் சரியாகப் பலருக்குப் படலாம். ஆனால் அவள் எந்தவிதக் கஷ்டமும் படக் கூடாது என்று கருணையோடு அவளை க்ரஹிணியாக அமர்த்தி ஆராதிததது அன்றைய சமுதாயம். 

பெண்ணுக்கு மட்டுமே வழங்கப்பெற்ற அங்கீகாரம் ஆண்களுக்கு அளிக்கப்படவில்லை. கற்பு என்பது இருபாலார்க்கும் தான். ஒப்புக் கொள்கிறோம். ஆனால் பெண் மட்டுமே கற்புக்கரசி என்றும் மங்கையர்க்கு அரசி என்றும்,பதிவிரதை என்றும் புகழப் படுகிறாள். கற்புக்கரசன் என்றோ ஆடவர்க்கரசன் என்றோ பத்தினி விரதன் என்றோஆண்களை யாராவது புகழக் கேட்டிருக்கிறோமா? தயை என்பது தாய்க்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்டது. தந்தைக்குத் தயை இல்லையா என்று கேட்க முடியுமா? இறைவனே தாயுமானவனாகத் தானே வந்தான்! 

நிறைவாக ஒரு முக்கியக் கருத்தையும் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தப் பெண்மணி இவ்வளவு எழுச்சி பெற வேண்டிய அவசியம் இல்லையோ என்று தோன்றுகிறது. எத்தனையோ வீடுகளில் பாரம்பர்யங்கள் காற்றில் விடப் படுகின்றன. பெற்றோர்கள் சொல்வதைக் கேட்காத குழந்தைகள் தன்னிச்சையாக இருக்கும்போது இப்பெண்மணி கவலையே பட வேண்டாம். அவரவர்களுக்குத் தங்கள் குழந்தைகள் அப்படி இருந்தால் மட்டுமே வலிக்கக்கூடிய விஷயம் இது. வாசலில் கோலம் போடுவதால் என்ன பிரயோஜனம் என்று கேள்வி கேட்கும் காலத்திற்கு ஏற்றபடி பலமாடிக் குடியிருப்புகள் வந்து விட்டன. ஒருவேளை நிரந்தரமாகக்  கோல- ஸ்டிக்கர் ஒட்டி விடுவார்களோ என்னவோ!     

பள்ளிக்கூடம் போவதற்கு முன்னாலேயே தன் குழந்தை சகலகலா வல்லவனாக வர வேண்டும் என்று பெற்றோர்கள் ஆசைப் படுகிறார்கள். அதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்கவும்  தயங்குவதில்லை . சிலர் தன்னுடைய  சக்திக்கு அப்பாற்பட்டும் செலவழிக்கிறார்கள். அக்குழந்தை வளர்ந்து பெரியவனாகி, வேறு வழியில் செல்லும்போது அப்பெற்றோர் படும் வேதனை இருக்கிறதே, அதை மற்றவர்களால் எப்படி உணரவோ சொல்லவோ முடியும்? 

முன்னோர்கள் சொன்னதை மூடத்தனம் என்று சொல்பவர்கள் அவற்றை எளிதாகக் கைவிட்டு விட முடியும். அதற்கு அதிக நாள் தேவைப் படாது. நல்ல பாதை வகுத்துக் கொடுத்த அவர்களை உதாசீனப்படுத்திவிட்டு, நமக்கென்று தனி வழி வகுக்கத் துடிக்கும் ஆண்களும் பெண்களும் அதன் விபரீத பலன்களைப் பற்றி சிந்திப்பதில்லை. பெண் சுதந்திரம் பற்றி பேசுபவர்கள், அவர்களுக்குத் துன்பம் வரும் போது விலகிப் போய் விடுவார்கள். அப்போதுகூட, எல்லாவற்றையும் மறந்து மன்னித்து அரவனணப்பவர்கள் பெற்றோர்கள் மட்டுமே என்பதைப் பிற்காலத்தில் உணருவார்கள். 

முன்பெல்லாம் ஆணுக்குப் பெண் நிகர் என்று சொல்லி வந்தார்கள். இது ஒன்றும் புதியதாகச் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் அல்ல. அர்த்தநாரீச்வரனாக இறைவன் காட்சி வழங்குவது "தொன்மைக் கோலம்" (எந்த யுகத்தில் நடந்தது என்று யாரால் சொல்ல முடியும்?) என்கிறார் மாணிக்க வாசகர். வேண்டுமானால் ஆணைக காட்டிலும் பெண் அதிகம் (உயர்ந்தவள்) என்று கூடச் சொல்லிக் கொள்ளலாம். அவ்வாறு பட்டி மன்றத் தீர்ப்புக்கள் வழங்கக் கூடும். என்னதான் உண்மைகள் இவ்வாறு சொல்லப்பட்டிருந்தாலும் நாம் தாழ்ந்துவிட்டோம் என்று சொல்லும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இறைவனுக்கு ஒரே ராத்திரி பூஜை(சிவ ராத்திரி) இருந்தும் இறைவிக்கு நவராத்திரி கொண்டாடுவதும் ஒரு தத்துவமே. அம்பிகையை "அபின்ன நாயகி ,பாகம் பிரியாள்,பிரியாவிடை என்றெல்லாம் பெயர்கள் இட்டு இறைவனோடு சேர்த்துத் தோடுடைய செவியனாகத் தானே பார்க்கிறோம். "எம் பிராட்டியும் எம் கோனும் எம் இல்லங்கள் தோறும் எழுந்தருள வேண்டும்" என்று திருவாசகம் வேண்டுகோள் விடுத்தபடி, வாழ்க்கையைப் புரிந்துகொண்டு, நம்மால் முடிந்த அளவாவது நமது நெறிமுறைகளைப் பின்பற்றினால் பயன் அடையப் போவது நாம் தானே. அந்த அம்மணி சொன்னது போல பலனே இல்லாமல் போனாலும் பின்பற்றுவதால் நஷ்டம் எதுவும் இல்லை என்பது மட்டும் நிச்சயம். 

Saturday, October 20, 2012

சுய நிதிக் கோயில்கள்


சில சமயங்களில் ஏற்கனவே பலமுறை சொன்னதையே  திரும்பவும் சொல்ல வேண்டியிருக்கிறது. முதல் தடவை சொன்னபோது இரண்டு பேர் காது கொடுத்துக் கேட்டார்கள் என்றால் , இன்னொரு முறை சொன்னால் வேறு இரண்டுபேர் கேட்க மாட்டார்களா என்ற எண்ணத்தால் இப்படித் திரும்பத்திரும்ப சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இந்தக் காலப் பேச்சாக , "அரைத்த மாவையே அரைக்கிரார்கள்" என்று வேண்டுமானால் சொல்லி விட்டுப் போகட்டும். ஆனால், சொல்ல வேண்டிய தருணங்களில் சொல்ல வேண்டியவைகளை  சொல்லாமல் "நமக்கேன்" என்று மட்டும் இருந்துவிடக் கூடாது. கேட்டால், "சும்மா இருப்பதே சுகம்" என்று விவேகமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு சம்பந்தமில்லாமல் பதில் சொல்கிறோம்.
நல்லதைக் கேட்பவர்கள் இல்லையோ என்று நமக்குள் பலபேருக்கு சந்தேகம் வரலாம். சொல்கிறபடி சொன்னால் கேட்பவர்கள் கண்டிப்பாக இருக்கத்தான் செய்வார்கள்.இதில் துளிக்கூட சந்தேகம் இல்லை. ஆனால் ஒன்று: சொல்பவன் சுயநலம் இல்லாமல் சொல்ல வேண்டும் என்பதே முக்கியம். அவனது வார்த்தைகளில் கேட்பவனுக்குமுதலில்  நம்பிக்கை ஏற்படவேண்டும் ஆகவே, அந்த அளவுக்குத் தன்னை உயர்த்திக்கொண்ட ஒருவனையே மக்கள் மதிப்பார்கள்.

கிராமங்களில் யாத்திரை செய்யும்போது, அங்கு மக்களை நல்ல பாதையில் சுய நலமில்லாமல் வழி நடத்துபவர்கள் மிகவும் குறைந்து விட்டதால், மக்கள் தன்னிச்சையாகச் செயல் படுவதைக் காண்கிறோம்.தீய வழிகளில் பணம் சம்பாதிப்பவர்களைப் பார்த்துத் தாமும் குறுக்குவழியில் குறுகிய காலத்தில் சம்பாதிக்க முனைகின்றனர். மற்றவர்களோ,அவர்களைப் பார்த்துக் குமுறத்தான் செய்ய முடிகிறது. மற்றவர்களை ஏமாற்றிப் பொருள் சம்பாதிக்கவும் துணிந்து விட்டனர். கோயில்களின் நிலையோ பரிதாபத்துக்கு உரியது. கோயில் இடத்தில் வீடுகளில் பரம்பரையாக வசிப்பவர்கள் , முப்பாட்டன் காலத்தில் கொடுத்துக் கொண்டிருந்த அந்த அற்ப வாடகையைக் கூடக் கோயிலுக்குச் செலுத்துவதில்லை. சென்னையிலும் பிற ஊர்களிலும் இவ்வாறு வாடகை பாக்கி , பல கோடிகள் என்று பத்திரிக்கைகளில் செய்தி வருகிறது. அவ்வாறு  வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் பெயர்களை  அந்தக் கோவில்களில் எழுதி வைத்திருக்கிறார்களாம். இதைப் பார்த்தாவது, வாடகையைக் கொடுக்க முன் வருவார்களா பார்ப்போம்.

கோவிலுக்குச் சொந்தமான விவசாய நிலங்களில் இருந்து தரவேண்டிய குத்தகைப் பாக்கியை வசூலிக்க என்ன செய்யப்போகிறார்கள்? பெயரை எழுதி வைத்தால் அவர்கள் கவலைப் படப் போவதாகத் தெரியவில்லை. கோர்ட்டுக்குப் போனால் முடிவு தெரிய பல ஆண்டுகள் ஆகும். அதுவரையில் அனுபவிப்போமே என்று இருக்கிறார்கள் குத்தகைக் காரர்கள். அவர்களைத் தெய்வம் மட்டுமே திருத்த முடியும். மழையே பெய்யாமல் இருந்துவிட்டால் என்ன செய்ய முடியும்? வறண்டுபோன நிலத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருக்க வேண்டியது தான். இந்த ஆண்டு அப்படித்தான் நிகழ்ந்து இருக்கிறது. காவிரியும் பொய்த்து விட்டது. இப்பொழுதாவது தவற்றை உணர்ந்து திருந்துவார்களா? மழை பெய்தால் ஆறு வேலி நிலமும் , வெள்ளம்  நின்றால் ஆறு வேலி நிலமும் தருவதாக வேண்டிக் கொண்ட ஏயர்கோன் கலிக்காம நாயனார், திருப்புன்கூர் இறைவன் அவ்வண்ணமே அருளியபடியால், தன் பிரார்த்தனையை நிறைவேற்றினார். இக்கால விவசாயிகள் அதுபோல் நிலம் தரும் தாராள மனத்தவர்களாக இல்லாவிட்டாலும் , குறுவைப் பயிர்  நன்றாக விளைந்தால் , கோவிலுக்கு உரிய நெல்லை முழுவதுமாகத் தருவார்களா?

குளங்களும் பிற நீர்நிலைகளும் ஆக்கிரமிக்கப் படுகின்றன. பல கிராமக் கோவில்களுக்கு உள்ளேயே வீடுகள் கட்டி இருக்கிறார்கள். தவறைச் சுட்டிக் காட்டுவோர் யாரும் இல்லாததால் , இறைவனே ஏதாவது வழியில் உணர்த்தியாக வேண்டும்
.
ஒவ்வொரு கோவிலும்  ஒரு நிர்வாக அதிகாரியின் பொறுப்பில் உள்ளது. கோவிலுக்கு வருமானம் இல்லாவிட்டால் அந்தக் கோவிலின் பக்கமே அவர் திரும்பிப் பார்ப்பது கிடையாது. தப்பித் தவறி அக்கோவிலைத் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் செய்பவர்கள் யாராவது முன்வந்தால் , கும்பாபிஷேகப் பத்திரிகையில் எல்லா அதிகாரிகளின் பெயர்களும் அச்சிடப்பட்டிருக்கிறதா என்று பார்ப்பதில் முனைப்பாக இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் கோவில் சார்பில் மரியாதை வேறு செய்ய வேண்டுமாம்! அற்ப சம்பளம் வாங்கும் சிப்பந்திகளுக்கு மாதக் கணக்கில் பாக்கி வைத்திருக்கும் இவர்களுக்குக் கண்டிப்பாக மரியாதை செலுத்தியே ஆகவேண்டும்.

இந்த நிலைக்கு யார் காரணம்? மக்கள் தான் என்று நிச்சயமாகக் கூறலாம். நாம் அக்கறை இல்லாமலும் தட்டிக் கேட்காமலும் இருந்துவிட்டால் , விளைவுகள் இப்படித்தான் இருக்கும். விமானத்தின் மீது செடிகள் முளைக்கும் போதே பிடுங்கி எறியாமல் இருந்துவிட்டு, அதுவே பெரிய மரமாக வேரூன்றியபின் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது போலத்தான் இதுவும்.இவ்வளவையும் பார்க்கும் பொது, அறநிலையத்துறை அவசியமா என்று யார் கேட்கப் போகிறார்கள்?  குறைந்த பட்சமாக, அத்துறையை அரசின் தலையீடு இல்லாமலாவது செய்யலாம் அல்லவா? சுயநிதிக் கல்லூரிகள் இருக்கும்போது, சுயநிதிக் கோவில்களை உருவாக்குவதில் என்ன தவறு இருக்க முடியும்?  

