Tuesday, October 25, 2011

நல்ல பண்புகள்


தீபாவளி என்றவுடனேயே நமக்கு நினைவுக்கு வருபவை புதிய ஆடைகளும், பட்சணங்களும், பட்டாசுகளுமே தான்.
சிலருக்கு நரகாசுரன் கதையும் நினைவுக்கு வரலாம். இன்னும் சிலருக்கு டீ.வி.யில் காட்டப்படும் சிறப்பு நிகழ்ச்சிகளும், திரைக்கு வரும் படங்களும் கூட ஞாபகம் வரும். ஆனால் நமக்கு நினைவுக்கு வராத எவ்வளவோ இருக்கும்போது அவற்றையும் சிறிது சிந்திக்க வேண்டியிருக்கிறது.


தீபாவளி வந்துவிட்டதே, எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று கவலையில் ஆழ்ந்திருக்கும் குடும்பங்கள்.

எல்லாம் இருந்தும் நோய்வாய்ப்பட்டு அன்றைய தினம் ஆஸ்பத்திரியில் இருப்பவர்கள்.

குடும்பத்தவர் காலம் சென்றதால், ஓராண்டு பண்டிகை கொண்டாடாமல் இருப்பவர்கள்.

குடும்பத்திலிருந்து தனித்து விடப்பட்டோர்.

குடும்பத்தைப் பிரிந்து அயல் நாட்டில் தனியே வசித்து வேலை செய்பவர்கள்.

உற்றார் உறவினர் இருந்தும் பாசம் என்பதையே அனுபவிக்காதவர்கள்.

வசதிபடைத்த வீட்டுப் பையன்கள் முகத்தையே பாவமாகப் பார்த்துக் கொண்டு அவர்கள் வெடித்துச் சிதறிக் கிடந்த வெடிகளைப் பொறுக்கிக்கொண்டுபோய் தானும் வெடிக்க ஆசைப் படும் ஏழைச் சிறுவர்கள்.

போரில் சிறைக்கைதிகளாகப் பிடிபட்டு அயல்நாட்டுச் சிறைகளில் இருக்கும் நமது ஜவான்கள்.


இப்படிப் பலதரப்பட்ட மக்கள் தீபாவளியை இன்பமாகக் கொண்டாடமுடியாமல் துன்பப்படுகிறார்கள்.
இவர்களைப் பற்றி எண்ணுவதாலும். ப்ரார்த்திப்பதாலும் அத்துன்பச்சுமை உடனே குறையப் போவதில்லை என்றாலும், நமக்கு இரக்க குணம் ஏற்பட வகை செய்கிறது அல்லவா? இந்த குணம் இல்லாததால் தான்
தற்காலத்தில் சுயநலம் ஓங்குகிறது. இல்லாதவனுக்கு இரக்கப்படுவதும் அவனுக்கு உதவுவதும் இருப்பவனது கடமை. இல்லாதவர்கள் பலராக இருப்பதன் காரணம் முற்பிறவியில் அவர்கள் நல்வினைகளைச் செய்யாததால்தான் என்கிறார் திருவள்ளுவரும்.

நமக்கு நல்ல குணங்கள் வர வேண்டும் என்று ஈச்வரனைப் பிரார்த்திக்க வேண்டும். " அடியார்க்கு என்றும் குணங்களைக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே." என்று அப்பர் தேவாரம் சொல்கிறது.

"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்று திருமூலர் பாடியருளியதுபோல், நாமும் சிந்திப்போமானால் நமது எண்ணங்கள் உயர்ந்தவை ஆகும்.

ஜனங்களின் நல்ல குணங்கள் போய்விடக்கூடாதே என்று கவலைப் படும் விதமாக 1949 ம் வருடம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பெரியவர்கள் ஆற்றிய உரையை 19.5.2004 தேதியிட்ட "துக்ளக்" இதழ் வெளியிட்டிருந்தது. அதிலிருந்து ஒரு பகுதி இங்கு தரப்படுகிறது:


" பொது ஜனங்களுக்கு நற்குணங்கள் அதிகரிக்கவோ, அவர்கள் தர்ம மார்க்கமான புண்ய மார்கத்தில் போய் ஈசன் அருளை அடையவோ ஜனநாயகம் உதவுகிறதா அல்லது ஜனங்களைக் கெடுத்து சிலருடைய நலனை மட்டும் பேணுவதற்கு சகாயம் செய்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். "Of the people,by the people,for the people" என்றெல்லாம் என்னென்னவோ
சொல்கிறார்களே, அதெல்லாம், விஷயம் தெரியாத மக்களால், விஷயம் தெரியாத (ஆனால் சுய நலம் தெரிந்த) மக்களைக் கொண்டு, அவர்களைச் சேர்ந்த சில மக்களுக்காகவே அமைத்த சர்க்கார் என்பதாக முடிந்துவிடுமோ என்று கூடப் பயப்படும்படி இருக்கிறது. உத்திர மேரூர் சாசனத்தில் உள்ள எல்லா clause க்கும் ஷரத்துக்களுக்கும் அடிப்படை , வேட்பாளருக்கு அர்த்த சுத்தியும்,ஆத்மசுத்தியும் இருக்க வேண்டும் என்பதே.  தற்போது குற்றவாளி என்று நிரூபணம் ஆனவரைத்தவிர எவரும் வேட்பாளராக நிற்க முடியும். இப்போது நடக்கிற மறைமுகக் குற்றங்களுக்கோ எல்லை இல்லை.பெரிய தப்புகள்கூட, சாமர்த்தியமாகப் பண்ணிவிட்டு சாட்சியம் போதவில்லை என்று தப்பிவிட முடிகிறது.
பிரஜைகள் அத்தனை பேரின் அர்த்த,ஆத்ம சுத்திகள் கெட்டுப்போக வழி செய்து கொடுக்கும்படியாக இப்போது தேர்தல் முறை செய்யப்பட்டிருக்கிறதே  என்பதை நினைத்தால் மிகவும் கவலையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. வெகுகால வெள்ளைக்கார ஆட்சிக்குப் பிறகு, இப்போது சுதந்திரம் கிடைத்திருக்கும்போது, எல்லோரும்
நிதானம் இல்லாமல்,கட்டுப்பாடு இல்லாமல்,விவஸ்தை இல்லாமல் கிளம்புவதற்கு இடம் ஏற்பட்டிருக்கிறது. உலகத்திலேயே பெரிய ஜனநாயகம் என்று பெருமை காட்டுவதற்காக தர்மத்தில் சிறுமை அடைந்துவிட்டால் நம்முடைய ஜனநாயக வேஷம், பிராணன் போன உடம்புக்கு அலங்காரம் செய்கின்ற மாதிரி தான். நான் பாலிடிக்ஸ் பேசப்படாதுதான். ஆனால் பாலிடிக்ஸ் தர்மத்திலே வந்து முட்டி மோதி, நம்முடைய ஜனங்களின் நல்ல பண்புகளை எல்லாம் அடித்துக் கொண்டு போய்விடுமோ என்ற நிலை ஏற்படும்போது, தர்ம பீடங்களாகவே மடங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறதால்,எப்படி வாயை மூடிக்கொண்டிருப்பது? "

அறுபது ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ பெரியவர்கள் கவலை தெரிவித்தார்கள். அதுவோ சுயநலத்தின் ஆரம்பகாலம். இப்போதோ அது வேரூடிக் கிடக்கிறது. உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் மக்கள் நல்ல பண்புகளை உடையவர்களாக இருக்க வேண்டியது அவசியம். தீபாவளி கொண்டாடும் நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் இதை சிந்திக்க வேண்டும்.

பிறர் நலம் பற்றி அக்கறை கொண்டால் தேசநலம் ஏற்பட்டு விடும். அப்படிப்பட்ட ஞானத்தை, ஞான பரமேச்வரனாகிய தக்ஷிணாமூர்த்தி நமக்கெல்லாம் அருள வேண்டும்.

                       "வையகமும் துயர் தீர்கவே." --- சம்பந்தர் தேவாரம்.

