Friday, December 23, 2011

கோயில் யானைகள்

யானையை எத்தனை நேரம் பார்த்துக்கொண்டிருந்தாலும் அலுக்காது என்பது என்னவோ உண்மை தான். பக்தர்கள் அதனை வினாயகராகவும் ,குழந்தைகள் அதை வியப்புடனும் பார்க்கின்றார்கள். பெரிய கோயில்களில் நுழைந்தவுடன் யானையைப் பார்த்துவிட்டுத்தான் சுவாமி தரிசனத்திற்குப் போகிறோம். அது நம் தலையைத் தொடும்போது ஏற்படும் அனுபவம் தனிதான். சிறு குழந்தைகளை அழ-அழ அதன் மத்தகத்தின் மீது ஏற்றி உட்கார வைத்துவிட்டுக் கீழே இறக்குவார்கள் பாகன்கள். கேரளத்தில் சுமார் ஐநூறு கோயில்களில் யானைகள் பராமரிக்கப் படுகின்றன என்கிறார்கள். தமிழகத்திலும் பெரிய தேவஸ்தானங்களில் யானைகள் இருக்கின்றன.

அரசர்கள் காலத்தில் யானைகள் வெறும் காட்சிப் பொருளாக மட்டும் இல்லாமல் போருக்குச் செல்பனவாகவும் இருந்தன. அரசன் யானை மீதிருந்தே போரிட்டு மாண்டால் "யானை மேல் துஞ்சிய தேவர்" என்று சிறப்பிக்கப் படுகிறான். மேலும், எடையுள்ள பொருள்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்லவும் யானைகள் பயன் படுத்தப்பட்டன. காட்டில் வெட்டப் பட்ட மரங்களை நதிக்கரைக்கு இழுத்துச் செல்ல யானைகள் உபயோகிக்கப்பட்டன. யானைகளின் லக்ஷணங்கள், அவற்றைக் கையாளும் முறைகள் பற்றி நூல்களும் இயற்றப்பட்டன. கோயில்களுக்கென்று விடப்பட்ட யானைகள் அருகிலுள்ள நதியிலிருந்து திருமஞ்சனம் கொண்டுவரவும், திருவிழாக்களுக்கும் பயன் படுத்தப்பட்டன. சில ஆலயங்களில் கஜ பூஜைகள் நியமத்துடன் நடைபெற்றன.இன்னும் சொல்லப்போனால், குருவாயூர் ஆலயத்திலிருந்த கேசவன் என்ற யானையின் படம் பல வீடுகளில் பூஜை அறையை அலங்கரிக்கிறது.

தற்காலத்தில் கோயில் யானைகளின் நிலையைப் பற்றி சிறிது சிந்திக்க வேண்டி இருக்கிறது. காட்டில் வாழ வேண்டிய பிராணியை நாட்டில் வளர்ப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. " யானையைக் கட்டித் தீனி போடுவது போல" என்றும், "யானை பசிக்கு சோளப்பொரியா?" என்றெல்லாம் உதாரணம் காட்டிப் பேசுகிறோம். கோயில் யானைகள் வயிறார சாப்பிடுகின்றனவா என்று பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஆறுகளில் அமிழ்ந்து குளிக்க வேண்டிய யானைகளை கோயில் வளாகத்தில் குழாய் நீரால் குளிப்பாட்டுகிறார்கள். பிறகு கோயிலைச் சுற்றி ஒரு வலம். கொடிமரத்தடியில் நின்று சன்னதியை நோக்கி துதிக்கையால் வணக்கம் தெரிவித்து விட்டு மடப்பள்ளி வாசலுக்கு அழைத்துச் செல்லப் படுகிறது. மூன்று நான்கு உருண்டைகளாக சாத உருண்டைகள் வாய்க்குள் திணிக்கப் படுகின்றன. அதன் பிறகு இருக்கவே இருக்கிறது, கொடிமரத்தருகில் போடப்பட்ட தென்னை மட்டையைத் தின்றபடியே, வருவோரிடம் பாகனுக்காக எடுக்கப்படும் பிச்சை. ஒரு காலையும் கனத்த இரும்புச் சங்கிலியால் கட்டிவிடுகிறார்கள். அப்படிக் கட்டப் படும் காலும் காலின் அடிப்புறமும் எவ்வாறு பாதிக்கப் பட்டிருக்கின்றன என்பதை நேரில் பார்த்தவர்கள் அறிவார்கள்.