Sunday, September 23, 2012

கற்றதனால் விளையும் பயன் என்ன ??

கல்வி எல்லோருக்கும் வேண்டியது தான். அதில் எந்தவிதமான அபிப்ராய பேதமும் இருப்பதற்கு இல்லை. கல்வி என்பது கண்ணுக்கு சமம் என்று ஔவையார் சொன்னதை ,("எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் ") என்று பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுத்ததை நம்மில் சிலர் இன்னமும் ஞாபகம் வைத்திருக்கலாம். அந்தக் கல்வி எப்படிப்பட்டதாக இருந்தால் சிறப்பு என்பதே கேள்வி. அதற்கு விடையாகத் திருவள்ளுவர், " இறைவனது திருவடிகளைத் தொழ கல்வி எதுவாகாவிட்டால் கற்றதனால் விளையும் பயன் என்ன என்று கேட்கிறார்
 
என்ன படிப்பு படித்தால் கை நிறைய சம்பாதிக்கலாம் என்று யோசிக்கும் காலத்தில் வேத பாடசாலைகளிலும் ஆகம பாடசாலைகளிலும் படித்தவர்களுமே இவ்வாறு சம்பாத்தியத்தைப் பற்றியே நினைக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. தாம் கற்றதை வைத்துக்கொண்டு வெளி நாட்டில் போய் சம்பாதிக்க நினைப்பவர்களும் உண்டு. ஒரு வேளை உள் நாட்டில் இருந்தாலும் , பாராயணம் , ஹோமம், கும்பாபிஷேகம், கிரகப்பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு "கை நிறைய" சம்பாதிப்பதையே விரும்புகிறார்களே தவிர, கிராமக் கோயில்களில் நித்ய பூஜை செய்ய முன் வருபவர்கள் குறைவாக இருப்பது வருந்தத் தக்கது. அற நிலையத்துறை தரும் சொற்ப சம்பளமும் உள்ளூரில் ஆதரவு இல்லாததும் இந்த எண்ணத்தை மேலும் அதிகரிக்கச் செய்கின்றன.

நாம் கஷ்டப்பட்டது போல நம் குழந்தைகளும் கஷ்டப் படக் கூடாது என்ற எண்ணத்தில் , சிரமப் பட்டாவது தங்களது குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள். கோயில் பூஜைகள் நசித்துப் போவதற்கு இது முதல் படி. பெண்களையும் படிக்கவைத்துவிட்டு அதற்கு ஏற்ற வரனைத் தேடும் போது கோயில் பூஜை செய்யும் பையன்களை விரும்பாமல் வேலையில் இருக்கும் பையனைத் தேடுகிறார்கள். இதனால் (கோயில் பூஜை செய்யும் பையனுக்குப் பெண் கொடுக்கத் தயங்குவதால்) பையன்களுக்குக் கல்யாணம் ஆவது மிக மிகக் கஷ்டமாகி விடுகிறது. கிராமத்துப் பையனுக்குப் பெண்ணைக் கொடுக்கவும் தயக்கம் காட்டுகிறார்கள்! கிராமக் கோயில் பூஜைகள் நசித்துப் போவதற்கு இது இரண்டாவது படி. கிராமத்தில் வசிப்பவருக்கும் ,நகரங்களில் வசிப்பவருக்கும் , இக்கால வசதிகளுக்கு ஆசைப் படுவதில் வித்தியாசம் எதுவும் இல்லை. நகரங்களின் நெரிசலையும் பொருட் படுத்தாமல் குடியேறும் கிராமத்தினர் ஏராளம். நகரத்தில் குடியேறினால் வசதிகளும் வருமானமும் பெருகும் என்ற எண்ணமே இருக்கிறது. கிராமத்தில் சொந்த வீடு இருந்தாலும், நகரத்தில் வாடகை வீடுகளில் இருப்பதையே பெருமையாகக் கருதுகிறார்கள். கிராமக் கோயில் பூஜைகள் நசித்துப் போவதற்கு இது மூன்றாவது படி.

வங்கிகள் கல்விக்கடன் தரத் தயாராக இருப்பதால் எல்லோரும் என்ஜினீயர் ஆகத் துடிக்கிறார்கள். இது ஒன்று மட்டுமே கெளரவம் தரும் தொழிலாக நினைக்கிறார்கள். அப்படி எஞ்ஜினியர்களாக ஆன பிறகு கோயில் பூஜை பக்கம் திரும்பிப் பார்ப்பது சாத்தியமா? மற்றத் தொழில்களும் இதே போல் பாதிக்கப் பட்டுள்ளன. விவசாயிகளோ, நெசவாளிகளோ,கொத்தனார்களோ,தச்சர்களோ, எந்தத் தொழில் செய்தவர்களாக இருந்தாலும் , தங்கள் குழந்தைகளை அதே தொழிலைச் செய்வதை விரும்புவதில்லை. மாறாக,அவர்களைக் கஷ்டப்பட்டாவது படிக்க வைத்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனால் பல இடங்களில் வேலை செய்ய ஆட்கள் கிடைப்பது சிரமமாக இருப்பதை அனைவரும் அறிவார்கள்.

இதை எல்லாம் யாரால் சரி செய்ய முடியும்? அரசாங்கம் தான் பதில் சொல்ல வேண்டும். வோட்டுக்காக மக்களைப் பிரிப்பதை நிறுத்திக்கொண்டு, சமூக சீர்திருத்தம் செய்ய முனைய வேண்டும். பாரபட்சம் பாராமல் நடந்து கொண்டால் அவரவர்கள் தங்கள் தொழிலை மறக்காமல் இருக்க முடியும். என்ஜினீரிங் கல்லூரிகளை நிறுவியது போதும். பிற தொழில்கல்லூரிகளையும், விவசாயத்தையும் ஊக்குவிக்க வேண்டும்.

கோவில் நிலங்களையும் அவற்றின் குத்தகை பாக்கியையும் வசூலித்துத் தராவிட்டால் அறநிலையத் துறை இருந்தும் என்ன பயன்? அவ்வாறு நெல்லும் சம்பளமும் முறையாகக் கொடுக்கப் பட்டால் அர்ச்சகர்கள் வேறு தொழிலுக்குத் தாவாமல் இருப்பார்கள் அல்லவா? இன்னும் எவ்வளவு காலம் தான் நகரங்களில் குடியேற இடம் கிடைக்கும்? அரசுப் பொறுப்பில் இருப்பவர்கள் சிந்தித்துச் செயல் பட வேண்டும். எதுவும் செய்து கொடுக்காவிட்டால் கிராமங்கள் எப்படி முன்னேறும்? நகரங்களுக்கு இணையாக அங்கு வருமானமும் வசதிகளும் பெருகினால் மட்டுமே நகரங்கள் ஜனத்தொகைப் பெருக்கத்திலிருந்து தப்பிக்க முடியும். வயல்கள் வானம் பார்த்த பூமியாக ஆகிவிட்ட பிறகு, பிளாட் போட்டு விற்பவர்களுக்கும், நதிகளில் மண்ணை அள்ளுபவர்களுக்கும், மலைப் பாறைகளை உடைத்துக் காசாக்குபவர்களுக்கும் கொண்டாட்டம் தான். இதைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் எல்லோருக்கும் கல்வி என்று முழங்கிக்கொண்டிருந்தால் , படிப்பை முடித்தவர்கள் கிராமப் பக்கமே தலை வைத்துப் படுக்கப் போவதில்லை. பணத்தை எண்ணுவது எப்படி என்ற ஆலோசனையில் மூழ்க ஆரம்பித்து விடுவார்கள். கோயில் பூஜைகள் மட்டுமல்ல. நமது பாரம்பர்யத்தையே குழி தோண்டுவதாக அமையும் அபாயம் உருவாகியிருக்கிறது. அதைச் சரி செய்ய இதுவே கடைசி சந்தர்ப்பம். செய்யப்போகிறார்களா பார்க்கலாம்.

Tuesday, September 18, 2012

கோயில் கட்டணங்கள்


உண்டியல் என்றால் என்னவென்று தெரியாமல் இருந்த சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் அறநிலையத் துறை நுழைந்ததும் செய்த முதல் வேலை, உண்டியல் அமைத்ததுதான்! எங்கும் வசூல்,எதிலும் வசூல் என்பதைத்தான் காண நாம் பழகிவிட்டோம் இல்லையா? நுழைவு கட்டணம், சிறப்பு தரிசனக் கட்டணம், அர்ச்சனை கட்டணம், அபிஷேக கட்டணம், மொட்டை அடிக்கக் கட்டணம், காது குத்தக் கட்டணம், கல்யாணம் செய்ய கட்டணம், தேர் இழுக்கக் கட்டணம் என்று எத்தனையோ வகையான கட்டணங்கள்! இவ்வளவும் போதாதுஎன்று மூலைக்கு மூலை ஆள் உயர  உண்டியல்கள். அதில் மட்டுமே எவ்வளவு வகை தெரியுமா? பிரார்த்தனை உண்டியல், திருப்பணி உண்டியல், தேர் கட்டுமான உண்டியல், விமானத்தில் தங்க/வெள்ளி கலசம் பொருத்த உண்டியல், அன்னதான உண்டியல் என்று இப்படிப் பலவகைகளைக் காண்கிறோம்.

தர்ம தரிசனம் என்பது பெரிய கோயில்களில் ஏதோ "தர்மத்துக்காக " நடப்பதைப் போலத் தோன்றுகிறது. கட்டணம் செலுத்தி நீண்ட வரிசையில் நின்று பழகிப் போனவர்களுக்குத் தரும தரிசனத்தில் கால் கடுக்க நிற்பவர்களைப் பற்றி நினைவு கூட வருவதில்லை. சன்னதியை மறைத்துக் கொண்டு நிற்பார்கள். கட்டணம் செலுத்தியதால் தெய்வத்தையே விலை கொடுத்து வாங்கி விட்டதாக நினைக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை.மதுரை, ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்குச் சென்றவர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.

ஊரின் பெயரை சொல்லாமல் விஷயத்துக்கு மட்டும் வருவோம். அந்தக் கோயிலில் கட்டுமலை மீது இருக்கும் முக்கிய சன்னிதி எத்தனையோ ஆயிரம் குடும்பங்களுக்குக் குலதெய்வ சன்னிதியாகக் கருதப்படுவது. படிக்கட்டுக்கள் மேல் ஏறிச்  சென்று தரிசிக்க வேண்டுமானால் ஐந்து ரூபாய் செலுத்த வேண்டும். வெளியூர் காரர் இதைப் பற்றிக் கவலைப் படப் போவதில்லை. உள்ளூர் பக்தர்கள் தினமும் தரிசிப்பது சாத்தியமில்லாமல் போய் விடுகிறது. கீழே நின்றபடியே விமானத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டு பிராகாரத்தை வலம் வருகிறார்கள்.

இதற்கு நடுவில், சந்நிதியை மறைத்துக் கொண்டு சஷ்டியப்த பூர்த்தி, சீரியல் ஷூட்டிங் ஆகியவற்றை செய்ய அனுமதி வழங்குவதன் மூலம் வரும் வருமானம் வேறு. பரிகாரத் தலங்களில் கோயிலுக்கு வெளியில் கார், வேன் ஆகியவற்றை நிறுத்தப் பத்து ரூபாய் முதல் இருபது ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். கேட்டால் கோயில் நிர்வாகம் அதற்குக் "காண்ட்ராக்ட்" விட்டிருப்பதாகக்  கூறுகிறார்கள்.

வழக்கம் போல இந்த ஆண்டும் குல தெய்வமான சுவாமிமலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப் போனபோது ஆலயக் கட்டணங்கள் அதிகரித்து விட்டதாகச் சொன்னார்கள். 750 ரூபாயாக இருந்த அபிஷேகக் கட்டணம் 1500 ரூபாயாக உயர்த்தப் பட்டு விட்டது. இப்படி உயர்த்திக் கொண்டு போக  வேண்டிய அவசியம் என்ன  என்று புரியவில்லை. நிர்வாகச் செலவுகள் அதிகரித்து விட்டதாகச்  சொல்வார்கள் போலும்! நிர்வாக அதிகாரி ,துணை/இணை கமிஷனர் போன்ற அதிகாரிகளின் சம்பளம் வேண்டுமானால் உயர்ந்து கொண்டே போனாலும், ஆலய சிப்பந்திகளின் சம்பளம் சொல்லிக் கொள்ளும் அளவில் உயர வில்லையே! உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் பணம், ஆபரணங்கள் முதலியவை முறையாகச் செலவழிக்கப் படுகின்றனவா? இல்லாத கோயில்களின் திருப்பணிக்குக் கொடுக்கப்படுகிறது என்பார்கள். உண்மை என்ன என்றால் அது போன்ற "இல்லாத" கோயில்களுக்கும் திருப்பணிக்கு ஆகும் செலவில் ஒரு பகுதி மட்டுமே வழங்கப்படுகிறது. கும்பாபிஷேக செலவுகளுக்கு ஒரு துரும்பு கூட நகர்த்தப் படுவதில்லை. நன்கொடையாளர்களே இதையும் ஏற்றுக் கொண்டால் தான் கும்பாபிஷேகம் செய்ய முடியும் என்ற நிலை.

