Thursday, December 9, 2010

ஆதி சைவர்களைப் போற்றுவோம் - II

உலக நன்மைக்காக ஆலயங்களில் செய்யப்படும் பூஜையைப் பரார்த்த பூஜை என்பார்கள். இதைச் செய்யும் உரிமை உடையவர்கள் குருக்கள்/பட்டர் என்று தற்காலத்தில் வழங்கப்படும் ஆதிசைவப்பெருமக்களே ஆவார்கள். மாதொரு பாகனுக்கு வழிவழி அடிமை செய்யும் இக்குலம், கிராமப்புறங்களில் ஆதரவின்றி அல்லல் படுவதைக் காண்கிறோம். அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக, நமது சபை , பழமை வாய்ந்த கிராமக் கோயில்களில் நீண்ட காலமாகப் பணியாற்றும் சிவாசார்யார்களை அவர்களது மனைவிமார்களோடு ஒரு சிவாலயத்திற்கு வரவழைத்து , அவர்களை ர்ச்சித்து, புத்தாடைகளும் பண உதவியும் செய்து இயன்றவரை தொண்டாற்றி வருகிறது. இந்த வகையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஐந்து சிவாச்சாரியார்கள் கௌரவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டிசெம்பர் 4- அன்று வைதீஸ்வரன் கோயிலில் இருந்து மணல்மேடு செல்லும் வழியில் உள்ள தலை ஞாயிறு என்ற ஸ்தலத்தில் மேலும் நான்கு ஆலயத்தைச் சேர்ந்த சிவாச்சார்யர்கள் கௌரவிக்கப்பட்டனர்.


சூரியன் வழிபட்டதால் தலைஞாயிறு எனப்பட்ட இத்தலம், தேவாரத்தில் திருக்-கருப்பறியலூர் எனப்படுகிறது. மீண்டும் பிறவிக்கு ஏதுவான கருவை பறித்து முக்தி தருவதால் இப்பெயர் பெற்றது. சீர்காழிக்கு மேல் திசையில் இருப்பதால் மேலக்காழி எனப்படுகிறது. சீர்காழியைப் போலவே இங்கும் மேல் அடுக்குகளில் உமாமகேஸ்வரர், சட்டைநாதர் சன்னதிகள் உள்ளன. ஸ்தல விருக்ஷம் கொகுடி முல்லை ஆதலால் கொகுடிக் கோயில் எனப்படுகிறது. சம்பந்தர்,சுந்தரர் ஆகிய இருவர் தேவாரப் பதிகங்களும் இதற்கு உண்டு. இச்சோழர் கால ஆலயம் , மேல் தளம் பழுதடைந்து, மழை நீர் ஒழுகுவதால், உடனடியாகத் திருப்பணி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.

விழா நாளன்று பலத்த மழை விடாது பெய்துகொண்டிருந்ததால், சாலைகள் மிகவும் சேதமாகி, மழை நீர் தேங்கிக் கிடந்தன. கால தாமதம் ஆனபோதிலும், திருச்சிற்றம்பலம், ஆத்தூர்,கொண்டல் ஆகிய கிராமத்துக் கோயில்களின் சிவாச்சார்யார்கள் தமது மனைவியருடன் தலைஞாயிறு கோயிலுக்கு வந்து சேர்ந்தனர். கடலங்குடி ஆலய அர்ச்சகர் மட்டும் வர இயலவில்லை.

ஸ்ரீ அபராத க்ஷமாபநேஸ்வரர் (குற்றம் பொறுத்த நாதர்) மற்றும் ஸ்ரீ கோல்வளை நாயகிக்கு அபிஷேகங்கள் மிகச் சிறப்பாக , ஸ்ரீ ருத்ரம் , சாமவேத , திராவிடவேத பாராயணத்துடன் நடைபெற்றது. சுவாமி-அம்பாளுக்கு புது வஸ்திரங்கள் சார்த்தி அலங்காரம் செய்யப்பட பின், சுவாமிக்கு ஸ்ரீ ருத்ர த்ரிசதி அர்ச்சனை, வில்வ தளங்களைக்கொண்டு ஒரே நேரத்தில் ஐந்து சிவாச்சர்யர்களால் செய்யப்பட்டு, ஐந்து பேராலும் பஞ்சமுக தீபாராதனை செய்யப்பட்டது.

