Friday, July 16, 2010

"நாலு மறை ஒது நாலூர் மயானம்"


காசி மயானம்,கச்சி மயானம் என்ற வரிசையில் நாலூர் மயானமும்அடங்கும். கும்பகோணத் திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் குடவாசலுக்கு அருகில் உள்ளது நாலூர் மயானம் என்ற பாடல் பெற்ற ஸ்தலம். இதற்குத் திருஞான சம்பந்தர் அருளிய தேவாரத் திருப்பதிகம் ஒன்று உண்டு. அதில் இந்த ஊரை "நான்கு வேதங்களும், ஆறு அங்கங்களும் முழங்கிய இடமாக" அவர் குறிப்பிடுகிறார். இத்தலத்து இறைவனை நினைத்தால் மறு பிறவி கிடையாது என்று பாடியிருக்கிறார். இப்பதிகத்தில் "சிவாய" என்ற மந்திரம் வருகிறது. இவ்வூரை அடைய எண்ணாதவர்கள் நல்ல நெறி அடைய மாட்டார்கள் என்றும் இதனைப் பாடுவோர்களது பாவ வினைகள் அகலும் என்றும் அப்பதிகத்தில் கூறுவதைக் காணலாம். "பாலூறும் மலைப்பாம்பு" என்று இப் பதிகம் துவங்குவதற்கு ஏற்ப சுவாமியின் மேல் பெரிய பாம்பு சுற்றிக்கொண்டு இருப்பதை அடிக்கடி பார்த்தவர்கள் சொல்வார்கள்.


ஆபஸ்தம்ப ரிஷியால் பூஜிக்கப்பட்ட சுவாமிக்கு ஞான பரமேஸ்வரர் என்றும் பலாசவன நாதர் என்றும் நாமங்கள் உண்டு. அம்பிகை, ஞானாம்பிகை என்று வழங்கப்படுகிறாள். முதல் ஆதித்த சோழன் திருப்பணி செய்த இக்கோயில் , இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் கண்டது. இங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவில் நாலூர் என்ற தேவார வைப்புத்தலம் உள்ளது.


ஜூலை பதினாறாம் தேதியிட்ட தினமணி நாளிதழில் , இக்கோவிலில் ஒரு கால பூஜை கூட தொடர்ந்து நடப்பதில்லை என்ற செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இதனால் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி,அந்த ஊரைத் தொடர்பு கொண்டபோது, பரம்பரையாக பூஜை செய்து வந்த சிவாசாரியார் காலமாகிவிடவே, பக்கத்து ஊரிலிருந்து ஒரு குருக்கள் வந்து ஒரு காலம் மட்டும் பூஜை செய்வதாகத் தெரிந்தது. அதுவும் தொடர்ந்து வருவதில்லையாம். நாலு வேதமும் சிவாகமமும் முழங்கிய ஊருக்கா இந்த கதி என்று நினைக்கும்போது சொல்லமுடியாத வேதனை ஏற்படுகிறது.


நாம் ஏற்கனவே சொல்லிவருவதை மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறோம். ஆலயத் திருப்பணி செய்வோர்கள் கும்பாபிஷேகம் நடந்த பிறகு தொடர்ந்து தினசரி பூஜைகள் நடைபெறுவதில் அதிக கவனம் செய்ய வேண்டும். சொற்ப சம்பளத்தை வைத்துக்கொண்டு குடும்பத்தை நடத்த முடியாமல் சிவாச்சாரியார்கள் வருமானத்தை தேடி வேறு ஊர்களுக்குச் சென்று விடுகிறார்கள். அப்படி நடக்க விடாமல் அறநிலைத்துறை அவர்களுக்கு உரிய மாத சம்பளைத்தை முறையாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இதுபோன்ற கிராமத்துக் கோவில்கள் பூட்டப் பட்டுக் கிடக்கும் துர்பாக்கிய நிலை ஏற்படுகிறது.


மக்களும் புராதனமான கோவில்களின் வளர்ச்சிக்கு முடிந்த அளவு உதவ வேண்டும். புதியதாகக் கட்டப் படும் கோயில்களுக்கு தாராளமாக உதவும் இவர்கள், பழைய கோவில்களின் பக்கமும் கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாமே

சிவனடியார் திருக் கூட்டங்களும் தங்கள் ஊரில் மட்டுமே தொண்டு செய்து வருவதோடு இப்படிப் பட்ட கோயில்களுக்கும் சென்று உதவ முன்வரவேண்டும். இதே நிலை தொடர்ந்தால், இக் கோவில்களைப் புத்தகத்தில் மட்டுமே பார்க்க வேண்டி இருக்கும். ஸ்ரீ ஞானபரமேச்வரன் சிவ ஞானத்தை வழங்கப் பிரார்த்திக்கிறோம்.

No comments:

Post a Comment