"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்று அன்னதானத்தின் பெருமை அந்தக் காலத்தில் பேசப் பட்டது. தற்கால உண்டியோ (உண்டியலோ) கோயிலுக்கு வருமானத்தைப் பெருக்கும் நோக்கத்தோடு மட்டும் அமைக்கப் பட்டுள்ளதாகக் கருத வேண்டியிருக்கிறது. ஆள் உயர உண்டியல்களை நிரப்ப நாம் தயாராக இருக்கும் போது அமைத்தவர்களுக்கு என்ன கவலை? உண்டியல் வருமானம் சொற்பமே உள்ள கோயில்களைப் பற்றியும் எவ்வளவு பேர்  கவலைப் படப் போகிறார்கள் ?  

Saturday, September 1, 2012

ஆலய பராமரிப்பு


கோயில் பராமரிப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நித்திய பூஜைகள் ஆகம விதி முறைகளோடு நடத்தப்பெறுவதும் ஆகும். ஆலய  விமானங்களிலும் கோபுரங்களிலும் ப்ராகாரங்களிலும் எத்தனையோ ஆண்டுகள் புதர் மண்டிக் கிடந்தாலும் , அவற்றை நீக்க வேண்டும் என்ற எண்ணமே திருப்பணி செய்யும்போது தான் வருகிறது. மாதம் ஒரு முறை சிறு செடிகளாக இருக்கும் போதே அவற்றை மிக எளிமையாக நீக்கி விடலாம். அலட்சியத்தால் இவை பெரிய மரங்களாக வேரூன்றி மாரிக்காலத்தில் நன்கு வளர்ந்து, கோயிலில் பல இடங்களில் பிளவுகளை உண்டாக்கிய பிறகு தானே நாம் விழித்துக் கொள்கிறோம்! அந்த சமயத்தில் இம்மரங்களை அகற்றுவது சுலபமான வேலை இல்லை. பழைய கட்டமைப்பை அகற்றிவிட்டு, மரத்தை வேரோடு வெளியே எடுத்துவிட்ட பிறகு, மீண்டும் பழையபடியே  அவ்வமைப்பைக் கட்ட வேண்டியிருக்கிறது. இதற்கு ஆகும் செலவை நாம் முன்நடவடிக்கை எடுப்பதால் தவிர்க்க முடியும். உழவார மன்றங்கள் பல அரும் பணி ஆற்றியும் , எதிர் பார்த்த பலன் இல்லை. மரங்களை முழுவதுமாகக் கட்டிடத்திலிருந்து  வேரோடு நீக்காமல் வெட்டுவதால் அவை அழிக்கப்படுவதில்லை. மாறாக, அடுத்த மழை ஆரம்பித்த உடனேயே, அவை ஆக்ரோஷமாக வளர ஆரம்பித்து விடுகின்றன.

விமானங்களிலும் கோபுரங்களிலும் வேரூன்றிய மரங்களை அழிக்க ஒரு கெமிக்கல் , சென்னை நிறுவனம் ஒன்றால் ஸ்ரீ ரங்கம் கோயிலுக்கு வழங்கப்பட்டதாகச் செய்தி வந்துள்ளது. இது பற்றிய விவரங்கள் உறுதி செய்யப்பட பின்னர், நமது சபை , பரிட்சார்த்தமாக ஒரு கோயிலில் பயன் படுத்தி , மரங்கள் அழிவதை உறுதி செய்தபிறகு, பிற ஆலயங்களிலும் இப்பணியைச் செய்ய எண்ணியுள்ளது. ஆயிரக்கணக்கான ஆலயங்கள் இருக்கும்போது ஏதோ ஒரு சிலர் மட்டும் இதைச்செய்ய முன் வந்தால் போதாது. பல ஆலயங்கள் அழிவிலிருந்து காப்பாற்றப் பட வேண்டும் என்ற உத்வேகத்துடன் நம்மில் பலர்  செயல் பட்டே ஆக வேண்டும்.

கோயிலைப் பராமரிப்பது போலவே, ஆலய பூஜைகள் எக்குறையும் இல்லாமல் நடைபெற வகை செய்ய வேண்டும். ஆலயப் பணியாளார்கள், அறநிலையத்துறை தரும் சொற்ப சம்பளத்தில் வாழ்க்கை நடத்துவது மிகக் கடினம் என்று அரசாங்கத்திற்குத் தெரிந்தும் அர்ச்சகர்களுக்கு முறையாகப் போதிய சம்பளம் தரப்படுவதில்லை. ஆன்மீக அன்பர்கள் பலர் தாமே முன்வந்து தம்மால் இயன்ற உதவியைப் பல இடங்களில் செய்து வருகிறார்கள். கிராமங்களில் இருக்கும் பல பாடல் பெற்ற தலங்களில் அர்ச்சகர்கள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. இந்நிலையில் , திருவாவடுதுறை ஆதீனம் இவ்வாலயங்களுக்கு அர்ச்சகர்களை ஏற்பாடு செய்து, நித்திய பூஜை நடைபெறச் செய்வது பாராட்டுக்கு உரியதாகும். சிவாகம நெறிகளையும், தெய்வத் தமிழையும், புரந்து வரும் ஆதீனத்தை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும் .

திருவாவடுதுறை ஆதீனம் , நந்தவனங்களைப் பராமரிப்பதில் தனிக் கவனம் செலுத்துவதை, நேரில் கண்டவர்கள் அறிவார்கள். சமீபத்தில், தலையாலங்காடு என்ற பாடல் பெற்ற தலத்தில் மண்டலாபிஷேகப் பூர்த்தி விழாவை முன்னிட்டு, ஆதீனத்திலிருந்து பணியாட்கள் உழவாரப் பணிக்காக அனுப்பப் பெற்றனர். அவர்களே, பூச் செடிகளை நட்டுவிட்டு, நீர் ஊற்றினார்கள் என்பதை நேரில் கண்டபோது மனம் நன்றி கூறியது.

ஆதீனத்தின் ஆன்மார்த்த மூர்த்தி ஸ்ரீ ஆனந்த நடராஜப் பெருமான் ஆனதால், கூத்தப்பெருமான் , சிவகாமவல்லி ஆகிய மூர்த்திகளை ஸ்ரீ மகா சந்நிதானம் அவர்கள் இக் கோயிலுக்கு அருட் கொடையாக வழங்கி, பெருமானின் ஆறு அபிஷேகங்களையும் திரு மடமே ஏற்கும் என அறிவித்ததுடன், பிரதிஷ்டைக்கும் தாமே நேரில் வந்து கலந்து கொண்டு அன்பர்களை ஆசீர்வதித்தார்கள். அவர்களுக்கு சைவ உலகம் நன்றி செலுத்தும் கடப்பாடு உடையது.

சிவாலயங்களில் முறைப்படி பூஜைகள்  நடக்க வேண்டும் என்பதால் , பூஜை நின்றுபோன கோயில்களில் அதை மீண்டும் துவக்கும் எண்ணத்துடன்,அண்மையில் ஒரு தமிழ் நாளிதழில் அர்ச்சகர்களை  இதற்காக விண்ணப்பிக்க வேண்டி ஆதீனம் கேட்டுக்கொண்டுள்ளது.பிறருக்கு முன்னோடியாகத் திருவாவடுதுறை ஆதீனம் இவ்வாறு முனைந்துள்ளது அனைவராலும் வரவேற்கத்தக்கது.

வெளியூர் அன்பர்களும், ஆதீனங்களும் இத்தனை தூரம் உதவ முன்வந்துள்ளபோது, உள்ளூர் அன்பர்களும் தங்களால் ஆன ஒத்துழைப்பைத் தருவதோடு, வழிபாட்டில் கலந்துகொண்டு, ஆலயம் சீரும் சிறப்புமாகத்திகழ வகை செய்ய வேண்டும் என்று வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம்.
திருக்குளத்தைத் தூர் வாரும் பணியையாவது உள்ளுர் அன்பர்கள் ஏற்றுப் போற்ற வேண்டும். இதனால்,  வடிகால்கள் மூலம் நீர் குளத்தில் விடப்பட்டு நிலத்தடி நீர் வளம் பெறுமாதலால், பஞ்சாயத்துக்கள் இதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். வெய்யில் காலத்தில் குளம் வறண்டு கிடக்கும் போது, நிலங்களில் வேலை செய்பவர்கள் ஊதியம் பெறவும் இதன் மூலம் ஏற்பாடு செய்யலாம் அல்லவா? நூறு நாள் வேலை என்கிறார்களே, அதில் ஒன்றாகத் தூர் வாரும் இப்பணியை மேற்கொள்வதால் ஊரும்  நலம் பெறும். சிவ புண்ணியமும் கை கூடும்.

Thursday, August 16, 2012

கணபதியின் கருணை மழை


சித்தர் பூமியில் அன்றும் இன்றும் அதிசயங்கள் நடக்கத்தான் செய்கின்றன. வானில் சென்ற சித்தர் பெருமான்  கீழே, மாடுமேயப்பவனான மூலன் என்பவன் இறந்ததால் அவனைச் சுற்றி நின்று கண்ணீர்  வடிக்கும் பசுக்களைக் கண்டு இரங்கி, அவனது உடலுள் புகுந்து பசுக்களின் துயரம் தீர்த்தார்.அதனால் திருமூலர் என்ற பெயரும் பெற்றார். இது நடந்தது சாத்தனூர் என்ற ஊரில். மயிலாடுதுறைக்கும் கும்பகோணத்திற்கும் இடையிலுள்ள ஆடுதுறையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தச் சிறிய கிராமம். பழங்காலத்தில் மிகப் பெரிய கிராமமாகத் திகழ்ந்து வந்தது என்பதை இதன் எல்லைக்குட்பட்டதாகக் கொண்டு  திருவாவடுதுறையைப் பாடியிருப்பதை  திருவிசைப்பாவின் மூலம் அறிகிறோம். சாத்தனூர் என்பதைச் சுருக்கமாகச் சாந்தை என்று சேந்தனார் குறிப்பிட்டிருக்கிறார். எனவே,  திருவாவடுதுறை தற்போது 3 கி. மீ. தொலைவில் இருந்தாலும், சாத்தனூரைச் சேர்ந்ததாக  இருந்தது என்று அறிகிறோம். இங்கு தனிக் கோயில் கொண்டுள்ள  சாஸ்தா, பல குடும்பங்களுக்குக்  குல தெய்வமாக விளங்குகிறார். சாத்தன் என்பது சாஸ்தாவைக்  குறிக்கும்.அதுவே சாத்தனூர் என்று ஆயிற்று. இந்த எல்லையில் ஐந்து சிவாலயங்களும், ஒரு விஷ்ணு ஆலயமும், உண்டு. எனவே இதனைப் பஞ்ச லிங்க க்ஷேத்ரம் என்பார்கள்.

திருவாவடுதுறையிலுள்ள கோமுக்தீச்வர ஸ்வாமி ஆலயம் மூவர் தேவாரமும் திருவிசைப்பாவும் பெற்றது. நவகோடி சித்தபுரம்  எனப்படுவது. இங்குள்ள அரச மரத்தின் அடியில் யோகத்தில் அமர்ந்து திருமந்திரம் என்ற ஒப்பற்ற நூலை அருளினார் திருமூலர். தனது தந்தை செய்யும் சிவ யாகத்திற்காகப் பொருள் வேண்டி, ஞானசம்பந்தரும் இறைவனிடம் பதிகம் பாடி ,ஆயிரம் பொன் பெற்றார். இந்த ஆலயம், திருவாவடுதுறை ஆதீனத்தால் திருப்பணிகள் அவ்வப்போது செய்யப்பெற்று, மிக நேர்த்தியாகப் பரிபாலிக்கப்படுகிறது.

சாத்தனூரில் உள்ள நான்கு சிவாலயங்களுள் முதலாவது, சித்தீச்வர ஸ்வாமி ஆலயமாகும். இங்கு திருமூலர் வழிபட்டதாகச் சொல்கிறார்கள். அவரது திருவுருவமும் கோயிலில் இருக்கிறது. ஸ்வாமி நீண்ட பாணத்துடன்காட்சி அளிக்கிறார். அம்பிகை, ஆனந்த கௌரி என்ற பெயருடன் தெற்கு நோக்கி சன்னதி கொண்டுள்ளாள். இக்கோயிலில் உள்ள விமான சுதை வேலைப்பாடு சிறப்பானது.

இதே ஊரின் மறு புறம், காசி விச்வநாத சுவாமி ஆலயம் இருக்கிறது. மிகவும் சிதிலம் அடைந்து இருந்த இக்கோயிலைச் சென்ற ஆண்டு புதுப்பித்துக் கும்பாபிஷேகம் செய்திருக்கிறார்கள். விசாலாக்ஷி சன்னதி தென்முகம் நோக்கியது.

