Thursday, December 9, 2010

ஆதி சைவர்களைப் போற்றுவோம் - II

உலக நன்மைக்காக ஆலயங்களில் செய்யப்படும் பூஜையைப் பரார்த்த பூஜை என்பார்கள். இதைச் செய்யும் உரிமை உடையவர்கள் குருக்கள்/பட்டர் என்று தற்காலத்தில் வழங்கப்படும் ஆதிசைவப்பெருமக்களே ஆவார்கள். மாதொரு பாகனுக்கு வழிவழி அடிமை செய்யும் இக்குலம், கிராமப்புறங்களில் ஆதரவின்றி அல்லல் படுவதைக் காண்கிறோம். அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக, நமது சபை , பழமை வாய்ந்த கிராமக் கோயில்களில் நீண்ட காலமாகப் பணியாற்றும் சிவாசார்யார்களை அவர்களது மனைவிமார்களோடு ஒரு சிவாலயத்திற்கு வரவழைத்து , அவர்களை ர்ச்சித்து, புத்தாடைகளும் பண உதவியும் செய்து இயன்றவரை தொண்டாற்றி வருகிறது. இந்த வகையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஐந்து சிவாச்சாரியார்கள் கௌரவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டிசெம்பர் 4- அன்று வைதீஸ்வரன் கோயிலில் இருந்து மணல்மேடு செல்லும் வழியில் உள்ள தலை ஞாயிறு என்ற ஸ்தலத்தில் மேலும் நான்கு ஆலயத்தைச் சேர்ந்த சிவாச்சார்யர்கள் கௌரவிக்கப்பட்டனர்.


சூரியன் வழிபட்டதால் தலைஞாயிறு எனப்பட்ட இத்தலம், தேவாரத்தில் திருக்-கருப்பறியலூர் எனப்படுகிறது. மீண்டும் பிறவிக்கு ஏதுவான கருவை பறித்து முக்தி தருவதால் இப்பெயர் பெற்றது. சீர்காழிக்கு மேல் திசையில் இருப்பதால் மேலக்காழி எனப்படுகிறது. சீர்காழியைப் போலவே இங்கும் மேல் அடுக்குகளில் உமாமகேஸ்வரர், சட்டைநாதர் சன்னதிகள் உள்ளன. ஸ்தல விருக்ஷம் கொகுடி முல்லை ஆதலால் கொகுடிக் கோயில் எனப்படுகிறது. சம்பந்தர்,சுந்தரர் ஆகிய இருவர் தேவாரப் பதிகங்களும் இதற்கு உண்டு. இச்சோழர் கால ஆலயம் , மேல் தளம் பழுதடைந்து, மழை நீர் ஒழுகுவதால், உடனடியாகத் திருப்பணி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.

விழா நாளன்று பலத்த மழை விடாது பெய்துகொண்டிருந்ததால், சாலைகள் மிகவும் சேதமாகி, மழை நீர் தேங்கிக் கிடந்தன. கால தாமதம் ஆனபோதிலும், திருச்சிற்றம்பலம், ஆத்தூர்,கொண்டல் ஆகிய கிராமத்துக் கோயில்களின் சிவாச்சார்யார்கள் தமது மனைவியருடன் தலைஞாயிறு கோயிலுக்கு வந்து சேர்ந்தனர். கடலங்குடி ஆலய அர்ச்சகர் மட்டும் வர இயலவில்லை.

ஸ்ரீ அபராத க்ஷமாபநேஸ்வரர் (குற்றம் பொறுத்த நாதர்) மற்றும் ஸ்ரீ கோல்வளை நாயகிக்கு அபிஷேகங்கள் மிகச் சிறப்பாக , ஸ்ரீ ருத்ரம் , சாமவேத , திராவிடவேத பாராயணத்துடன் நடைபெற்றது. சுவாமி-அம்பாளுக்கு புது வஸ்திரங்கள் சார்த்தி அலங்காரம் செய்யப்பட பின், சுவாமிக்கு ஸ்ரீ ருத்ர த்ரிசதி அர்ச்சனை, வில்வ தளங்களைக்கொண்டு ஒரே நேரத்தில் ஐந்து சிவாச்சர்யர்களால் செய்யப்பட்டு, ஐந்து பேராலும் பஞ்சமுக தீபாராதனை செய்யப்பட்டது.

பின்னர் நான்கு சிவாசாரிய தம்பதிகளை அமரவைத்து, அந்த அந்த ஊர் சுவாமி- அம்பாள் எனப் பாவித்து, அர்ச்சனை,தூப தீபங்கள் செய்யப்பெற்றன. புதிய வஸ்திரங்கள் வழங்கப்பெற்று, ஒவ்வொரு தம்பதிக்கும் ரூ 2000 சம்பாவனையாக அளிக்கப்பெற்றது. இதற்கு உறுதுணையாக இருந்த ஸ்ரீ பாஸ்கர், ஸ்ரீராம்,கணேஷ், கோமதிநாயகம் , சந்திரமோகன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. அவர்களுக்குச் சிவனருள் மேலும் பெருகுவதாக. இச்சிவ புண்ணியத் தொண்டு தொடர்ந்து நடைபெற அடியார்கள் உறுதுணையாக நிற்பார்கள் என்பதில் ஐயமில்லை. இத்தனைக்கும் மூல காரணமாக இருந்து அருள் வழங்கும் தோன்றாத்துணை யாம் பரமேச்வரன் , நம் குற்றங்கள் யாவற்றையும் பொறுத்துக் குணங்களை வழங்கப் பிரார்த்திக்கிறோம்.

2 comments:

  1. மிகவும் அருமையான பணி, தங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் , நம் பெருமானுக்கு பணி செய்யும் சிவாச்சாரியார்களை போற்றுவோம்.
    நன்றி.

    தர்மா

    துன்பங்களை நீக்கி இன்பங்களை பெருக்கும் தேவார பாடல்கள் – புதிய வெளியீடு
    www.devarathirumurai.blogspot.com

    ReplyDelete
  2. a very very noble job wonderfully and mediculously executed. May the Sat chit ananda swarupa aadalvallan, kunchitha pathan bestow all the needs that you may require for more and more such activities.
    ellam siva mayam.
    vidyasagar

    ReplyDelete