பின்னர் நான்கு சிவாசாரிய தம்பதிகளை அமரவைத்து, அந்த அந்த ஊர் சுவாமி- அம்பாள் எனப் பாவித்து, அர்ச்சனை,தூப தீபங்கள் செய்யப்பெற்றன. புதிய வஸ்திரங்கள் வழங்கப்பெற்று, ஒவ்வொரு தம்பதிக்கும் ரூ 2000 சம்பாவனையாக அளிக்கப்பெற்றது. இதற்கு உறுதுணையாக இருந்த ஸ்ரீ பாஸ்கர், ஸ்ரீராம்,கணேஷ், கோமதிநாயகம் , சந்திரமோகன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. அவர்களுக்குச் சிவனருள் மேலும் பெருகுவதாக. இச்சிவ புண்ணியத் தொண்டு தொடர்ந்து நடைபெற அடியார்கள் உறுதுணையாக நிற்பார்கள் என்பதில் ஐயமில்லை. இத்தனைக்கும் மூல காரணமாக இருந்து அருள் வழங்கும் தோன்றாத்துணை யாம் பரமேச்வரன் , நம் குற்றங்கள் யாவற்றையும் பொறுத்துக் குணங்களை வழங்கப் பிரார்த்திக்கிறோம்.

Monday, October 4, 2010

செய்வதைத் திருந்தச் செய்வோம்

நமக்கு ஏதாவது கஷ்டம் வரும்போது "க்ரஹக்கோளாறோ" என்று சந்தேகம் வந்து ஜோசியரிடம் போகிறோம். அவரும் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு பரிகாரம் சொல்கிறார். இன்ன இன்ன ஊருக்குப் போய்பரிகாரம் செய்துவிட்டு வரவேண்டும் என்று சொல்வதும் உண்டு. இந்த கஷ்டங்களுக்கு எல்லாம் மூல காரணம் என்ன என்று யோசிக்க வேண்டும். முந்திய பிறவியில் செய்த நல்வினை-தீவினைப் பயன் படியே இப்பிறவியில் நல்லது-கெட்டதைஅனுபவிக்கிறோம். யாராக இருந்தாலும் இதற்குவிதி விலக்கு கிடையாது. அதனால் தான் இந்தப் பிறவியிலாவது பாவங்களை செய்யாமல் இருக்க வேண்டும் என்று சொல்லப் படுகிறது.

நவக் கிரக தேவதைகளை பரமேச்வரன் நியமித்து நமது பாவ-புண்ணியங்களுக்கு ஏற்ற படி இன்ப-துன்பங்களை வழங்குகிறார். எல்லா தேவர்களும் ஸ்தலங்கள் தோறும் அவரை பூசிப்பது போலவே நவக் கிரகங்களும் அவரை ஒன்பது ஸ்தலங்களில் வழிபட்டதோடுஅங்கு தரிசிக்க வரும் பக்தர்களுக்கும் துன்பங்களின் தாக்கம் சற்றுக் குறையுமாறு அருளுகிறார்கள். சிவனடியார்களுக்கு நவக் கிரகங்களும் நல்லதே செய்யும் என்று சம்பந்தரின் கோளறு பதிகம் குறிப்பிடுகிறது. எனவே, நாமும் அதனைப் பாராயணம் செய்தும் நவக் கிரகங்களால் வழிபடப்பெற்ற சிவாலயங்களைத் தரிசித்தும் பாவ வினைகள் நீங்கப் பெறலாம்.

நடைமுறையில் நாம் பார்ப்பது என்ன தெரியுமா? திருநள்ளாறு தர்பாரன்யச்வாமி கோவிலை சனீஸ்வரன் கோயில் என்று சொல்வதும் ,ஆலங்குடியை குரு ஸ்தலம் என்பதும், நாகேஸ்வர சுவாமி கோவிலை ராகு ஸ்தலம் என்பதும் , கீழப் பெரும்பள்ளத்தைக் கேது ஸ்தலம் என்பதும் வழக்கமாகிவிட்டது. உண்மையில் இவை எல்லாவற்றையும் சிவஸ்தலம் என்று தான் குறிப்பிட வேண்டும். கிரகங்களால் மூர்த்திக்குப் பெருமை இல்லை. மூர்த்தியால் தான் கிரகங்களுக்குப் பெருமை. இப்படிச் சொல்வதால் கிரக வழிபாடு வேண்டாம் என்று சொல்வதாக நினைக்கக் கூடாது. எந்த மூர்த்திக்குப் ப்ராதான்யம் (முக்கியத்துவம்) கொடுக்க வேண்டுமோ அதைக் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். இதை எல்லாம் நவக்ரகங்களை மட்டும் சுற்றிவிட்டு மூலவரைத் தரிசிக்காமல் வருபவர்களுக்காகச் சொல்ல வேண்டியிருக்கிறது.

இன்னொரு முக்கியமான விஷயம்: வியாழக்கிழமை அன்று தக்ஷிணா மூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரமும் கொண்டைகடலை மாலை போடுவதுமான தவறான பழக்கம் பல ஊர்களில் காணப் படுகிறது. இவற்றை எல்லாம் நவக் கிரகங்களுள் ஒருவரான குருவுக்கு (பிரஹச்பதிக்கு) அணிவிக்க வேண்டும். ஆதி குருவான பரமேச்வரனுக்குப் போடக் கூடாது. இதை எல்லாம் அந்த ஆலயங்களில் உள்ள சிவாச்சார்யார்களே சொல்லி மக்களைத் திருத்த வேண்டும். செய்வதை தவறு இல்லாமல் செய்ய வேண்டும் அல்லவா?