ஊரின் கோடியில் மிகப்பெரிதாக இருந்த ஐராவதீச்வரர் கோயில் ,பாழடைந்து, சுற்றிலும் மரங்களும் புதர்களுமாகக் காட்சி அளித்தது. சுற்றிலும் வயல்கள். சுவாமியின் மிகப்பெரிய பாணம் ஒன்றே எஞ்சிய நிலையில், அதனை ஒரு கொட்டகைக்குள் வைத்திருக்கிறார்கள். அருகிலிருந்த புதர்களை அகற்றி, ஸ்வாமி சன்னதி எழுப்பப் படுகிறது. இம்முயற்சி மிகவும் பாராட்டப் பட வேண்டியதொன்றாகும். அன்பர்கள் ஆதரவு இதற்கு மிகவும் தேவைப் படுகிறது.

ஊருக்குள் இருக்கும் மற்றொரு சிவாலயம், கைலாசநாதர் கோயில் எனப்படுகிறது. இக்கோயில் திருப்பணி செய்யப்பட்டபிறகே, பிற சிவாலயங்களின் திருப்பணிகள் ஒன்றன் பின் ஒன்றாகத் துவக்கப்பட்டன. இக்கோயிலுக்கும் , சித்தீச்வரர், விச்வநாதர் கோயில்களுக்கும் செய்யப்பட திருப்பணி மற்றும் கும்பாபிஷேகங்களில் நமது சபை முக்கிய பங்கு ஆற்றும் பாக்கியம் பெற்றது.

கைலாசநாதர் கோயிலில் உள்ள பிள்ளையாருக்கு ஆலங்கட்டி விநாயகர் என்ற பெயர் வந்த கதை சுவாரஸ்யமானது.மழை இல்லாமல் கஷ்டப்படும் காலத்தில், கோமுகத்தையும், முன் புறத்தையும் அடைத்து விட்டுப் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்வார்கள். பிள்ளையார் மூழ்கும் நேரத்தில் அடைப்பு உடைந்து நீர் வெளியேறிவிடும். மனம் தளராமல் மீண்டும் அடைத்துவிட்டு, அபிஷேகத்தைத் தொடருவார்கள். எங்கிருந்தோ மேகங்கள் திரண்டு வந்து மழை கொட்டித் தீர்த்து விடும். சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்த காஞ்சி காமகோடி பெரியவர்கள், இந்த அதிசயத்தைப் பார்த்துவிட்டுப் பரவசமடைந்தார்களாம். ஆலங்கட்டி மழை யாகப் பெய்ததால்  பிள்ளையாருக்கு ஆலங்கட்டி விநாயகர் என்று பெயர் வைத்து விடும்படி சொன்னார்களாம். அதன்படியே இன்றும் அப்பெயராலேயே, விநாயகப் பெருமான் அழைக்கப் படுகிறார்.

இந்த வருஷம், ஆடி மாதம் முடிந்தும், காவிரி நீர், மேட்டூர்  அணையிலிருந்து திறக்கப் படவில்லை. நெல் விதைக்க முடியாமல் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்து இருக்கிறார்கள். இந்நிலையில் சாத்தனூர் வாசிகள் சிலர் மிகவும் கவலையுடன் , தென்னை மரங்களும் கடும் கோடையால் வாடுவதைத் தெரிவித்து, ஆலங்கட்டி விநாயகருக்கு அபிஷேகம் செய்ய அழைப்பு விடுத்தார்கள். இதற்கு நம்மாலான ஒத்துழைப்பை அளிப்பதற்காக , மற்றுமோர் அன்பருடன்  சாத்தனூர் சென்றோம். வாய்க்கால் ,குளங்கள், கிணறுகள் எல்லாம் வறண்டு கிடந்த காட்சி மனதை உருக்குவதாக இருந்தது. மழை வருவதற்கான அறிகுறியையே காணோம். வெயிலோ அனலாகக் காய்ந்து கொண்டிருந்தது. மறு நாள் காலையில் அபிஷேகம் செய்வதற்காக ஏற்பாடுகள் செய்யச் சொல்லி ஆகிவிட்டது. மனத்தில் மாத்திரம் கவலை-- மழை  வர வேண்டுமே என்று. அதே நேரத்தில் , விநாயகர் அருள் இருந்தால் மேகங்கள் எப்படியும் வந்து விடும் என்ற திடமான நம்பிக்கையும் இருந்தது.

காலையில் வழக்கம் போல சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. 9 மணி அளவில் ஒருவர் வந்து, கைலாசநாதர்  கோவில் அருகில் ஒரு பெரியவர் மரணமடைந்து விட்டதாகக் கூறினார்.விசாரித்ததில் அந்த இடம் கோயிலுக்கு மிகவும் தள்ளி இருந்தது. இன்னும் ஒருவர், பம்ப் செட் மூலம் ஒரு சில வயல்களில் அன்று காலை விதை விதைத்திருப்பதாகவும், மழை பெய்தால் அவ்வளவும் வீணாகி விடும் என்றும் சொன்னார். நாம் ஆசைப்பட்டபடி சன்னதியை அடைத்து, அபிஷேகம் செய்ய முடியாமல் இவ்வளவு தடைகள் ஏற்பட்டன. இருந்தாலும் பிள்ளையாருக்கு வழக்கமான அபிஷேகத்தையாவது செய்து, மழைக்காகப் பிரார்த்தித்துக் கொண்டு ஊருக்குத் திரும்புவது என்று முடிவு எடுத்தோம். கணபதி உபநிஷத், ருத்ரம் , திருமுறைப் பாராயணம் ஆகியவற்றோடு விநாயகருக்கு அபிஷேகங்கள் நடை பெற்றன. ஒரு சில மணி நேரத்துக்குப் பின் கரிய மேகங்கள் எங்கிருந்தோ வந்து சாத்தனூரைச் சூழ்ந்து கொண்டன. எங்களுக்கோ மாலையில் ஊருக்குக் கிளம்ப வேண்டும். மழையில் மாட்டிக கொள்வோமோ என்ற அச்சமும் இருந்தது.  ரயிலடி போய்ச சேரும் வரையில் மழை பெய்யாமல் பிள்ளையார் காப்பாற்றி விட்டார். தூறல் மட்டும் பலமாக இருந்தது.

மறுநாள் காலை ஊருக்கு வந்துவிட்டு, மதியம் சாத்தனூருக்குத் தொடர்பு கொண்டு பேசியபோது, அங்கு அடை மழை பெய்து வருவதாகவும்,  ஊரார் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும்  தெரிவித்தார்கள். இதை விட சந்தோஷம் தரும் செய்தி இருக்க முடியுமா? ஆலங்கட்டி விநாயக மூர்த்தியின் அழகிய திருவுருவம் கண் முன்னே நின்றது.

Thursday, August 2, 2012

"வானங்காள் பெய்க மழை"


காவிரி பொய்த்துவிட்டது. ஆடிப் பெருக்கன்று காவிரியில் நீர் இல்லை என்ற நிலை இதற்கு முன் ஏற்பட்டதாக நினைவில்லை. சிலர் சொல்லலாம் , அணை திறக்காததால் தானே நீர் வரவில்லை என்று. பெய்ய வேண்டிய மழை பெய்திருந்தால் அணையை மூடி வைக்கவா முடியும்? வேண்டுமானால் காவிரி பொய்த்துவிட்டது என்று சொல்வதற்கு பதிலாக, வானம் பொய்த்து விட்டது என்று சொல்லிக்கொள்ளலாம். உண்மையில் சொல்லப்போனால் மனிதர்கள் பொய்த்து விட்டதால் தான் இந்த நிலை வந்திருக்கிறது எனலாம். வேதமும் வேள்வியும் மிகுந்திருந்த காலத்தில் வான் முகில் வழாது பெய்து மலி வளம் சுரந்தது. செங்கோல் வழியில் அரசனும் ஆட்சி செலுத்தினான். உயிர்கள் யாவும் குறைவில்லாமல் வாழ்ந்தன. மெய்மொழி யாகக் கருதப்பட்ட  நான்மறைகளை  ஓதியவர்கள் "பொய்யாத வேதியர்" என்று சிறப்பிக்கப்பட்டனர். மந்திர மறைகளால் வான் மழை பொழிந்தது.

மழை பொய்த்த காலங்களில் இறைவனிடம் ஊருக்காக, நாட்டிற்காக மனமுருகி வேண்டியதால்  மழை பெய்த வரலாறுகள் உண்டு.  திருப்புன்கூர் என்ற தலத்தில் வயலில் நீர் இல்லாமல் வறட்சி ஏற்பட்ட போது , மழை வேண்டிய  ஏயர்கோன் கலிக்காம நாயனார் , ஆறு வேலி நிலம் கோயிலுக்குத் தருவதாகப்ப்ரார்த்தித்தார். கன மழை பெய்தது. வாக்குத் தவறாத நாயனாரும் ஆறு வேலி நிலத்தை சிவலோகநாதருக்கு அர்ப்பணித்தார். மழை விடாது பெய்து வெள்ளம் வந்ததால் , அதனை நிறுத்தினால் மேலும் ஆறு வேலி நிலம் தருவதாக இறைவனிடம் வேண்டினார். வெள்ளம் நின்றவுடன்  சிவார்ப்பணமாக மேலும் ஆறு வேலி நிலத்தை வழங்கினார் என்று திருமுறைகளால் அறிகிறோம். இப்பொழுது ஊருக்காக இறைவனிடம் வேண்டுவோர் இல்லையா? ஆறும் ஆறும் பன்னிரண்டு ரூபாய் தருவதாகக்கூட யாரும் முன்வருவதாகத் தெரியவில்லையே!! தானும் தன் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுபவர்கள் மட்டும் உண்டியல்களை நிரப்புகிரார்களே தவிர உலக நலன் என்று சொல்வதெல்லாம் வாய் அளவோடு  சரி.

சங்கீத பிரபலங்களும் பெயருக்கும் புகழுக்கும் பணத்துக்குமே நாட்டம் கொண்டு இருப்பதாகத் தெரிகிறது. சங்கீத மும்மணிகளுள் ஒருவரான  ஸ்ரீ  முத்து ஸ்வாமி தீக்ஷிதர், அம்ருத வர்ஷனி என்ற ராகத்தில் அம்பிகையின் மீது பாடி மழை வரவழைத்தார். விளம்பரம் இல்லாமல் ஆத்மார்த்தமாக அந்தக் கிருதியை உலக நமைக்காகப் பாட முன்வருவோர் எத்தனை பேர்?
திருநெல்வேலி சீமையில் ஸ்தல யாத்திரை செய்து வந்த சைவ மடாதிபதி ஒருவர் , அங்கு மழை இல்லாமல் மக்கள் துயரம் அடைவதைக்  கண்டு, "வானங்காள்  பெய்க மழை " என்ற ஈற்றோடு ஒரு பாடல் பாடியதும் பெரு மழை பொழிந்தது. காஞ்சி காமகோடி பெரியவர்களும் நமக்காகப் பிரார்த்தித்து  மழை வரவழைத்த வரலாறுகளும் உண்டு. குன்றக்குடி முருகனைத் தரிசிக்கச் சென்ற சிருங்கேரி ஸ்ரீ நரசிம்ம பாரதி ஸ்வாமிகள் ஒரு சுலோகம் சொல்லி மழை பெய்வித்தார்கள்.

முன்பெல்லாம் சன்யாசிகள் சாதுர் மாஸ விரதத்தை சிறிய ஊர்களிலும் ,கிராமங்களிலும் அனுஷ்டித்து வந்தார்கள். இப்பொழுது பெரும்பாலும் அது நகரங்களிலேயே நடை பெறக்  காண்கிறோம். இதற்குப் பல காரணங்கள்  இருக்கலாம். பல அஸௌகர்யங்களும் இருக்கலாம். அவற்றைப் பொருட்படுத்தாமல் , குறைந்த பக்ஷம் சிறு ஊர்களிலாவது நடத்தி உலக நன்மைக்காகப் பூஜை செய்தால் ஊர் மக்களும் நல்வழிப் பட  ஏதுவாகும் அல்லவா?

ஸ்திரீ தர்மம் நிலைத்திருக்கும் வரை நமது மதத்திற்கு ஆபத்து கிடையாது என்று கூடச்  சொல்லலாம். அதைப் பதிவ்ரதா தர்மம் என்றும் சொல்வர். அதற்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தொலைக்காட்சி வீடு தேடி வந்து புத்தியைக் கெடுக்கிறது. பெண்கள்  பழி வாங்குபவர்களாகவும், கொலை செய்யவும் அஞ்சாதவர்களாகவும் தொடர்களில் சித்தரிக்கப்படுவதைப் பெண்களும் வயோதிகர்களும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கோயில்களில்  பெண்கள் கூட்டம் இருந்தாலும் இந்த மாயை அவர்களைப் பெரிதும் பாதித்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. கோயிலில் இருக்கும் போதுகூட, சீரியல் பார்க்கும் நேரம் வந்துவிட்டது என்ற நினைப்பு வந்து விட்டால் அப்புறம் வழிபாடாவது ஒன்றாவது!! நேராக வீட்டுக்கு ஓடி வரும் நிலை வந்து விடும். இப்படிப்பட்டவர்கள் "பெய்" என்றால் மழை எப்படிப் பெய்யும். இப்படிச் சொல்வதை , யாரையும் புண் படுத்துவதாகக்   கொள்ளக் கூடாது. நமது கலாசாரம் கொஞ்சம் கொஞ்சமாக நம் கண்ணுக்கு முன்னால் சீரழிவதைப் பார்த்து வேதனையோடு எழுத வேண்டியிருக்கிறது.

