Saturday, September 25, 2010

நம்புவோம் நலம் பெறுவோம்

புராணங்களில் வரும் அற்புதங்கள் சிலருக்கு அதிசயமாகவும் சிலருக்கு ஆச்சர்யமாகவும் இன்னும் சிலருக்கு சந்தேகத்தையும் தரக் கூடும். அப்படி அற்புதங்கள் நிகழ்த்தியபோது பாடிய தேவாரப் பதிகங்களை அற்புதப் பதிகங்கள் என்கிறோம். திருவையாற்றுக்கு சுந்தரர் , சேரமான் பெருமாள் நாயனாரோடு வந்த போது ஒரு அற்புதம் நடந்தது. அகண்ட காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டு இருந்தது. ஆற்றின் தென் கரையில் இருந்த இருவருக்கோ அதைத் தாண்டி மறு கரை வந்து ஐயாரப்பரைத் தரிசிக் வேண்டும். ஆற்றைத் தாண்டுவதோ சாத்தியமாகத் தெரியவில்லை. இந்நிலையில்தான்,சுந்தரர், தென் கரையில் இருந்தபடியே, மறு கரையில் இருந்த ஐயாரப்பறது கோபுரத்தை நோக்கி "பரவும் பரிசு" எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடினார். சிவனருளால் காவிரி வெள்ளம் மலை போல் நின்று விலகி வழி விட்டதாகப் பெரிய புராணம் கூறுகிறது. உடனே இருவரும் காவிரியைத் தாண்டி , கோயிலுக்குச் சென்று தரிசித்தார்கள் என்பது வரலாறு. ஆற்று வெள்ளமாவது, விலகி வழி விடுவதாவது என்று நம்பிக்கை இல்லாதவர்கள் கேட்பார்கள். நிச்சயமாக நடந்திருக்கும் என்பதைப் பின் வரும் அதிசயத்தைப் படித்தால் ஒப்புக்கொள்ளலாம். இதனை எனக்குத் தெரிவித்து உதவிய ஆப்த நண்பர் ஸ்ரீ மணி அவர்களுக்கு என் நன்றி உரியது.


இந்த அதிசயம் நடந்து கொண்டிருப்பது குஜராத் மாநிலத்தில். அங்கு உள்ள சிவாலயம் கடலுக்கு உள்ளே ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ளது. மதியம் முதல் மாலை வரை பக்தர்கள்சென்று வர சௌகர்யமாக, கடல் மட்டம் மிகமிகக் குறைந்து விடுகிறது. தரையில் நடப்பது போல் கோவில் வரை நடந்து செல்கிறார்கள் அங்குள்ள சிவலிங்க மூர்த்திக்கு அபிஷேகம் செய்து , பஜனைப் பாடல்களைப் பாடுகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர் வரை இவ்வாறு கடலுக்குள் நடந்துபோய் சுவாமியைத் தரிசித்துவிட்டு வருகிறார்கள். ஆகஸ்ட்- செப்டம்பர் மாதத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தரிசனம் முடிந்து மக்கள் அனைவரும் கரைக்குத் திரும்பியவுடன் கடல் மட்டம் உயர்ந்துவிடுகிறது.



இப்பொழுது சொல்லுங்கள், திருவையாற்றில் காவிரி விலகி வழி விட்டது நிச்சயமாக நடந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை தானே?