Saturday, September 25, 2010

நம்புவோம் நலம் பெறுவோம்

புராணங்களில் வரும் அற்புதங்கள் சிலருக்கு அதிசயமாகவும் சிலருக்கு ஆச்சர்யமாகவும் இன்னும் சிலருக்கு சந்தேகத்தையும் தரக் கூடும். அப்படி அற்புதங்கள் நிகழ்த்தியபோது பாடிய தேவாரப் பதிகங்களை அற்புதப் பதிகங்கள் என்கிறோம். திருவையாற்றுக்கு சுந்தரர் , சேரமான் பெருமாள் நாயனாரோடு வந்த போது ஒரு அற்புதம் நடந்தது. அகண்ட காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டு இருந்தது. ஆற்றின் தென் கரையில் இருந்த இருவருக்கோ அதைத் தாண்டி மறு கரை வந்து ஐயாரப்பரைத் தரிசிக் வேண்டும். ஆற்றைத் தாண்டுவதோ சாத்தியமாகத் தெரியவில்லை. இந்நிலையில்தான்,சுந்தரர், தென் கரையில் இருந்தபடியே, மறு கரையில் இருந்த ஐயாரப்பறது கோபுரத்தை நோக்கி "பரவும் பரிசு" எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடினார். சிவனருளால் காவிரி வெள்ளம் மலை போல் நின்று விலகி வழி விட்டதாகப் பெரிய புராணம் கூறுகிறது. உடனே இருவரும் காவிரியைத் தாண்டி , கோயிலுக்குச் சென்று தரிசித்தார்கள் என்பது வரலாறு. ஆற்று வெள்ளமாவது, விலகி வழி விடுவதாவது என்று நம்பிக்கை இல்லாதவர்கள் கேட்பார்கள். நிச்சயமாக நடந்திருக்கும் என்பதைப் பின் வரும் அதிசயத்தைப் படித்தால் ஒப்புக்கொள்ளலாம். இதனை எனக்குத் தெரிவித்து உதவிய ஆப்த நண்பர் ஸ்ரீ மணி அவர்களுக்கு என் நன்றி உரியது.


இந்த அதிசயம் நடந்து கொண்டிருப்பது குஜராத் மாநிலத்தில். அங்கு உள்ள சிவாலயம் கடலுக்கு உள்ளே ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ளது. மதியம் முதல் மாலை வரை பக்தர்கள்சென்று வர சௌகர்யமாக, கடல் மட்டம் மிகமிகக் குறைந்து விடுகிறது. தரையில் நடப்பது போல் கோவில் வரை நடந்து செல்கிறார்கள் அங்குள்ள சிவலிங்க மூர்த்திக்கு அபிஷேகம் செய்து , பஜனைப் பாடல்களைப் பாடுகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர் வரை இவ்வாறு கடலுக்குள் நடந்துபோய் சுவாமியைத் தரிசித்துவிட்டு வருகிறார்கள். ஆகஸ்ட்- செப்டம்பர் மாதத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தரிசனம் முடிந்து மக்கள் அனைவரும் கரைக்குத் திரும்பியவுடன் கடல் மட்டம் உயர்ந்துவிடுகிறது.



இப்பொழுது சொல்லுங்கள், திருவையாற்றில் காவிரி விலகி வழி விட்டது நிச்சயமாக நடந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை தானே?

Wednesday, August 25, 2010

காயத்ரி ஜப மகிமை

"காயத்ரி ஜபம்" என்ற தலைப்பில் சென்ற ஆண்டு எழுதியிருந்தோம். அதன் முக்கியத்துவத்தைக் கருதி மேலும் கொஞ்சம் சொல்லலாம் எனத் தோன்றுகிறது. அதன் பெருமை தெரியாததாலோ என்னவோ பெரும்பாலானவர்கள் சிரத்தை இல்லாமலும் அரைகுறையாகப் பண்ணிவிட்டு ஆபீசுக்கு ஓடுவதுமாக இருக்கிறார்கள். அன்றையதினம் விடுமுறையாக இருந்தாலும் நிதானமாக, சிரத்தையுடன் ஜபம் செய்வார்களா என்பது வேறு விஷயம். அப்பா எப்பொழுது எழுந்திருப்பார் என்று பார்த்துக்கொண்டே அருகில் ஜபம் பண்ணும் பிள்ளை. அப்பாவும் பிள்ளையுமாக ஜபம் பண்ணியதைப்(??) பார்த்துப் பூரித்த அம்மா. எவ்வளவு பேர் வீட்டில் இது போல் நடக்கிறது? தினசரி சந்த்யாவந்தனத்தைப் பண்ணாமல் ஆவணி அவிட்டத்தையும் காயத்ரி ஜெபத்தையும்கண் துடைப்பாகப்பண்ணும் குடும்பங்கள் இக்காலத்தில் அதிகரித்து வருகின்றன.