 விவசாய நிலங்கள்  ஏராளமாகக் கோயில்களுக்கு வழங்கப்பட்டிருந்தும் அவற்றிலிருந்து சல்லிக்காசு கூட வருமானம் வராத கோயில்கள் ஏராளம். அற நிலையத்துறை என்ன  செய்து கொண்டிருக்கிறதோ  தெரியவில்லை. சென்ற ஆண்டைப் போல பல ஆண்டுகள்  நல்ல மகசூல் கிடைத்தும் கோயிலுக்கு உரியதைக்  கொடுக்காதவர்கள் ஏராளம். ஓட்டைக் குறி வைப்பவர்களுக்கு இது பற்றிக் கவலை இல்லை. நெல்லை மட்டுமாவது வாங்கிக் கொண்டு அரசாங்கம் தரும் அற்ப சம்பளத்தைப் பற்றி மூச்சு கூட விடாமல் கடமை ஆற்றி வந்த கிராமக் கோயில் அர்ச்சகர்கள் இன்னும் எத்தனை  நாட்கள் அந்த நெல்லும் தரப் படாமல் காலம் தள்ள முடியும்? எப்படி ஐயா நம் ஊரில் மாதம் மும்மாரி பெய்யும்? சிவாலய பூஜைகளுக்குத் தட்டுப்பாடு வந்தால் மழை பெய்யாது என்று திருமூலரும் எச்சரித்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கில் சம்பாதிப்பவர்கள் இது பற்றிக் கொஞ்சமும் கவலைப் படுவதில்லை. பணத்தால் எதையும் சாதித்து விடலாம் என்ற நினைப்பில் மிதப்பவர்கள் இவர்கள். அந்தப் பணமும் சிவன் தந்தது என்று அவர்களும் உணரும் காலம் விரைவிலேயே வந்து விடும். பேராசைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்து இறைவனே அவர்களைத் திருத்தி விடுவான்.
உண்மையான அடியார்கள் என்ன  செய்வார்களாம் தெரியுமா? வானம் பொய்த்தால் என்ன, மண்ணுலகம் ஸ்தம்பித்துவிட்டால் தான் என்ன, எல்லா அரசர்களுமாக ஒன்று சேர்ந்து நம்மைத் தாக்க முற்பட்டால் என்ன, சிவனருள்  இருக்கையில் நாம் எதற்காக அஞ்ச வேண்டும்? இப்படிச் சொல்கிறார்  அப்பர் பெருமான் . இதோ அப்பாடல்:

"தப்பி வானம் தரணி கம்பிக்கில் என்
ஒப்பில் வேந்தர் ஒருங்கு உடன் சீறில் என்
செப்பமாம் சேறை செந்நெறி மேவிய
அப்பனார் உளர்  அஞ்சுவது என்னுக்கே. "

இவ்வாறு அப்பர் சுவாமிகளைப் போன்ற மகான்கள் மட்டுமே சொல்ல முடியும். நமக்கு இன்னும் அப்பக்குவம் வரவில்லையே!என்ன செய்வது?  

Sunday, July 29, 2012

ஆகமமும் தமிழும்


                               
                                " அம்மானே ஆகம சீலர்க்கு அருள் நல்கும்
                                   பெம்மானே  பேரருளாளன் பிடவூரன்
                                   தம்மானே  தண்டமிழ்  நூற் புலவாணர்க்கு ஓர்  
                                  அம்மானே பரவையுண்  மண்டளி  அம்மானே."

என்பது, திருவாரூரில் உள்ள பரவையுண் மண்டளி என்ற தலத்து இறைவன் மீது சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் பாடி அருளியுள்ள தேவாரத் திருப்பதிகத்தில் ஒரு பாடல். இப்பாடலை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். சிவாகமத்தால் தன்னை ஆராதிப்பவர்களுக்கும் ,தெய்வத் தீந்தமிழ்ப்  பாடல்களால் தன்னைத் துதிப்பவர்களுக்கும் அருள் புரியும் பெருமான் இவன் என்பார்  சுந்தரர். காலத்தின் கோளாறினால் , ஆகமம் என்று திருமுறைகள் குறிப்பது தமிழில் இருந்து மறைந்து போனவையே என்றும், இப்போது வடமொழியில் இருப்பவை  தமிழிலிருந்து மொழியாக்கம் செய்யப் பெற்றவை என்றும் ஒரு சாரார்  பிரசாரம் செய்து வருவது விந்தையாக உள்ளது. ஆகமம், தமிழிலேயே இருந்திருந்தால், மேற்கண்ட பாடலில் தனித்தனியாக ஆகமம், தமிழ்நூல் என்று பாடியிருக்க நியாயமே இல்லை. வட மொழியின் மீதுள்ள தேவையற்ற  துவேஷமே இவ்வாறு அவர்களைப் பேச வைத்திருப்பதாகத் தோன்றுகிறது. வேத நெறி என்று குறிக்கப் பெறுவது தமிழ் வேதமே என்று அடிப்படை அற்ற வாதம் செய்கிறார்கள். ஒரு சில மடங்களின்  ஆதரவைப் பெற்றுக்கொண்டு, திருமுறை வேள்வி, சிலை நிறுவுதல், குட நன்னீராட்டு (யாகம், பிரதிஷ்டை, கும்பாபிஷேகம் என்றெல்லாம் சொல்லக்கூடாதாம்!) என்றெல்லாம் சில ஊர்களில் செய்து வருகிறார்கள். இதற்கு உடன்படாத சைவ ஆதீனங்கள் இந்நிகழ்ச்சிகள் ஆதரிப்பதில்லை. இருப்பினும் , இந்த துஷ்ப்ரசாரம் தொடர்கிறது.

ஆகமங்கள் கிரியைகளைச் செய்யும் மந்திரங்கள். அவற்றிற்குக் கற்சிலைகளில் இறைவனை  எழுந்தருளுவிக்கும் ஆற்றல்  உண்டு. இதற்குப் பதிலாகத் தமிழில் அக்கிரியைகளைச் செய்தால் அந்த ஆற்றலைப் பெற இயலுமா. எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவனுக்கே செய்யும் குற்றம் அல்லவா  இது? ஓம் என்ற பிரணவ மந்திரத்திற்கு என்ன தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடிக்க முடியும்? நம: என்பதைப் போற்றி என்பதும்  பொருத்தமற்ற மொழிபெயர்ப்பே ஆகும். திருமுறைகள் அனைத்தும் தோத்திரங்கள். தோத்திரங்கள் வேறு , கிரியைகள் வேறு என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.தோத்திரங்கள், கிரியைகளுக்குப் பதிலாக அருளப் பட்டவை அல்ல. இவற்றில் ஒன்றுக்கு ஒன்று எது உயர்ந்தது அல்லது எது தாழ்ந்தது என்று ஆராய்வது தாழ்வு மனப்பான்மையால் ஏற்படுவதே ஆகும். பரமேச்வரனே ஆகமங்களைத் தோற்றுவித்து  அருளினான் என்பதை ,"சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்" என்ற திருவாசக வரிகளைப் பன்முறை ஓதியும் குருநாதரின் பெயரால் சிவப்பணிகள் செய்பவர்களும் அவரது வாக்கிற்கு மாறாக நடந்துகொள்வது துரதிருஷ்டமே.

நகரத்தார்கள் பல ஆகம நூல்களையும், தல புராணங்களையும்  வெளியிட்டு சைவ உலகிற்குப் பேருபகாரம் செய்துள்ளார்கள். பல தலங்களில் வேத,சிவாகம, தேவார பாட சாலைகளை நிறுவியுள்ளார்கள். அதே போன்று, சைவ ஆதீனங்களும் பாட சாலைகளை அமைத்துப் பல மாணாக்கர்களை உருவாக்கியுள்ளார்கள். அண்மையில் மயிலாடுதுறையில் , சிவாகம பாடசாலை பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிக்குத் திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் அவர்கள் எழுந்தருளி ஆசி வழங்கினார்கள். பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் பாடசாலை அமைக்க இடம் வழங்கிய இக் குருமூர்த்திகளின் வருகை , பாடசாலை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மிக்க மகிழ்ச்சியை அளித்தது. அன்று ஆடி சுவாதி ஆதலால் நமது சபை , சுந்தரமூர்த்தி நாயனாருக்கு அபிஷேக ஆராதனைகளை, அவரால் பாடல் பெற்ற மண்ணிப்படிக்கரை (இலுப்பப்பட்டு)என்ற தலத்தில் செய்துவிட்டு, மாலையில்,மாயூரம்  பெரிய கோவிலில் நடந்த மேற்கண்ட விழாவில் கலந்து கொண்டு . வறுமைக்கோட்டில் வாடும் மடைப்பள்ளி ஊழியர்கள் ஐவருக்கு உதவியாகத் தலா ஆயிரமும், ஆடைகளும்  வழங்க முன்வந்தபோது, ஸ்ரீ சந்நிதானம் அவர்கள், மடத்தின் சார்பில் இருவருக்கு உதவுவதாகக்கூறவே, அவர்களது திருக்கரத்தாலேயே இவ்வுதவிகள் வழங்கப் பெறும் பேறு பெற்றோம்.

இது போன்ற சர்ச்சைகளுக்குச் சில ஆண்டுகளாகச்  சைவம் உட்படுத்தப்படுவது வேதனைக்குரியது. இதனால் சமய வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதை அனைவரும் உணர வேண்டும். ஆலயவழிபாடு,மற்றும் விழாக்கள் எல்லாம் பல்வேறு பிரிவுபட்ட மக்களை ஒன்று சேர்ப்பதாக அமைந்துள்ளதை  இவ்வாறு துவேஷம் பாராட்டுவதால் அவ்வொற்றுமை பிளவு படும் என்பதில் ஐயமில்லை. இது தேவைதானா என்று சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்க வேண்டும். சிவனுக்குத் தொண்டாற்றிய நாயன்மார்கள் சரித்திரத்தைப் பயின்றவர்களுக்கு அடியார்க்கு அடியனாகும் சிந்தையே மேலோங்கியிருக்க வேண்டுமே தவிர , காழ்ப்புணர்ச்சி ஒருபோதும் தலை தூக்கக் கூடாது.

எனவே , தவறான பாதையைக் காட்டுபவர்களைப் புறக்கணித்துவிட்டு, "எல்லா மொழியாலும்" வணங்கப்படும் ஈசன் தொண்டே பற்றுக்கோடாகக் கொண்டு தொண்டு செய்ய வேண்டும். வேதம், ஆகமம் பயின்றவர்கள், ஆதரிப்போர் இன்றி கிராமக் கோவில்களில் இருந்து வெளியேறும் நிலையில் , இவ்விதம் வெறுப்பை உமிழ்ந்தால் அவர்கள் எங்கே  போவார்கள் என்று சிந்திக்க வேண்டும். குறைகள் எங்கும்  இருக்கக்கூடும். குறை இல்லாதவன் இறைவன் ஒருவனே. ஒரு சில நிறைகளையாவது எடுத்துக்கொண்டு பிழை பொறுத்தல் பெரியோர் கடனாகும். சிறிது சிறிதாக அப்பிழைகள் களைய வழி வகைகள் செய்ய வேண்டுமே தவிர , மரபையே மாற்ற முற்படுவது, மரக் கிளையின்  மீது அமர்ந்து கொண்டு அடி மரத்தை வெட்டுவதற்கு ஒப்பாகும்.

Tuesday, July 17, 2012

எல்லோரும் இன்புற வேண்டுவோம்


சுமார்  25 ஆண்டுகளுக்கு முன்  சிதம்பரத்தில் நடந்த சம்பவம். மார்கழி திருவாதிரை அபிஷேகம் ஆயிரம் கால் மண்டப முகப்பில் சிறப்பாக நடந்துகொண்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் அமர்ந்த வண்ணம், ஆனந்த நடராஜ மூர்த்தியைக் கண் இமைக்காமல் பார்த்த வண்ணம் இருந்தனர். முன் வரிசையில் இருந்தோர் சற்று உயரமாக இருந்ததால், பின்னால் இருந்த பெண்மணிக்கு அவர்களது தலைகளையே பார்க்க முடிந்தது. இதனால் கோபப்பட்ட அவர், "நடராஜா, இவர்கள் எல்லோரும் என்னைப் பார்க்க விடாமல் மறைக்கிறார்களே! இவர்களை அழித்துவிடு" என்று வாய் விட்டுக் கூறினார். இதைக் கேட்ட பலருக்கு சிரிப்புத்தான் வந்தது. இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். நானும் என் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்பவர்கள் ஏராளம். உலகம் முழுவதும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுபவர்கள் மிகச் சிலரே. அத்தனை பரந்த மனப்பாமை வராவிட்டாலும்  நம்முடைய  குடும்பத்தைச்  சேராத ஒருசிலருக்காவது வேண்டிக்கொள்ளலாமே! பிறருக்காக வேண்டும் பொழுது பலன் கைமேல் கிடைப்பதை அனுபவத்தில் காணலாம்.