Friday, October 21, 2011

தீபாவளி சிந்தனை

"சோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே" என்று பரமேச்வரனைத் துதிக்கிறது திருவாசகம். பிரதி மாதமும் அமாவாசைக்கு முன் வரும் சதுர்த்தசியன்று மாத சிவராத்திரியாக அப்பெருமானை ஆராதிக்கிறோம். தீபாவளி அமாவாசைக்கு முன் வரும் சதுர்த்தசியும் அவனை ஆராதிப்பதறகாகவே ஏற்பட்டது. மாசியில் வருவது மகாசிவராத்திரியாக மிகப் பிரபலமாகக் கொண்டாடப்படுகிறது. தென்னாட்டில் கார்த்திகை தீபத்தன்று வீடுகளில்
தீபம் ஏற்றி வழிபடுவதைபோல வடநாட்டில் தீபாவளியன்று மக்கள் விளக்குகளை வரிசையாக ஏற்றி ஒளிமயமாக்குகிறார்கள். சோதியுள் சோதியாக ஈச்வரன் இருப்பதாகத் திருவிசைப்பாவில் வருகிறது. அது யாரோ ஏற்றிவைத்த ஜோதி அல்ல. ஸ்வயம் ஜோதி.அவனே ஸ்வயம் பிரகாசன். அது இருளை அகற்றும் சாதாரண விளக்கு அல்ல.கோவிலில்
விளக்கு ஏற்றினால் ஞானம் பெறலாம் என்று அப்பர் சுவாமிகள் சொன்னார் அல்லவா? ஆகவே, இந்த விளக்கு நமது மனத்தில் உள்ள அஞ்ஞானமாகிய இருட்டை நீக்கும் ஞான விளக்கு. ஞானம் கிடைத்துவிட்டால் நல்ல அறிவும் பெற்றுவிடுவது சுலபமாக
ஆகி விடுகிறது. "அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்அறிவே:" என்று மாணிக்கவாசகரும் பாடினார்.

தீபாவளியைக் கொண்டாடும் சமயத்தில் நாம் ஜோதிஸ்வரூபனாக இருக்கும் ஈச்வரனைத் தியானிக்க வேண்டும். அன்றைய தினம் சிவாலயத்திற்குச் சென்று தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இயன்றவர்கள் சுவாமிக்குப் புது வஸ்த்திரம் வாங்கித்தந்து சமர்ப்பிக்கலாம்.
நமக்குப் புதுத் துணிமணிகள் வாங்கும் வசதி தந்த தெய்வத்துக்கு நாம் நன்றி செலுத்தும் விதமாக இதுகூடச் செய்யாமல் இருக்கலாமா? அதிலும் முக்கியமாக ஒரு கால பூஜையோ அல்லது அதுகூட இல்லாமலோ கவனிப்பார் அற்று இருக்கும் பழங்காலக் கிராமக் கோயில்களுக்கு
இதைச் செய்யலாம். சிறந்த சிவபுண்ணியமும் கூட. அன்றைய தினம் எந்த கிராமக் கோயிலும் மூடியிருக்கக் கூடாது. இதுவே சுவாமியிடம் அன்றைய தினம் நாம் செய்யும் பிரார்த்தனை.