மும்மூர்த்திகளாலும் தேவர்களாலும் செய்யப்படுவது இக்கர்மா. தீட்டு வந்த போது கூட இதைச் செய்ய வேண்டும். ஸ்ரீ பரமேச்வரன் இதைச் செய்ததாக குமார சம்பவத்தில் கவி காளிதாசன் குறிப்பிடுகிறார். இதைச் செய்யாமல் வேறு எந்தக் கர்மாவை செய்தாலும் பலன் தராது. வீடுகளில் அக்னிஹோத்ரம் செய்யும் இடம், தேவ பூஜை செய்யும் இடம்,பசுமாடு கட்டும் கொட்டகை,துளசி மாடம் ஆகியவற்றின் அருகில் காயத்ரி ஜபம் செய்வது அதிகப் பலனைத்தரும். ஹோமமாகச் செய்தால் நீண்ட ஆயுளும் ஆரோக்யமும் காரிய சித்தியும் பாப நிவர்த்தியும், இறுதியில் மோக்ஷமும் சித்திக்கும்.

அர்த்தம் தெரியாததால் இவ்வளவு மகிமை வாய்ந்த கர்மாவை விட்டு விடுகிறார்களோ என்று தோன்றுகிறது. ஆ சத்யேன எனத் தொடங்கும் மந்த்ரம் தீர்காயுளைப் பிரார்த்திக்கிறது. அதன் சுருக்கமான பொருளாவது: " நூறு வருஷம் உதய காலத்தில் சூரிய மண்டலத்தைத் தரிசிப்போம்.நூறு வருஷம் ஜீவிப்போம். நூறு வருஷம் புத்திர பௌத்ராதிகளோடு இருப்போம்.நூறு ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்வோம். அப்பொழுது நல்ல சொற்களையே பேசுவோம். நல்ல சொற்களையே கேட்போம்.சத்ருக்கள் யாரும் எங்களை ஜெயிக்கப்படாதவர்கள் ஆவோம். " என்று ப்ரத்யக்ஷ தெய்வமான சூர்யனிடம் வேண்டப்படுகிறது.

இவ்வளவு மகிமை வாய்ந்த கர்மாவைப் பண்ணாமல் ஆயுளை வீணாகக் கழிக்கக் கூடாது. விடுமுறை நாட்களில் அதிக ஆவர்த்தி ஜபம் பண்ண முடியும். ரிடையர் ஆனவர்கள் இத்தனை வருஷம் பண்ணமுடியாமல் போயிருந்தாலும் இனிமேலாவது அதிக சிரத்தையுடன் செய்ய ஆரம்பிக்கவேண்டும். இதனால் குடும்பம் க்ஷேமம் அடைவதோடு,லோக க்ஷேமமும் உண்டாகும். நமது எல்லா அபராதங்களையும் மன்னிக்கும் வேத மாதா இதற்கு அருள் செய்ய பிரார்த்திக்கிறோம்.

Wednesday, August 4, 2010

ஆதி சைவர்களைப் போற்றுவோம்


அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பாடும்போது சுந்தரமூர்த்தி நாயனார் ஆதி சைவர்கள் எனப்படும் சிவாசார்யார்களை ,"முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்" என்று போற்றியிருக்கிறார். பஞ்சம் வந்த போதும் இடைவிடாமல் பசியோடும் களைப்போடும் சிவாலய பூஜை செய்த அழகாபுத்தூர் எனப்படும் அரிசிற்கரைப் புத்தூர் புகழ்த்துணை நாயனாரை சிறப்பித்து அந்த ஊர் பதிகத்தில் பாடியிருக்கிறார்.அப்படி பூஜை செய்ததால் அச்சிவாசாரியாருக்கு சுவாமி தினமும் படிக்காசு கொடுத்ததாக வரலாறு. கோயில்களிலிருந்து நிலக்குத்தகை மூலம் அர்ச்சகர்கள் பெற்று வந்த நெல்லும் நின்றுவிடவே கிராமங்களில் உள்ள அர்ச்சகர்கள் சொல்ல முடியாத அளவு கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். மறுநாள் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் தவிப்போரும் உண்டு. நிலையான வருமானம் இல்லாததால் அல்லல் படுவோர் பலர். இத்தனை கஷ்டங்களை சுமந்து கொண்டும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கிராமங்களிலேயே இருந்து கொண்டு பூஜை செய்யும் வயது முதிர்ந்த சிவாசார்யார்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