நமது சபையின்  தொண்டுகளில் பங்கேற்கும்  அன்பர்களில் ஒருவர்  அண்மையில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அவரது மகன் நோய்வாய்ப் பட்டிருப்பதாகவும் அதற்கு இறைவனிடம் வேண்டிக் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். நோயின் கடுமை பற்றி அறிந்தவுடன் அவரை வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வேண்டிக்கொண்டு அர்ச்சனை செய்தால் நிச்சயம் பலன் பெறலாம் என்று தெரிவிக்கத்திருவருள் கூட்டியது. அவர் நெடுந்தொலைவில் இருப்பதால் நேரில் வர முடியாத சூழ் நிலை.எனவே , அவரது சார்பில் அத்தலத்திற்கு, வரும் 26- ம்  தேதிநேரில்  சென்று அர்ச்சனைகள் செய்துவரத் தீர்மானமாகியது. இதனைப் படிக்கும் அன்பர்கள் அனைவரும் அன்றையதினம் , தீரா நோய் தீர்த்து அருளவல்ல ஸ்ரீ வைத்யநாதப் பெருமானிடம் கூட்டுப் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அன்றைய தினம் களையாத உடலோடு கயிலை சென்ற ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகளது குருபூஜை ஆதலால், அதனை, அவரால் பாடப்பெற்ற மண்ணிப்படிக்கரை என்ற தலத்தில் காலை சுமார் 10 மணி அளவில் அபிஷேக ஆராதனைகளுடனும் , வேத- திருமுறைப்பாராயணங்களுடனும் நிகழ்த்த இருப்பதும் திருவருள் உணர்த்தியதால் தான். வைதீஸ்வரன் கோயிலில் இருந்தும் மயிலாடுதுறை , கும்பகோணம் ஆகிய ஊர்களிலிருந்தும் வருபவர்கள், மணல்மேடு என்ற ஊரில் இறங்கி, சுமார் 1.5 கி.மீ. நடந்து வந்தால், இலுப்பப்பட்டு என்று தற்போது வழங்கப்பெறும் மண்ணிப் படிக்கரையை அடையலாம்.

குருபூஜைகளை அபிஷேக ஆராதனைகளோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் , குருநாதர்களது உபதேசங்களில் ஏதாவது ஒன்றையாவது அன்று கடைப் பிடித்தல் சிறப்பாகும் எனக்கருதி, சுந்தரர்,  சிவபெருமானுக்குக் கைங்கர்யம் செய்பவர்கள் எல்லார்க்கும் அடியவன் என்று தன்னைப் பாடியதால், நமது சபை கடந்த சில ஆண்டுகளாகக் கோயில்களில் பணி புரியும் சிவாசார்யப் பெருமக்களுக்கு இயன்றவரை உதவி செய்து வருகிறது. இந்த ஆண்டு ஆடி சுவாதி அன்று (26.7.2012) சிவாலயங்களில் இருக்கும் மடைப்பள்ளிகளில் பல்லாண்டுகளாகப் பணி புரியும் ஐந்து பேருக்கு  மயிலாடுதுறையிலுள்ளஸ்ரீ கௌரி மாயூரநாத ஸ்வாமி கோயிலில் மாலை சுமார் 6.30 மணி அளவில் நடைபெறும் சுந்தரர் குருபூஜைக்குப் பின்னர் , வஸ்திரமும்,சம்பாவனையாகத் தலா ரூ 1000-மும் சபையின் சார்பில் வழங்கப்படுகிறது. இவ்வளவு சிவ புண்ணியத்தையும் மேற்படி அன்பர்  நமது சபை மூலம் ஏற்றுப் போற்றுகின்றார். அவரது மகன் விரைவில் நலம் பெறத் திருவருளையும் குருவருளையும் மனமார  வேண்டுவோமாக.  

Thursday, July 12, 2012

இரு வைபவங்கள்


"அவன் அன்றி ஓர் அணுவும்  அசையாது " என்பது சத்தியமான வார்த்தை. இதை அனுபவத்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். அந்த உணர்வையும் அவனே வழங்கி அருள வேண்டும். "உன்னை உன்னும் உணர்வை நல்காய்" என்று திருவொற்றியூர் பெருமானிடம் வரம் வேண்டுகிறார்  திருநாவுக்கரசர். "உணர்வித்தால் ஆர் ஒருவர் உணராதாரே ? " என்று அவரே வேறு ஓர் பாடலில் பாடுவார். அப்படி உணர்ந்துவிட்டால் இறை தொண்டு ஆற்றும் பேறும் கிடைத்து விடுகிறது. அத்தொண்டர்களுக்குத் தூய நெறியாகத் தானே முன்னின்று வழி காட்டுகிறான் சிவபெருமான்.

 அப்பர் பெருமானால் பாடப்பெற்ற திருத்தலையாலங்காடு ஆலயத் திருப்பணியிலும் கும்பாபிஷேகத்திலும் பங்கேற்கும் அரிய பேற்றினை நமது சபை பெற்றது. ஆலய மடப்பள்ளி,திருக்குளம்,நந்தவனம் ஆகியவை திருத்தம் பெறவும், சுப்பிரமணியர்,துர்க்கை ஆகிய நூதன விக்ரகங்கள் அமைக்கவும், சபாபதிக்கு ந்ருத்த சபை அமைக்கவும்,சபை அன்பர்கள் உதவி புரிந்தனர். தவிரவும் நண்பர்கள் மூலமாக யாகசாலை வஸ்திரங்களுக்கும், கட்டுமானப் பொருளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

 திருவாவடுதுறை ஆதீன கர்த்தரும், கும்பாபிஷேக அஷ்டபந்தன மருந்தும்,அதனை இடிக்க ஆட்களும் தந்தருளியதோடு, தாமே மூன்றாம் கால பூஜைக்கு எழுந்தருளினார்கள். நாம் விண்ணப்பித்ததற்கு செவி சாய்த்து, ஆதீன சார்பில் ஆடல் வல்லானின்  திருவுருவத்தைக் கோயிலுக்கு அமைத்துத் தருவதாகக் கருணை பாலித்தார்கள். ஆண்டுதோறும் செய்யப்படும் ஆறு அபிஷேகங்களையும் ஆதீன உபயமாகச் செய்து தருவதாக அருளியுள்ளார்கள். அவர்களது கருணைத்திறம் அளவிட ற்கு அரியது . கும்பாபிஷேக வைபவம் 8.7.2012 ஞாயிறன்று மிகச் சிறப்பாக நடந்தது.

சுவாமிக்கும் அம்பாளுக்கும் தனித்தனியாக ஒன்பது குண்டங்கள் அமைக்கப்பெற்றது.கும்பாபீஷேகத்திற்குப் பிறகு ஆசார்யஉற்சவமும் , மாலையில் திருக்கல்யாணமும் ,திருவீதி புறப்பாடும் நடைபெற்றது. இவற்றை ஏற்ற இறைவனும் மழை பொழிந்து ஊரையும் உள்ளத்தையும் குளிர்வித்தான்.

இறை பணிசெய்வதோடு இறைவனுக்குப் பணி செய்பவர்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்ற அவாவுடன் நமது சபை , கிராமக் கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு இயன்ற அளவு உதவி செய்து வருகிறது. கடந்த 9.7.2012 திங்களன்று திருக்கடவூருக்கு அருகில் உள்ள ஆக்கூர் என்ற பாடல் பெற்ற தலத்தில் உள்ள ஸ்வயம்புநாத ஸ்வாமி ஆலயத்தில் , ஹோமம், அபிஷேக ஆராதனைகள் ஆகியவை நிகழ்த்தப்பெற்று, ஆக்கூர், செம்பனார்கோயில், மா(மா)குடி, திருப்பறியலூர்,திருவிடைக்கழி ஆகிய தலங்களின் சிவாசார்யர்கள் கௌரவிக்கப்பெற்றனர்.
 ஒவ்வொரு சிவாசார்யதம்பதிக்கும் பாத பூஜை, அர்ச்சனை, ஆகியவை செய்யப்பெற்று,புது வஸ்திரங்களும்,சௌபாக்ய திரவியங்களும் தலா ரூ 2000 மும் அளிக்கப்பெற்றன. திருவாவடுதுறை ஆதீன கர்த்தர்  கருணையுடன் வழங்கிய வஸ்திரமும் உதவித்தொகையும் ஒரு சிவாசார்ய தம்பதிக்கு வழங்கப்பெற்றது. ஆதீனத்திலிருந்து கட்டளைத் தம்பிரான் ஸ்வாமிகள் வந்திருந்து நிகழ்ச்சியைச்  சிறப்பித்தார்கள்.  அனைவருக்கும் அன்னம் பாலிப்பு செய்விக்கப் பெற்ற பின்னர் விழா  இனிதே நிறைவேறியது. " முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்" என்ற சுந்தரர் வாக்கை நமக்கு உணர்வித்த இறையருளுக்கு என்ன கைம்மாறு செய்ய  முடியும்?

Saturday, June 16, 2012

யாருக்கு வெற்றி ?


ஆனித் திருமஞ்சனம் பற்றிய ஒரு வலைப்பதிவைக் காண நேரிட்டது. அதைப் படித்த பெண்மணி ஒருவர் ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதற்கு வலைப்பதிவாளர் பதில் தந்தாரா என்று தெரியவில்லை. அதாவது, கேள்வி இதுதான். இறைவன் ஊர்த்துவ தாண்டவம் ஆடிய போது இடது திருவடியை  உயரத் தூக்கி ஆடினான். பெண்என்பதால் அவ்வாறு ஆடக் கூடாது என்று , காளிதேவி வாளா இருந்துவிட்டதை எப்படி அவள் தோல்வி அடைந்ததாக ஒப்புக்கொள்ள முடியும் என்பதே அவரது வினா. சரிபாதி பெண்மைக்குத் தந்த ஒரே தெய்வம் சிவபெருமான் என்பதை இப் பெண்மணி மறந்துவிட்டார் போலும்! எமனைக் காலால் உதைத்ததை சக்தி உபாசகர்கள் என்ன  சொல்வார்கள் தெரியுமா? உதைத்தது இடது கால் என்பதால் அன்னைக்கே அந்தப் புகழ் உரியது என்பார்கள். ஆனந்த தாண்டவம் ஆடும்போதும் தூக்கிய திருவடி அன்னை பாகத்தைச் சேர்ந்தது அல்லவா என்பார்கள். அறுபத்து நான்கு திருவிளையாடல்களை மதுரையில் சோமசுந்தரப் பெருமான் செய்திருந்த போதிலும், அக்கோவிலை மீனாக்ஷி கோவில் என்றல்லவா மக்கள் சொல்கிறார்கள்! இதில் தெய்வ தம்பதிகளிடையில் வெற்றி - தோல்வி என்பதேது?

நாம் தாழ்ந்துவிட்டோம் என்று நினைப்பவர்களுக்கு ஒருவேளை இப்படியெல்லாம் தோன்றும் போலிருக்கிறது. உண்மையில் அவர்களே உயர்ந்துவிட்டவர்கள் என்பதை இன்னமும் உணரவில்லை. ஒரு வீட்டை எடுத்துக்கொண்டால், க்ரஹிணி என்று பெண்ணே எஜமானியாகச்  சித்தரிக்கப்படுகிறாள். ஒரு வேதியருக்கு அக்னி ஹோத்திரம் செய்யும் உரிமை அவரது மனைவி கூட இருக்கும் வரையில்தான்.

காளி இறைவனுக்குப் போட்டியாக ஆடியது இருக்கட்டும். மனோன்மணியாகிய பராசக்தி, அப்பெருமானது பாகம் பிரியாத நாயகி தானே . அவள் ஆடியதாகச் சொல்லப்படுவதில்லை. "உமையவள் காண ஆடிய அழகா" என்றே திருமுறை பகர்கிறது. கும்பகோணம் நாகேச்வர ஸ்வாமி கோவிலில், நடராஜப் பெருமான் ஆடும்போது,அம்பிகை தாளம் போட்டுக் கொண்டு, தன் நாயகனின் ஜதி பிழையாத ஆடலைக் கண்டு மகிழ்வதைத் தரிசிக்கலாம்.

கணவன் ஈட்டும் புண்ணியத்தில் ஒரு பாதி மனைவியைச் சேரும் ; ஆனால் அவனது பாவத்தில் எள்ளளவும் மனைவியைச் சேராது. அதே நேரத்தில், மனைவியின் புண்ணியத்தில் ஒரு சிறிதும் கணவனை அடைவதில்லை. அவளது பாவத்தில் ஒரு பங்கு மட்டும் கணவனை அடைவதாகப் பெரியோர்கள் கூறுவர். பூஜை, ஜபம் ஆகியவற்றை செய்யாமலே, கணவன் செய்யும் பூஜைக்கு உதவினாலே போதும். இவளுக்குப் பூஜை செய்த பலன் கிடைத்திவிடுகிறது. "உன்னடியார் தாள் பணிவோம்; அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்" என்ற திருவெம்பாவை வரிகள் இங்கு சிந்திக்கற்பாலான. இப்படிச் சொல்வதால் மனைவிக்குத் தெய்வ பக்தியே வேண்டாம் என்று பொருள் கொள்ளக் கூடாது. பதி- பக்தியின் மேன்மையைச் சொல்லி அப்படிப்பட்ட பெண் "பெய்" என்றால் மழை பெய்யும் என்றார் திருவள்ளுவரும். உனக்குப் பணி செய்யும் அடியவர்களே எங்கள் கணவராகும் வரத்தைக்கொடுப்பாயாக என்று பெண்கள் மார்கழி நோன்பு நோற்பதைத் திருவெம்பாவையில், " உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம் உன் அடியார் தாள் பணிவோம் ;ஆங்கு அவர்க்கே பாங்காவோம்; அன்னவரே எம் கணவர் ஆவார்" என்று மாணிக்க வாசகப் பெருமான் அருளியுள்ளதைக் காண்க. கல்யாண நலங்குகளில் தம்பதிகள் தேங்காயை ஒருவரிடமிருந்து மற்றொருவர் பிடுங்குவது போல அமைத்திருந்தாலும் , அப்படிப் பிடுங்கி, வெற்றி-தோல்வி என்று ஆகி விடாமல் விட்டுக் கொடுக்கும் மனப்  பான்மையை உண்டாக்குவதாக ஏற்படுத்தியிருக்கிறார்கள்.(சுற்றிலும் இருந்து வேடிக்கை பார்பவர்கள், "விடாதே, கையிலிருந்து பிடுங்கி விடு" என்று சொல்லாமல் இருந்தால் தம்பதிகளே ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கத் தொடங்கி விடுவர்.)  