இன்னொரு முக்கியமான சிந்தனையையும் இங்கு பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது..நம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம், தற்காலத்தில் விலைவாசிகள் விஷம் போல ஏறுவதால் குடும்பம் நடத்துவது எவ்வளவு சிரமம் என்பது. ஆள் கூலியும் நாள் ஒன்றுக்கு முந்நூறுக்கு மேல் நானூற்று ஐம்பது வரை ஆகிறது. நிலைமை இப்படி இருக்க, கிராமக் கோயில்களில் பூஜை செய்பவர்களுக்கு மாதம் முன்னூறு ரூபாய் சம்பளமே தரப் படுவதை, அரசாங்கமோ,பொது மக்களோ கண்டுகொள்வதில்லை. வெளியூர்க்காரர்கள் திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் செய்து கொடுத்தபின்பும் ஊர்மக்கள் ஒன்று கூடி அர்ச்சகருக்கு ஐயாயிரம் ரூபாயாவது மாத வருமானம் கிடைக்க வழிசெய்யலாம் அல்லவா? சில ஊர்களில் மண்டலாபிஷேகம் செய்யக்கூட
உள்ளூர்வாசிகள் முன்வருவதில்லை. இச்செய்கைகள் மூலம் மனம் நொந்துபோய் ஊரை விட்டே வெளியேறி வயிற்றுப் பிழைப்புக்காக வெளியூர் செல்லும் அர்ச்சகர்களுக்கு யார் ஆதரவு தரப் போகிறார்களோ தெரியவில்லை. பல பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் பூஜைக்கு அர்ச்சகர் இல்லாத அவல நிலை உருவாகிறது. ஒரு கிராமத்தில் நூறு வீடுகள் இருந்தால், மாதம் ஒரு வீட்டுக்கு நூறு ரூபாய் தந்தால் பத்தாயிரம் ரூபாய் கிடைக்கும். அதில் பாதியை அர்ச்சகருக்கு சம்பளமாகவும்,மீதியை வங்கியில் சேமித்து, கோயிலை நிர்வகிப்பதற்கும் வைத்துக் கொள்ளலாம் அல்லவா? கேபிள் டீவி க்கு மாதம் அலட்சியமாக நூறு ருபாய் தருபவர்கள் இந்த சிவ தர்மத்தையும் செய்தால், அவர்கள் குடும்பமும் நன்றாக இருக்கும், கோவிலையே நம்பியிருக்கும் குடும்பத்தையும் காப்பாற்றலாம். கோவிலும் பூஜைகள் நின்று பூட்டப்படுவது தவிர்க்கப்படும். ஒவ்வொரு கிராமத்திலும் நல்ல மனம் கொண்ட ஒருவராவது முன்வந்து கிராமவாசிகளுக்குப் புரியும்படியாக எடுத்துச் சொல்லி கோவில்களில் விளக்கேற்றலாம் தானே? சிவனருளே இதற்குத் துணைசெய்யவேண்டும்.

Tuesday, October 4, 2011

தலையாலங்காட்டில் தலையாய திருப்பணி




சிவாலயங்களில் திருக்குளத்தையும் நந்தவனத்தையும் பராமரிப்பது குறித்து எழுதியிருந்தோம். இதை உடனடியாகச் செயல்படுத்துவதே ,பிறருக்கும் இதில் ஆர்வம் ஏற்பட உதவியாக இருக்கும் என்று எண்ணியபடியால் கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியிலுள்ள தலையாலங்காடு என்ற தலத்தில் முதலாவதாகத் துவங்கத் திருவருள் கூட்டியது. இக் கோயிலில் திருப்பணி வேலைகள் துவங்கிச் சில ஆண்டுகள் ஆகியும் நிறைவேறாமல் மெதுவாக நடைபெற்று வருகின்றன. நாமும் நம்மால் இயன்ற அளவில் இச்சிவ புண்ணியத்தில் பங்கேற்க வேண்டும். நமது சந்ததிகளும் இதைப் பின்பற்றவும் நற்கதி பெறவும் கிடைக்கும் அரிய வாய்ப்பை நழுவ விடக் கூடாது.


பல ஆண்டுகளுக்கு முன்பு , அருகில் உள்ள செம்பங்குடிக்கு விஜயம் செய்திருந்த ஸ்ரீ காஞ்சி காமகோடிப் பெரியவர்கள் தினமும் விடியற்காலை ஐந்து மணிக்கு இக் கோயிலுக்கு வந்து எதிரில் உள்ள சங்க தீர்த்தத்தில் ஸ்நானம் செய்துவிட்டு, ஸ்ரீ நர்தனபுரீஸ்வரர் சன்னதியைப் பதினொரு முறை வலம் வருவார்களாம்.இப்படியாக ஒரு மண்டல காலம் தினசரி தரிசனத்திற்கு வந்ததாக ஊர்ப் பெரியவர்கள் சொல்கிறார்கள். இதுபோல் நாமும் பிரதக்ஷிணம் செய்ய வேண்டும் என்பதைத், தானே அனுசரித்துக் காட்டினார்களோ என்று தோன்றியது. எனவே நாம் அங்கு தரிசனத்திற்காகப் போகும்போது பதினொரு பிரதக்ஷிணம் செய்யும்படி எண்ணம ஏற்பட்டதால் அவ்விதமே நம்மை செய்வித்ததும் அவன் அருள் தான்.