இப்படிப்பட்டவர்களுக்கு நம்மால் முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பலவகையான உதவிகளை செய்து வருகிறது நமது சபை. ஐந்து கிராமங்களில் உள்ள சிவாலயங்களில் பல்லாண்டுகளாகப் பூஜை செய்து வரும் சிவாசார்யார்களுக்கு மரியாதை செய்யும் வகையில் கடந்த ஆகஸ்ட் முதல் தேதி அன்று திருவாழ்கொளிப்புத்தூர் என்று தேவாரத்தில் வழங்கப்படும் ஸ்தலத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இத்தலத்து சிவாச்சாரியாரும் மற்றும் நீடூர்,மேலானல்லூர்,இலுப்பப் பட்டு, வழுவூர் ஆகிய ஸ்தலத்து சிவாசார்யார்களும் தங்கள் மனைவியருடன் வந்திருந்தனர்.

செல்லும் வழியில் நீடூர் சிவாலய தரிசனமும் சுவாமியின் காலசந்தி அபிஷேகமும் கண் குளிரக் கண்டோம். தேவேந்திரன் காவேரி மணலால் செய்த மூர்த்தம். கோவிலுக்கு வெளியில் உள்ள காளிதேவியின் சன்னதியில் தீபம் ஏற்றி வழிபட்டபின், திருவாழ்கொளிபுத்தூரை அடைந்தோம். மாயூரத்திலிருந்து ஏற்பாடு செய்திருந்த பர்சாரகர்எங்களுக்கு முன்னாலேயே வந்து சமையல் ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

இந்த க்ஷேத்ரம் பாடல் பெற்றது. அர்ஜுனனின் வாளைப்புற்றுக்குள் சுவாமி மறைத்து வைத்துவிட்டுப் பிறகு அருள் செய்ததால் ஊருக்கு இந்தப் பெயர் வந்தது. பஞ்ச காலத்தில் சுவாமி இரத்தின மழையாகப் பெய்ததால் ரத்னபுரீச்வரர் எனப்படுகிறார். பிரமரகுந்தலாம்பிகை (வண்டுவாழ் குழலி) என்று அம்பாளுக்குப் பெயர். எல்லா திரவியங்களுடன் சுவாமிக்கு ருத்ராபிஷேகம் நடந்தது. அலங்காரம் ஆனவுடன் ஐந்து சிவாசார்யார்களும் சுவாமியின் அருகாமையில் நின்றுகொண்டு வில்வ தளங்களால் ருத்ர த்ரிசதி அர்ச்சனை செய்தது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. பின்னர் அம்பாளுக்கும் , துர்கைக்கும் அர்ச்சனைகள் நடந்தன.

அந்தந்த ஊர் சுவாமி அம்பாள் என்று சிவாசார்யா தம்பதிகளைப் பாவித்து சங்கல்பம், அர்ச்சனை,தூபம்,தீபம் ,பாதங்களில் நலங்கு இடுதல் ஆகியவை செய்யப்பெற்று வேஷ்டி - புடவைகளோடு ரூ.௨000 சம்பாவனையும் வழங்கப் பட்டது. மனமகிழ்ந்த தம்பதிகளும் ஆசி வழங்கினர்.

துர்க்கை சன்னதியின் எதிரில் மத்தியான போஜனம் பரிமாறப்பட்டது. இவ்வாறு மன நிறைவோடு விழா இனிதே நிறைவுற்றது.

இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கிறது. எவ்வளவு செய்தாலும் தகும். மாதாந்திர நிரந்தர வருமானம் ஏற்படுத்திக் கொடுத்தால் இன்னும் நல்லது. மாதம் முன்னூறு ரூபாய் ஏற்பாடு செய்யும்படி ஒரு சிவாசாரியார் கேட்டுக் கொண்டதன் பேரில் எனது வங்கி கணக்கிலிருந்து அவரது வங்கி கணக்கிற்கு அத்தொகை வழங்க ஏற்பாடு செய்தாகிவிட்டது என்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன். மாதம் தோறும் பிரசாதம் அனுப்புகிறேன் என்றார். அவருக்குத் தபால் செலவு வைக்க மனம் வரவில்லை. மேலும் அவர் வற்புறுத்தவே, மாதாந்திர சிவராத்திரி அன்று சுவாமிக்கு ருத்ர த்ரிசதி அர்ச்சனை செய்து எல்லோருக்காகவும் பிரார்த்தித்துக் கொண்டால் போதுமானது என்றேன்.

