Tuesday, March 16, 2010

சாக்ஷிநாதன்

ஸ்ரீ பரமேச்வரனே சாக்ஷி சொன்னதாகச் சில ஸ்தல புராணங்களில் இருந்து தெரிந்து கொள்கிறோம். வன்னி மரமும் கிணறும் சுவாமியுடன் வந்து சாட்சியாக நின்றதைத் திருவிளையாடல் புராணம் சொல்கிறது. அம்பாளும் திருவாமாத்தூர் என்ற ஸ்தலத்தில் சத்யத்தை நிலை நாட்டி இருக்கிறாள். தம்பியை ஏமாற்றி அத்தனை நாணயங்களையும் ஒரு மூங்கில் குழாய்க்குள் போட்டுவிட்டு ஏமாற்றினானாம் அண்ணன். தம்பிக்கோ முக்தாம்பிகையைத் தவிர சாட்சி சொல்ல யாரும் இல்லை. எனவே அம்பாள் முன்னால்இப்படிச் சொல்லுவாயா என்று அண்ணனிடம் கேட்க "முக்தாம்பிகை கொத்தி விடுவாளா" என்று அகம்பாவத்தோடு கேட்டானாம். அடுத்த நிமிடமே பூமி பிளந்து ஒரு பாம்பு வெளியில் வந்து அவனைக் கொத்தியதும் அவன் மாண்டான். அவன் ஒளித்துவைத்திருந்த காசுகள் மூங்கில் குழாயிலிருந்து வெளியில் கொட்டின. இப்பொழுதும் எத்தனையோ குடும்பங்களுக்கு அம்பாள் சாட்சியாக இருந்து காப்பாற்றி வருகிறாள்.


தஞ்சாவூருக்குப் பக்கத்தில் அவளிவணல்லூர் என்ற தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலத்தில் சுவாமிக்கு சாட்சிநாதர் என்று பெயர். அந்த ஆலயத்தில் பூஜை செய்து வந்த சிவாச்சாரியாருக்கு இரண்டு பெண்கள் இருந்தனர். மூத்தவளை கல்யாணம் பண்ணிக்கொண்டவன் காசிக்குப் போய் விட்டுத் திரும்பி வந்தபோது தனது மனைவி வைசூரி போட்டியதால் அழகு இழந்து காணப்பட்டதைக் கண்டு அவளது தங்கையே தனது மனைவி என்று சாதித்தான். இதனால் மிகவும் துக்கம் அடைந்த அர்ச்சகர் சுவாமியிடம் சென்று முறையிட்டுக் கதறினார். அகில உலகங்களுக்கும் சாட்சியாக விளங்கும் ஈச்வரன் தன்னை தினமும் பூஜிக்கும் பக்தனைக் கை விடுவானா? சிவலிங்கத்திலிருந்து வெளிப்பட்ட சுவாமி தனக்கு முன்னால் கண்ணீரும் கம்பலையுமாக நின்றுகொண்டிருந்த மூத்த மகளைச் சுட்டிக்காட்டி "அவள் இவள்" என்று சாக்ஷி சொன்னதால் ஊர் பெயரும் அவளிவ நல்லூர் என்று ஆனது. அப்பெண்ணும் கோயில் குளத்தில் (தை அமாவாசை அன்று) ஸ்நானம் செய்தவுடன் முன்னை விட அழகுடன் கரை ஏறினாள்.

அரக்கோணத்திற்கு அருகில் உள்ள திருவாலங்காட்டிலும் சொன்ன சொல்லைக் காக்க வேண்டித் தீப் பாய்ந்த வேளாளர்களுக்கு சுவாமி சாட்சியாக விளங்கி முக்தி தந்து சாக்ஷி பூதேச்வரனாகக் காட்சி அளிக்கிறான்.


தெரிந்தும் தெரியாமலும் எத்தனையோ பாபங்களைத் தினமும் செய்கிறோம். வாக்காலும் மனத்தாலும் செய்யும் பாபங்களுக்கு அளவே இல்லை. தெய்வக் குற்றங்களே செய்யத் துணிந்துவிட்ட காலம் இது. தெய்வ சொத்தைத் தனது என்று கோர்ட்டிலும் பொய் சாட்சி செய்யத் துணிந்து விட்டார்கள். தெய்வமாவது தண்டிப்பதாவது என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. சாட்சிகளின் அடிப்படையிலே நீதி மன்றங்களும் நடைபெறுவதால் தவறு செய்பவர்கள் தண்டிக்கப் படுவதிலிருந்து தப்பிக்க வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது.நியாயமாகப் பார்த்தால் இவ்வளவு பாபங்கள் செய்யும் நமக்கு சாப்பாடு கிடைப்பதே சுவாமியின் பரம கருணையை காட்டுகிறது என்று காஞ்சிப் பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அக்கிரமங்கள் செய்பவர்கள் நன்றாக இருக்கிறார்களே என்று அலுத்துக்கொள்ளும் பலருக்கு இதுவே பதில். அடுத்தவன் அதிகமாக பாவம் செய்தால் நாம் ஒருக்கால் சற்றுக் குறைவாகப் பாவம் செய்கிறோமோ என்னவோ. குறைவே இல்லாத நிறைவாக ஈச்வரன் ஒருவனே விளங்குகின்றான் என்று திருவாசகம் சொல்கிறது.சுவாமி எல்லோரையும் உடனே தண்டிப்பது என்று ஆரம்பித்தால் எவ்வளவு பேர் மிஞ்சுவார்கள்? அதனால்தான் வேத மாதா நமக்காகப் பரம கருணையுடன் பரமேச்வரனை வேண்டிக்கொள்கிறாள். "ஹே சம்போ உன்னுடைய கோபத்துக்கு நமஸ்காரம்" என்று ஸ்ரீ ருத்ரம் ஆரம்பிக்கிறது

ம்ருடன் , சங்கரன் என்றெல்லாம் ஆராதிக்கப் படும் பகவானை வேதம் மேலும் கேட்கிறது: "எங்களிடம் நீ பரம கருணையோடு அருளவேண்டும். அதனால் பினாக பாணியான நீ வில்லையும் அம்புகளையும் இறக்கி வைத்துவிட்டு வர வேண்டும். பிரதம வைத்யனான நீ எல்லா நலன்களையும் அருள வேண்டும் " என்றெல்லாம் பிரார்த்திக்கிறது.