அதேபோல நந்தவனப் பணியையும் துவங்கத் திருவருள் கூட்டியது. நித்திய பூஜைக்குத் தேவையான அரளி, பாரிஜாதம் (பவழ மல்லிகை) , செம்பருத்தி போன்ற மலர்ச் செடிகளின் கன்றுகளையும், வில்வம், வன்னி போன்ற மரக் கன்றுகளையும் வாங்கிவந்தோம். அவற்றை நடுவதற்கு முன் வெளி பிராகாரத்தில் செடிகளும் புதர்களும் அகற்றப்பட்டன. செடிகளுக்கு தினந்தோறும் நீர் ஊற்றி வளர்ப்பதற்காக நூறு அடி நீளமான ஹோஸ் வாங்கித்தரப்பட்டது. ஆடு மாடு முதலியவற்றால் செடிகள் அழியாமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப் படும். மழைக் காலம் துவங்க இருப்பதால் செடிகளும் கடும் வெய்யில இல்லாததால் நன்கு வளர எதுவாக இருக்கும்.


கோயிலுக்கு எதிரில் உள்ள சங்க தீர்த்தம் தீராத நோய்களையும் தீர்க்க வல்லது. தோல் சம்பந்தமான வியாதிகளால் அவதிப் படுவோர் பலர் இதில் ஸ்நானம் செய்து நோய் நீங்கப் பெறுகிறார்கள் என்பது அனுபவத்தால் காணும் உண்மை. குளத்தில் அல்லி மலர்கள் அழகாகக் காட்சி அளிக்கின்றன. படித்துறை சில இடங்களில் செப்பனிட வேண்டியுள்ளது. தூய்மைசெய்யும் பணி ஓரிரு தினங்களில் துவக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


திருப்பணி வேலைகள் துரிதமாக நடைபெற அன்பர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. வரும் தை மாதத்தில் கும்பாபிஷேகம் நடைபெறுவதானால் இப்பணிகள் இன்னும் மூன்று மாதங்களுக்குள் நிறைவேற்றப்படவேண்டும். குளத்தங்கரை விநாயகர், கோஷ்ட துர்க்கை, திருஞான சம்பந்தர் சுப்பிரமணியர்,கஜலக்ஷ்மி, ஆகிய மூர்த்திகள் நூதனமாகச் செய்யப்பட்டுப் பிரதிஷ்டை செய்ய வேண்டும். சுவாமி அம்பாள சன்னதிகளின் முன்பு தளவரிசை செய்ய வேண்டியிருக்கிறது. இத்தலத்து விசேஷ மூர்த்தியான அனுக்ரஹ சனி பகவான் சன்னதியைப் புனரமைக்க வேண்டும். மடப்பள்ளி மேற்கூரை பழுதடைந்துள்ளது. ஸ்தல வ்ருக்ஷ மேடை, சுவாமிக்குப் பின்னால் திருமாளிகைப்பத்தி மேடை ஆகியவை அமைக்கப் படவேண்டும். கோவிலின் உட்பகுதியில் மின்சார இணைப்பு மிகவும் பழுதாகியுள்ளது. இதை முற்றிலும் புதுப்பிக்கவேண்டும்.


அப்பர் சுவாமிகளின் தேவாரப் பதிகம் பெற்ற இப்புராதனமான கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. புதிய கோயில்கள் கட்டுவதில் ஆர்வம காட்டுபவர்கள் இதுபோன்ற ஆலயங்களின் திருப்பணிக்கும் உதவலாமே. சிவனருள் அதுபோன்ற சிந்தனையை வழங்குமாறு பிரார்த்திப்பதைத் தவிர நாம் வேறு என்ன செய்ய முடியும்? இதன் மூலம் கிராமங்களில் எஞ்சியிருக்கும் மக்களுக்கு ஆலய மகிமை தெரிய வருவதோடு, பராமரிக்கவேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்பட வகை செய்யும். இப்போது நடந்துவரும் ஓரிரு கால பூஜைகளும் அறவே நின்றுவிடாதபடி காப்பாற்றப்படவேண்டும். புராதன ஆலயத் திருப்பணிக்காகப் பலரும் தம்மை அர்ப்பணிக்க முன்வர வேண்டும்.


தலையாலங்காடு ஆலய அமைப்பு மற்றும் தல புராணம் பற்றிய விரிவான தகவல்கள், நமது மற்றொரு பதிவான, "சிவார்ப்பணம்.ப்ளாக்ஸ்பாட்.காம் " என்ற முகவரியில் வெளியிடப்படும். மேலும் விவரங்களை அறிய விரும்புவோர், 9443500235 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.