Friday, July 16, 2010

"நாலு மறை ஒது நாலூர் மயானம்"


காசி மயானம்,கச்சி மயானம் என்ற வரிசையில் நாலூர் மயானமும்அடங்கும். கும்பகோணத் திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் குடவாசலுக்கு அருகில் உள்ளது நாலூர் மயானம் என்ற பாடல் பெற்ற ஸ்தலம். இதற்குத் திருஞான சம்பந்தர் அருளிய தேவாரத் திருப்பதிகம் ஒன்று உண்டு. அதில் இந்த ஊரை "நான்கு வேதங்களும், ஆறு அங்கங்களும் முழங்கிய இடமாக" அவர் குறிப்பிடுகிறார். இத்தலத்து இறைவனை நினைத்தால் மறு பிறவி கிடையாது என்று பாடியிருக்கிறார். இப்பதிகத்தில் "சிவாய" என்ற மந்திரம் வருகிறது. இவ்வூரை அடைய எண்ணாதவர்கள் நல்ல நெறி அடைய மாட்டார்கள் என்றும் இதனைப் பாடுவோர்களது பாவ வினைகள் அகலும் என்றும் அப்பதிகத்தில் கூறுவதைக் காணலாம். "பாலூறும் மலைப்பாம்பு" என்று இப் பதிகம் துவங்குவதற்கு ஏற்ப சுவாமியின் மேல் பெரிய பாம்பு சுற்றிக்கொண்டு இருப்பதை அடிக்கடி பார்த்தவர்கள் சொல்வார்கள்.


ஆபஸ்தம்ப ரிஷியால் பூஜிக்கப்பட்ட சுவாமிக்கு ஞான பரமேஸ்வரர் என்றும் பலாசவன நாதர் என்றும் நாமங்கள் உண்டு. அம்பிகை, ஞானாம்பிகை என்று வழங்கப்படுகிறாள். முதல் ஆதித்த சோழன் திருப்பணி செய்த இக்கோயில் , இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் கண்டது. இங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவில் நாலூர் என்ற தேவார வைப்புத்தலம் உள்ளது.


ஜூலை பதினாறாம் தேதியிட்ட தினமணி நாளிதழில் , இக்கோவிலில் ஒரு கால பூஜை கூட தொடர்ந்து நடப்பதில்லை என்ற செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இதனால் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி,அந்த ஊரைத் தொடர்பு கொண்டபோது, பரம்பரையாக பூஜை செய்து வந்த சிவாசாரியார் காலமாகிவிடவே, பக்கத்து ஊரிலிருந்து ஒரு குருக்கள் வந்து ஒரு காலம் மட்டும் பூஜை செய்வதாகத் தெரிந்தது. அதுவும் தொடர்ந்து வருவதில்லையாம். நாலு வேதமும் சிவாகமமும் முழங்கிய ஊருக்கா இந்த கதி என்று நினைக்கும்போது சொல்லமுடியாத வேதனை ஏற்படுகிறது.


நாம் ஏற்கனவே சொல்லிவருவதை மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறோம். ஆலயத் திருப்பணி செய்வோர்கள் கும்பாபிஷேகம் நடந்த பிறகு தொடர்ந்து தினசரி பூஜைகள் நடைபெறுவதில் அதிக கவனம் செய்ய வேண்டும். சொற்ப சம்பளத்தை வைத்துக்கொண்டு குடும்பத்தை நடத்த முடியாமல் சிவாச்சாரியார்கள் வருமானத்தை தேடி வேறு ஊர்களுக்குச் சென்று விடுகிறார்கள். அப்படி நடக்க விடாமல் அறநிலைத்துறை அவர்களுக்கு உரிய மாத சம்பளைத்தை முறையாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இதுபோன்ற கிராமத்துக் கோவில்கள் பூட்டப் பட்டுக் கிடக்கும் துர்பாக்கிய நிலை ஏற்படுகிறது.


மக்களும் புராதனமான கோவில்களின் வளர்ச்சிக்கு முடிந்த அளவு உதவ வேண்டும். புதியதாகக் கட்டப் படும் கோயில்களுக்கு தாராளமாக உதவும் இவர்கள், பழைய கோவில்களின் பக்கமும் கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாமே

சிவனடியார் திருக் கூட்டங்களும் தங்கள் ஊரில் மட்டுமே தொண்டு செய்து வருவதோடு இப்படிப் பட்ட கோயில்களுக்கும் சென்று உதவ முன்வரவேண்டும். இதே நிலை தொடர்ந்தால், இக் கோவில்களைப் புத்தகத்தில் மட்டுமே பார்க்க வேண்டி இருக்கும். ஸ்ரீ ஞானபரமேச்வரன் சிவ ஞானத்தை வழங்கப் பிரார்த்திக்கிறோம்.