பழக்கப் படுத்தப்பட்ட யானைகளே சில சமயம் மிரளுவதும், மதம் வந்து ஓடுவதும் உண்டு. இந்தமாதிரி சமயங்களில் பல பாகன்கள் உயிர் இழந்திருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு யானை, பாகனை மிதித்துத் துதிக்கையால் வீசியெறிந்து கொன்றதாகச் செய்தி வெளியாகி இருந்தது. இவ்வளவும் நடந்தும். யானையின் அருகில் பலத்த வெடி சப்தமும்,வான வேடிக்கையும், செண்டா போன்ற வாத்தியங்களும் தொடர்ந்து முழங்குகின்றன. விழாக்காலங்களில் யானையைச் சுற்றி மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அப்போது யானை மிரண்டால், மக்களே ஒருவர்மேல் ஒருவர் மிதிபட்டு உயிர் இழக்கும் அபாயம் இருக்கிறது. பத்திரிகைகளிலும் இன்டர்நெட்டிலும் படங்களோடு செய்திகளும் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன(அவற்றில் ஒரு சில படங்களையே இப்பதிவில் காண்கிறீர்கள்.அவர்களுக்கு நம் நன்றி உரியது.)

தமிழக அரசு, கோயில் யானைகளைப் புத்துணர்ச்சி(!) முகாமுக்காக 48 நாட்கள் முதுமலை காட்டில் பாகன்களோடு அனுப்பி வைக்கிறது. இவற்றை லாரிகளில் ஏற்றும் சிரமம் ஒரு பக்கம். திரும்பிவந்தபிறகும் இதே உண்டைகட்டியும், கால்சங்கிலியும் தொடரும் தானே? இங்குதான், தற்கால சூழ்நிலையில் கோயில்களுக்காக யானைகள் தேவைதானா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. திருவானைக்காவல் போன்ற யானை வழிபட்டதாகப் புராணங்களில் கூறப்படும் தலங்களில் மட்டும் அந்த ஐதீகத்திற்காக யானைகள் பராமரிக்கப்பட்டால் போதும் என்று தோன்றுகிறது. ஒரு யானையைப் பராமரிக்க ஆகும் செலவில் பல பசுக்களைக் கோயில்வளாகத்தில் வளர்க்கலாம். அவற்றால் பயனும் உண்டு.(யானையால் என்ன பயன் என்பது வேறு விஷயம்) . மக்களுக்கு-- குறிப்பாக பாகன்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தைத் தவிர்க்கவும் முடிகிறது. பசுமாடுகளைப் பராமரிக்க ஒரு சிலரை நியமிக்கலாம். கால நடை மருத்துவர் மூலம் அவற்றின் நலனையும் பேணலாம். யானைகளுக்கும் சித்திரவதையிலிருந்து சுதந்திரம் கிடைக்கும். அவற்றிற்கு உண்மையிலேயே "புத்துணர்ச்சி" கிடைக்கும். அரசாங்கப் பணமும் மிச்சமாகும்.

2 comments:

  1. As Go Puja, Ashva Puja and Gaja Puja is also auspicious and a valid tradition. So keeping elephants should be continued. It is a misconception that they are fed well in forests rather than in a protected environment. We drive self supporting systems and feel certain customs are unnecessary. Cow Slaughter cannot be banned in practice because the cattle owners feel it is too much to maintain them once they stop giving milk. Our outlook should transform and not just the animals. If this transformation happens then everything becomes possible even in times of scarcity.

    ReplyDelete
  2. It is not a misconception about forest life. Nature has balanced lives there for centuries and it will continue to do so.Man has exploited animals for his own needs and tried to tame even wild animals. The post is mainly addressed to the paucity of funds that becomes a stumbling block in maintaining the temples. When the resources are getting dried up, maintaining an elephant becomes an uphill task. Moreover, the mahouts are put under unnecessary risk.

    ReplyDelete