சக்தியின் அம்சமான காளி தேவி , பரமேச்வரனை வழிபட்ட தலங்களுள் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள காளி என்ற தலமும் ஒன்று. அவ்வாறு அவள் செய்த பூஜையின் பலனைப் பார்த்தீர்களா? ஊரின் பெயரே அவள் பெயரில் தான் இருக்கிறது. அதேபோல், பூந்தோட்டத்திற்கு அருகிலுள்ள அம்பர்  மாகாளம் என்ற தலத்தில், அம்பராசுரனை வதம் செய்த காளி, சிவபூஜை  செய்ததால், ஊரின் பெயர் மாகாளம் ஆனதோடு, சுவாமியின் பெயரும் மாகாள நாதர் ஆயிற்று. இவ்வூரைப் பாடிய ஞானசம்பந்தக் குழந்தை, காளி வழிபட்டதைச் சொல்லும்போது, "நம் காளி " என்று மிக்க உரிமையோடு அம்பிகையைக் குறிக்கிறார்.

எனவே, ஆலங்காட்டில் காளியை வென்ற வெற்றிக்களிப்பில் இறைவன் ஆடவில்லை. அப்படி ஆடியிருந்தால் , காளி தோற்றதாகக் கொள்ளலாம். காளிக்கு அருள் அல்லவா செய்தான்! இப்படிச் சொல்கிறது திருவாசகம்:

" .. பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம் நவில்
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு அருளிய
திருமுகத்து , அழகு உறு சிறுநகை இறைவன் ..."

இப்படியாகக் காளியும் , கயிலைமலை வல்லியும் மனமகிழத் தாண்டவம் நடைபெறும்போது, யார் வெற்றி பெற்றார்கள் என்று கூற முடியும்? தேவி மனமகிழ ஆடல் காட்டியதை அவனது திருவிளையாட்டாகக் கொண்டால் யாருக்கு வெற்றி என்ற வினாவே எழாது.  

Thursday, June 7, 2012

உதவிகள் பலவிதம்


உதவிகள் பலவகைப்படும். அவற்றுள் அறம் சார்ந்த உதவிகள் உயர்ந்தவை. ஒரு மரம் கூட நமக்கு நிழல் தந்து உதவும்போது, நாமும் அவ்வகையில் ஏதாவது செய்ய வேண்டாமா? இந்தக் காலத்தில் பிச்சைக் காரனுக்கு காசு போடுவதும் உதவி எனப்படுகிறது. எத்தனையோ பிச்சைக் காரர்கள் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார்கள் என்றும் செய்தித்தாள்களில் படிக்கிறோம். ஒரு வேளை இதை எதிர்பார்த்துத்தான் ,"பாத்திரம் அறிந்து பிச்சை போடு" என்றார்களோ?

இதில் அரசாங்கமும் ஒன்றும் சளைத்ததாகத் தெரியவில்லை. ஊக்குவித்தல் என்ற பெயரில் லக்ஷக் கணக்கிலும், ஏன், கோடிக் கணக்கிலும் வரிப்பணத்தை செலவழிக்கிறார்கள். மக்கள் மத்தியில் பெயர் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற நோக்கமும் இதற்கு முக்கிய காரணம். திரைப்படத்துறைக்கு ஏராளமான சலுகைகள் வாரி வழங்கப்படுகின்றன. கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் அத்திரையைச் சேர்ந்த எத்தனை பேர் மக்களுக்கு உதவுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அரசியல்வாதிகள் மட்டும் இதற்கு விதி விலக்கா என்ன? கோடீஸ்வரர்களாகத் திகழும் விளையாட்டு வீரர்களும் அகாடமி ,ஹோட்டல் என்று ஏற்படுத்தி வருமானத்தைப் பன் மடங்காக ஆக்கிக் கொள்கிறார்கள். இவர்கள் பெறும் பரிசுப் பொருள்களுக்கு வரி விலக்கு வேறு!! விளம்பரத்தின் மூலமாக மட்டுமே கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இவர்களில் எத்தனை பேர் பிறருக்கு உதவத் தயாராக இருக்கிறார்கள்?

அண்மையில் ஒரு விளையாட்டு வீரர் உலக அளவில் வெற்றி பெற்றபோது, பாராட்டுவதோடு நிற்காமல் , இதற்கு முன் நான் அவருக்கு இவ்வளவு லட்சங்கள் கொடுத்தேன் என்றார் ஒருவர் . இதைக் கேட்ட இன்னொருவர் நான் அதற்கும் மேலே தருகிறேன் என்று அவருக்கு சில கோடிகள் கொடுத்தார். இப்படிப் பரிசுமழை பெற்றவர் ஒன்றும் வசதி இல்லாதவர்  இல்லை. வரிப்பணம் வீணாகப் போகிறதே என்று ஒரு வாசகர் தமிழ் நாளிதழில் எழுதியிருந்தார். விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதில் யாருக்கும் இரண்டாவது கருத்து இல்லை. அதற்காக இப்படிப் போட்டி போட்டுக்கொண்டு அள்ளித் தர வேண்டுமென்பதில்லை.

ஆலய சிப்பந்திகளின் அவல நிலையைப் பற்றிப் பலமுறை குரல் கொடுத்து வருகிறோம். அரசாங்கம் மட்டுமல்லாது மக்களும் செவி மடுப்பதாகத் தெரியவில்லை. வசதி உள்ள இடங்களுக்கே உதவியும் ஊக்கமும் போய்ச்  சேருகின்றன. சமூக சேவை என்பது கல்விக்கும் உடல் நலத்துக்கும் மட்டுமே செய்யப்பட வேண்டியதாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. வறுமையில் தத்தளிக்கும் மற்றவர்களைப் பற்றி யார் கவலைப் படப்போகிறார்களோ தெரியவில்லை. சேவை வரி, கல்வி வரி ஆகியவை மூலமாகவும் நிதி திரட்டுகிறார்கள். ஆனால், உண்டியல்கள் , பிற வருமானங்கள் மூலம் கோயில்களுக்கு வரும் நிதியைக் கொண்டு அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மாத சம்பளம் கணிசமாகக் கொடுக்கப்படுவதுபோல் ஆலய சிப்பந்திகளுக்கும் ஏன் கொடுக்க முன் வருவதில்லை? அவர்களை வருமான அடிப்படையில் மிகவும் பின் தங்கியவர்களாக அறிவிக்கலாமே.

நிறைவாக ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறோம். ஒரு நடனக் கலைஞர் பிரபலம் அடைந்துவிட்டால், தான் இன்று ஆடுவது, எல்லா உலகங்களையும் ஆட்டுவிக்கும் நடராஜப் பெருமானின் அருள் என்பதை உணர்ந்து, அவனது நிருத்த சபைகளைத் திருப்பணி செய்ய முன் வர வேண்டும். ஒரு சதுரங்கவீரர்  தான் பெறும் பல கோடிகளின் சிறு பகுதியையாவது, மன்னார்குடிக்கு அருகில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமான பூவனூர் சதுரங்க வல்லபேச் வரர்   கோயிலுக்கு அர்ப்பணிக்க முன் வர வேண்டும்.

பழந்துணிகளைக் காப்பகத்திற்குத் தந்து விட்டு, பிரமாதமாக சமூக சேவை செய்து விட்டதாகச் சொல்லிக்கொள்பவர்களும் உண்டு. ஆனால் ஆணிவேருக்குச் செய்யப்படும் உதவி பிற்காலத்தில் மரமாக வளர்ந்து பலன் அளிக்கும். சிவதர்மம் செய்யும் போது, சிவ பெருமான் மட்டுமல்லாமல் உதவியைப் பெற்ற அனைவரும் மகிழ்ச்சி அடைவர். செய்து பார்த்தால் தானே அதன் பலனும் பெருமையும் தெரிய வரும்! பிறருக்கு நிழல் தந்து உதவும் ஆல மரத்தையே தேர்ந்தெடுத்து அதன்கீழ் வேதப் பொருள்களை உரைத்த தக்ஷிணா மூர்த்தி, தர்மத்தின் உறைவிடம் அல்லவா; நம்மையும் அறம் செய்ய வேண்டும் என்று சொல்லாமல் சொல்வது போலத் தோன்றுகிறது அல்லவா?

" .... அறம் பயன் உரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய்." -- சம்பந்தர் தேவாரம்.

Tuesday, May 8, 2012

தவறுகளைத் திருத்திக் கொள்வோம்


"தவறு பெரிது உடைத்தே தவறு பெரிது உடைத்தே " என்று, தான் இறைவனிடம் வாதாடிய குற்றத்திற்காக வருந்திய  நக்கீரர் தவறு செய்த "மூர்க்க மாக்களைக்"கூற்றம் ஒறுக்காததும் தவறு எனப் பாடுவார். அன்றாட வேலைகளில் பிழைகள் ஏற்படுவது சகஜம் தான். இவற்றில் பெரும்பாலானவை அறியாமல் செய்தவைகளாகக் கூட இருக்கலாம். அதே சமயம்,அப்பிழைகளைப் பிறர் சுட்டிக்காட்டினால் அவற்றைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமே நமக்கு வருவதில்லை.நாம் செய்வது அவ்வளவும் சரியே என்றும் இதைப் பிறர் திருத்துவதாவது என்ற கருத்தும் உடையவர்கள் இருக்கிறார்கள். திருத்த முனைபவர்களும் இதைக் கருத்தில் கொண்டு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. கம்பன் போன்ற புலவர்களும் "அவை அடக்கம்" பாடினார்கள். இப்போது அந்த அடக்கம் காணமல் போய்விட்டதோ என நினைக்க வேண்டியிருக்கிறது. பழைய  புத்தகங்களின் இறுதியில் பிழை திருத்தம் வெளியிடுவதோடு , மேலும் பிழைகளைச் சுட்டிக்காட்டினால் அடுத்த பதிப்பில் திருத்திக்கொள்ள எதுவாக இருக்கும் என்று  விண்ணப்பித்திருப்பார்கள். நூல்களில் பிழைகள் களையப்படவேண்டும் என்று எண்ணிய காலம் அது. ஆனால் , இப்போதோ, " சென்னியில் வைத்த" என்ற வார்த்தையைச் "சென்னையில் வைத்த" என்று தவறாக அச்சிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினாலும் மறுமொழியோ, மாற்றமோ  கிடையாது. இதனால் சலிப்பு ஏற்பட்டு , நமக்கேன் என்று வாளா இருக்க வேண்டியிருக்கிறது.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் தானே கெட்டு விடுகிறான் என்றார் திருவள்ளுவர்.கல்வி கேள்விகளில் மேம்பட்ட மந்திரிகளை இக்காரணம் பற்றியே அரசவையில் வைத்திருந்தார்கள் அரசர்கள். தவறான உச்சரிப்பையே திருத்த முன்வராத இக்காலத்தில் பிற பிழைகளையா திருத்திக் கொள்வார்கள்?  " ள" என்ற எழுத்து "ல" என்றும், "ண" என்ற எழுத்து "ன" என்றும் செய்தி  வாசிப்பவர்களாலும் பிறராலும் உச்சரிக்கப்படுவதை யார்  திருத்துகிறார்கள்?

நிலைமை இவ்வாறு இருக்க, கருத்துக் கணிப்பு என்ற நாடகமும் அவ்வப்போது நடைபெறுகிறது. ஊடகங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. கேட்டால், வித்தியாசமாக எழுதினால் தான் மக்கள் விரும்புகிறார்கள் என்பர். மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது மக்களுக்குத்தானே  தெரியும்? மக்களின் எண்ணங்கள் எத்தனை முறை இவ்வூடகங்களில் பிரதிபலித்திருக்கின்றன? ஒவ்வொரு பத்திரிகையும், தொலைக்காட்சியும் தனக்கென்று விருப்பு வெறுப்புகளை வகுத்துக் கொண்டுள்ளதால் அந்த வரையறைக்கு உட்பட்டே பிறர் சுட்டிக் காட்ட முடியும்.