Monday, July 5, 2010

தீர்த்த மகிமை


ஸ்தலத்திற்கும் மூர்த்திக்கும் எவ்வளவு மகிமை உண்டோ அந்த அளவு பெருமை அங்கு உள்ள தீர்த்தத்திற்கும் உண்டு. இன்னும் சொல்லப்போனால் தீர்த்தமே சிவ ஸ்வரூபம் தான். "சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே " என்று அப்பர் தேவாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. காஞ்சிப் புராணத்தில் வாரம் ஏழு நாட்களில் காஞ்சிபுரத்தில் ஸ்நானம் செய்ய வேண்டிய தீர்த்தங்கள் அமைந்துள்ள கோயில்கள் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் அந்தந்தக் கோயிலில் உள்ள தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வதை காஞ்சி மகா பெரியவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஸ்ரீ கச்சபேச்வரசுவாமி ஆலயத்தில் உள்ள இஷ்ட சித்தி தீர்த்தத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஸ்நானம் செய்யும் பொழுது ஸ்ரீ பெரியவர்கள் , அந்தக் குளக்கரையில் இருந்த கல்வெட்டுக்களைப் பார்த்து, அது சூரிய சதகத்தில் வரும் ஸ்லோகங்கள் என்று கண்டுபிடித்தார்கள். அதைப் பாராயணம் செய்து வந்தால் கண் சம்பந்தமான உபாதைகள் நீங்கும் என்றும் சொன்னார்கள்.


திருவெண்காடு என்ற க்ஷேத்திரத்தில் கோயிலுக்குள் மூன்று தீர்த்தங்கள் உண்டு.அவை சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் எனப்படும். இவற்றில் ஸ்நானம் செய்பவர்களுக்குப் பேய் பிடித்திருந்தால் விலகிவிடும் என்றும் புத்திர பாக்கியம் வேண்டுவோர்க்கு அந்த வரம் கிடைக்கும் என்றும் திருஞான சம்பந்தர் அந்த ஊர் தேவாரத்தில் பாடியிருக்கிறார். இதில் சந்தேகப் படுபவர்கள் எந்தக்காலத்திலும் இருப்பார்கள் அல்லவா? அதனால் தான் ,"ஐயுற வேண்டா " (சந்தேகப்பட வேண்டாம்) என்றும் அதோடு சொல்லியிருக்கிறார். இதில் நம்பிக்கை வைத்துப் பாராயணம் செய்ததோடு, திருவெண்காடு சென்று மூன்று குளங்களிலும் ஸ்நானம் செய்த அச்சுத களப்பாளர் என்ற சிற்றரசருக்கு மகனாக சிவஞானபோதம் அருளிய மெய்கண்டார் அவதரித்தார் என்றால், அந்த தீர்த்தங்களின் மகிமையை யாரால் சொல்ல முடியும்?


ஆனால் ஆலய தீர்த்தங்களின் தற்போதய நிலை பரிதாபத்திற்கு உரியது. கோவிலின் வெளியில் இருக்கும் தீர்த்தங்கள் பலவகையில் ஆக்கிரமிக்கப்படுகின்றன. குப்பை கொட்டும் இடங்களாகவும் மாறி வருகின்றன.வறண்டு போன தீர்த்தங்கள் தூர் வாரப் படுவதில்லை. ஆலயத் திருப்பணியே மிகவும் கஷ்டப்பட்டுச் செய்ய வேண்டிய நிலை இருப்பதால் திருக் குளங்களை சீரமைக்க முடிவதில்லை. கிராமக் கோவில்கள் திருப்பணி செய்யப் படும்போது,அந்த ஊர் பஞ்சாயத்தில் ஏதாவது ஒரு வேலை வாய்ப்புத்திட்டத்தின் பேரில் குளங்களைத் தூர் வாரலாம்.இதனால் அந்தக் கிராமத்தில் சிலருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். செய்ய முன்வரவேண்டுமே? நிலத்தடி நீரைப் பற்றிப் பேசுவதோடு சரி. புதியதாகக் குளங்களா வெட்டப் போகிறார்கள்? நம் முன்னோர்கள் சிவ தர்மமாக ஏற்படுத்திக்கொடுத்ததைக் காப்பாற்றவே நாம் தயங்குகிறோம்.


"காவினை இட்டும் குளம் பல தொட்டும்" என்பார் சம்பந்தர். நந்தவனங்கள் அமைத்தும் , குளங்கள் பல உண்டாக்கியும் சிவ தர்மங்கள் செய்தால் பாவ வினைகள் நம்மை நெருங்காது என்பது அவரது உபதேசம். குரு உபதேசத்தை இனியாவது ஏற்று இருக்கிற நந்தவனம் மற்றும் திருக் குளங்களை அழியாமல் காப்போமாக.