இதில், சமய உலகின் குறைகள் விமர்சிக்கப்படும் போது விமர்சகர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சமயத்தின் நிறைகள் எழுதப்படும் போது பிற சமயத்தவர்கள் மௌனிகளாக இருப்பினும், குறைகள் வெளிவரும்போது மிகுந்த விழிப்புடன் இருப்பர். எனவே, வேற்றுமைகள் நான்கு சுவர்களுக்கு உள்ளேயே விமர்சிக்கப் படவேண்டும். எங்கு தான் குறை இல்லை? சம்பந்தப்பட்டவர்களும் தாமும் தம்மைச் சார்ந்த சமயமும் பழிக்கு ஆளாகாத வண்ணம் செயல் படவேண்டும். கோயில்களுக்குள்ளும் , மடாலயங்களுக்குள்ளும் தவறு நடக்கக் கூடாது என்று மக்கள் எதிர்பார்ப்பது இயல்பானதும் நியாயமானதும் ஆகும். எனவேதான் ஆலய நிர்வாகிகளும் , மடாதிபதிகளும் தம்மைச் சார்ந்த ஆலயங்களுக்கும், பீடத்தின் பாரம்பர்யத்திற்கும் குந்தகம் ஏற்படாமல் இருக்கவேண்டியது அவசியமாகிறது. பிழை நேர்ந்தது தெரிய வரும்போது மக்கள் சுட்டிக்காட்டவே செய்வர். அவர்கள் மீது பொங்கி எழுவதை விடுத்து, குறையின் மூல காரணத்தை ஆராய்ந்து, அதை உடனே திருத்திக்கொள்ள முன்வருவதே சாலச் சிறந்தது.

நிர்வாகத்தில் குறை ஏற்பட்டால் அரசாங்கம் அந்த நிர்வாகத்தை எடுத்துக்கொள்வது தீர்வு ஆகாது. அரசுக்குச் சொந்தமான ஆலயங்களின் நிர்வாகத்தைத் தான் பார்க்கிறோமே! உண்மையிலேயே குறைபாடுகளைக் களைய விருப்பம் இருந்தால், தக்க சான்றோர்களைத் துனணயாகக்கொண்டு, நெறிமுறைகளை வகுக்க வேண்டும். ஆலயங்களுக்கும் மடங்களுக்கும் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க இது வகை செய்யும். தன்னிச்சையாகச் செயல் படுவதையும் இதனால் தடுக்க முடியும். மரபுகளும் காக்கப்பெறும். செயல் படுத்த முன்வருவார்களா?

விரைந்தேன் மற்று எம்பெருமான் வேண்டியது வேண்டாது
இகழ்ந்தேன் பிழைத்தேன் அடியேன் விரைந்து என்மேல்
சீற்றத்தைத் தீர்த்தருளு தேவாதிதேவனே
ஆற்றவு நீ செய்யும் அருள்.
----- நக்கீரர்.

Thursday, May 3, 2012

கேரளம் வழிகாட்டுகிறது


தொழிற்சாலைகளில் சர்வதேசத் தரம் பற்றிய பயிற்சி அளிக்கப்படும்போது, ஒரு எளிய வழியைக் கையாளச் சொல்வது வழக்கம். மற்றவர்கள் பின்பற்றும் உயர்ந்த உத்திகளை நாமும் கையாளவேண்டும் என்பதே அது. இது ஆலயப் பராமரிப்புக்கும் பொருத்தமாகத் தோன்றுகிறது. அண்மையில் கேரளத்தில் யாத்திரை மேற்கொண்டபோது,அங்கு கண்ட சிறப்பான பல அம்சங்களைத்   தமிழகத்திலும் பின்பற்றலாமே எனத் தோன்றியது.

ஆலயங்கள் சிறப்பாக நடைபெற அரசாங்கமும், பக்தர்களும்,அர்ச்சகர்களும் இணைந்து செயல் பட்டால் மட்டுமே இது சாத்தியம். ஆலயத்திற்குச் சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப் படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்காமல் அவற்றை விற்றுவிட அரசாங்கம் முடிவு செய்திருப்பது துரதிருஷ்டமே. அச் சொத்துக்கள் காலப் போக்கில் மதிப்பு கூடி ஆலயத்திற்கு வலிமை சேர்ப்பதற்காக அமைக்கப்பட்டவை. அவற்றால் வரும் வருவாய் ஆண்டுதோறும் பெருக வேண்டும் என்பதே அதன் நோக்கம். சென்னையில் மெட்ரோ ரயில் தடத்தில் இருந்த ஆலய நிலங்களை விற்பதில் பல கோடிகள் கிடைத்தும் அது அந்த அந்த ஆலயங்களுக்குச் சேர்க்கப்பட்டதா என்பதே கேள்வி. இந்து அறநிலையத் துறையின் பொதுநிதியில் சேர்ப்பதால் என்ன பயன்? ஆலயங்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களே ஏப்பமிடப்பட்டுள்ள கால கட்டத்தில் இப்படியும் ஒரு திட்டம் தேவையா? ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதே அரசாங்கத்தின் கடமையாக இருக்க முடியும்.

ஆலயங்களை மக்கள் எப்படி தூய்மையாக வைத்துக் கொள்ள முடியும் என்பதைக் கேரளத்துக் கோயில்களைக் கண்டவர்கள் நிச்சயம் ஒத்துக் கொள்வார்கள். குப்பைகளையும் , எச்சில் துப்பிய சுவர்களையும், கோயிலுக்குள் சாப்பிட்டுவிட்டு வீசி எறியப்பட்ட இலைகளையும் , துர்நாற்றத்தையும்,மதில்களை ஒட்டிய மூத்திரக்குட்டைகளையும் பார்த்துப் பழகிவிட்டவர்கள் , கேரளத்தைப் பார்த்தாவது கண்டிப்பாகக் கற்றுக்கொள்ள வேண்டும். குருவாயூர் போன்ற நெரிசல் மிக்க ஆலயங்களிலும் எவ்வளவு நேர்த்தியாக தரிசனத்திற்கு ஏற்பாடுகள் செய்கிறார்கள் தெரியுமா? மூத்த குடிமக்களுக்கும் , பெண்களுக்கும் தனி வரிசைகள் குறிப்பிட்ட நேரங்களில் ஒதுக்கப்படுகின்றன. இங்கேயோ வரிசைகள் சிறப்புக் கட்டணத்தைப் பொறுத்தே அமைக்கப் படுகின்றன. அதிலும் விழா நாளன்று இருபத்தைந்து ரூ டிக்கேட்கள் ஐநூறு ரூபாய்க்கு விற்கப்பட்டதாகச் செய்தித்தாள்கள் மூலம் அறிகிறோம்.

விழாக்காலமாக இருந்தால் எங்கு பார்த்தாலும் வழியை மறைத்துக்கொண்டு கடைகள். எங்கும் வியாபாரம். எதிலும் வியாபாரம். உலகத்தில் வேறு எங்குமே கிடைக்காத பொருள்களை வாங்குவதாக எண்ணிக்கொண்டு வளைக் கடைகளின் முன்பு பெண்கள் கூட்டம்.மூர்த்தங்களைத் தொடுவதும் அவற்றிற்குத் தாங்களாகவே தீபம் காட்டுவதும் நந்தியின் காதில் ரகசியம் பேசுவதும் இங்கு அன்றாடும் காணும் காட்சிகள் அல்லவா? நெரிசலான ஆலய வரிசைகளில் நிற்கும் கேரளா மக்கள் இறைவனின் நாமத்தை உச்சரிக்கிறார்கள். அதிகக் கூட்டம் இல்லாத கோயில்களிலோ , நிசப்தமாக மெய்மறந்து நிற்கிறார்கள். விடியற்காலை சுமார் ஐந்து மணிக்கே கோயில்கள் திறக்கப் படுவதால், பலர் ,தலைக்கு நீராடித் தூய்மையான ஆடை உடுத்தி வருவதைக் காணலாம். ஆண்கள் கண்டிப்பாகச் சட்டை அணிவதில்லை. இங்கு அவ்விதம் சொன்னாலோ எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். சம்பிரதாயங்கள் காற்றில் விடப்படுகின்றன.

கேரளா நம்பூதிரிகளின் ஈடுபாட்டை சொல்லியே ஆகவேண்டும். அவர்களால் கோவிலின் சாந்தித்யம் காப்பாற்றப்படுகிறது. உரிய நேரத்தில் , பண்டைய முறை தவறாமல் பூஜைகள் நடக்கின்றன. மூலவரிடத்தில் சுவற்றில் டைல்ஸ் பதிப்பதோ,மின்சார விளக்குகள் அமைப்பதோ அங்கு காண முடியாத ஒன்று. நெய் தீபங்கள் வரிசையாகவும் நேர்த்தியாகவும் ஏற்றப்படுகின்றன. பெரிய ஆலயங்களில் பிராகாரத்தில் எண்ணற்ற தீபங்கள் மாலை நேரங்களில் ஏற்றப்படுகின்றன. மூலவரிடம் தொடர்ந்து அர்ச்சனைகள் மிகுந்த சிரத்தையுடன் நடைபெறுகின்றன. பிரசாதங்கள் , உரிய நபர்களிடம் கைகளிலோ,நெற்றியிலோ தீண்டப்பெறாமல் வழங்கப்படுகின்றன.பக்தர்கள் அவற்றை முழு மன நிறைவோடு பெற்றுச் செல்கின்றனர். அங்கு நதிக்கரைகளில் செய்யப்படும் ஆறாட்டு பூஜை ஒன்றே போதும் , அவர்களின் சிரத்தையைப் பற்றிச் சொல்வதற்கு.

சந்தியாவந்தனம் , ஆத்மார்த்த பூஜை , விபூதி ருத்ராக்ஷம் தரித்தல் , பஞ்சாக்ஷர ஜபம் செய்தல் , வெளியில் சென்று வந்தால் கை-கால்களையும் வாயையும் சுத்தம் செய்து கொண்டு கோவிலுக்குள் நுழைதல் , வருபவர்களிடம் கோவிலின் சிறப்பையும் தலபுராணத்தையும் சொல்லுதல், உரிய காலத்தில் ஆகம விதிப்படி பூஜை செய்தல் ஆகியவற்றை முழுவதும் கடைப் பிடிக்கும் அர்ச்சகர்கள் இங்கும் இருந்தபோதிலும், பலர் இன்னும் முழுமையாகப் பின்பற்ற வேண்டி யிருக்கிறது.
    
ஒரு சில கோயில்களில் இங்கும் பசு மடங்கள் இருந்த போதிலும், கேரளத்தில் யானைகளைக் கூடப் பராமரிக்கிறார்கள் . குருவாயூர் கோவிலுக்கு 64 யானைகள் இருக்கின்றன. அவை யாவும் ஒரு பெரிய தோப்பில் தென்னை மரச் சூழலில் நன்கு பராமரிக்கப்படுகின்றன. அவற்றைக் குளிப்பாட்டத் தனியே சிறு குளம் அமைத்திருக்கிறார்கள். ஒவ்வொன்றாகச் சென்று அங்கு பக்கவாட்டில் படுத்துக் கொள்கின்றன. அவற்றின் உடலைப் பாகன்கள் சுத்தப் படுத்தித் தேய்த்து விடுகிறார்கள். பிராணி நல மருத்துவரும் இருக்கிறார். நம் ஊரிலோ மயில் பூஜித்த தலம் என்று சில மயில்களைக் கூட்டுக்குள் வளர்க்கிறார்கள். சில மாதங்களுக்குப் பிறகு பார்த்தால் கூடு காலியாகக் காட்சி அளிக்கிறது.

கேரளத்தில் பூஜா காலங்களில் வாத்தியங்கள் முழங்கப்படுகின்றன.குறைந்த பட்சம் ஒரு சித்த மத்தளமாவது இசைக்கப் படுகிறது. ஆனால், இங்கோ, காலம் காலமாக இசைக்கப்பட்டுவந்த நாதஸ்வரத்தையும்,மேளத்தையும் சில கோவில்களில் மட்டுமே காண்கிறோம். திருச்சூர் திருவம்பாடி கிருஷ்ணன் கோயிலில் சன்னதியில் பூஜைக்காகத் திரையிடப்பட்டிருந்தபோது, ஒருவர்  சித்த மத்தளத்தில் தனி ஆவர்த்தனமே வாசித்து அனைவரையும் மெய்மறக்கச்செய்து விட்டார்.

யாத்ரீகர்கள் தங்கும் விடுதியையும் சிற்றுண்டிச் சாலையையும் குருவாயூரில் எவ்வளவு சிறப்பாகப் பராமரிக்க முடியுமோ அத்தனைச் சிறப்பாகப் பராமரிப்பதை நேரில் கண்டு அதை இங்கும் செயல் படுத்த வேண்டும். இவ்வளவுக்கும் லஞ்சம் போன்ற குறுக்கு வழிகளை அங்குக் காண்பது மிகவும் அரிது. பல இடங்களில் கோயிலிலும் வெளியிலும் அன்ன தானம் நிறையச் செய்கிறார்கள்.சில இடங்களில் தினமும் பாயசத்தோடு நல்ல சாப்பாடு பரிமாறப்படுகிறது. அங்கும் ஒரு சில குறைகள் இருக்கலாம். நிறைகள் ஏராளமாக இருக்கும்போது அவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?

         "Just follow the best practices of others" என்ற வழிகாட்டி ,கோயில் பராமரிப்பிற்கும் மிகவும் தேவையான ஒன்று தானே?