Tuesday, June 8, 2010

கலங்காமல் காப்பாய்

சமீபத்தில் பிரபல ஆலயங்களில் நடந்த அசம்பாவிதங்கள் எல்லோரையும் கலங்க அடித்திருப்பது ஏன்என்பது நியாயமான சந்தேகம் தான். தனக்குத் தெரிந்தவரையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்கிறார்கள். இதனால் ஊருக்கும் நாட்டுக்கும் கெடுதல் ஏற்படும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.அதற்குஏற்ற மாதிரி பல இடங்களில் நடக்கும் ஏராளமான அகால மரணங்கள் கலக்கத்தை இன்னும் அதிகரிக்கச் செய்கின்றன.

நன்றாக யோசித்துப் பார்த்தால் நமது பிரபலமான கோயில்களில் சான்னித்தியம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்று தெரிய வரும். கோயில்களில் உள்ள மூர்த்திகள் , தேவர்களாலோ முனிவர்களாலோ மிகச் சிறந்த பக்தர்களாலோ அல்லது பறவை விலங்குகள் ஆகியவற்றாலோ வழிபடப் பட்டவை. தெய்வங்களை பய பக்தியோடு அணுக வேண்டியது போய்ஏதோ காட்சிப் பொருளைப் பார்ப்பது போல் ஆகிவிட்டது துரதிருஷ்டமே. எதில் தான் வியாபார நோக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. ஆலயங்களை படப்பிடிப்பு குழுக்கள் விலைக்கு வாங்கி விடாத குறையாக ஆக்கிரமிக்கின்றனர். வழிபாட்டு இடங்களில் இவர்களை அனுமதிப்பதால் ஏதாவது வருமானம் வராதா என்ற எண்ணம் இதற்கு வழி விடுகிறது.

கோயில்களுக்கு வருபவர்களின் செய்கைகளோ சொல்லும்படி இல்லை. என்ன வேண்டுமானாலும் உடுக்கலாம்,பேசலாம் என்று ஆகிவிட்டது. இடைத் தரகர் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு எல்லோருக்கும் முன்னால் சென்று சீக்கிரம் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற சுய நலம் வேறு. சில இடங்களில் ஆலய சிப்பந்திகளும் இதற்கு உடந்தையாக இருப்பதைப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது. சுய விளம்பரத்திற்காக தங்க கதவுகளையும் மேல் கூரைகளையும் சிலர் செய்து கொடுக்கிறார்கள். இதனால் கவனம் பூராவும் பணத்தின் மேலேயே போய் விடுகிறது. முக்கியப் புள்ளிகள் வந்தால் ஆலய சட்ட திட்டங்கள் காற்றில் விடப் படுகின்றன.

அரசாங்கமும் முதல் வேலையாக உண்டியல் வைப்பதிலேயே குறியாக இருக்கிறது. இதனால் வரும் பணமோ பல வழிகளிலும் செலவழிக்கப் படுகிறது. கோயில்களின் பூஜைகள் திருவிழாக்கள் திருப்பணிகள் ஆகியவை வருமானம் இல்லாத ஊர்களில் கேள்விக் குறியாகவே ஆகிவிட்டது. இதற்காகக் கவலைப் படுவோர் மிகச் சிலரே!

இதையெல்லாம் உத்தேசித்துதான் பன்னிரண்டு வருஷங்களுக்கு ஒருமுறை திருப்பணி,கும்பாபிஷேகம் ஆகியவற்றை செய்து சாந்தித்யம் நிலைக்கும்படி செய்தார்கள். தவறுகளைத் திருத்துபவர்களைக் காணோம். பல கும்பாபிஷேகம் நடந்த கிராமத்துக் கோயில்களில் தொடர்ந்து பூஜை நடத்த வழி வகைகள் செய்யப் படுவதில்லை. வறுமையால் வாடும் ஆலய சிப்பந்திகள் வேறு ஊர்களை நாடிச் செல்கிறார்கள். இவர்களுக்காக வருத்தப் படுபவர்கள் எத்தனை பேர்? புரட்சி ,மறுமலர்ச்சி என்றெல்லாம் பேசுபவர்கள் ஆலய மறுமலர்ச்சிக்காக ஏதும் பெரிய அளவில் செய்வதில்லை.

இதற்கெல்லாம் ஒரே வழி ,மக்கள் திருந்தவேண்டும். தானாகத் திருந்தவேண்டிய கட்டாயத்தில் மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.சிவமே அவர்களது சிந்தையைத் திருத்தவேண்டும். கோயில்களின் சாந்தித்யம் கூட வேண்டும். இறைவனது உறைவிடமாகத் திகழவேண்டும். அப்பொழுதுதான் தேசம் நன்மை அடையும். கலங்காமல் காத்த கணபதியையும் , திருபுவனத்தில் உள்ள நடுக்கம் தீர்த்த நாதரையும் ,சரப மூர்த்தியையும் பிரார்த்திப்போமாக.

Friday, May 14, 2010

சிவ தர்ம ரக்ஷணம்


ஸ்ரீ சுவாமிநாத சுவாமியின் மீது பாடப்பட்டுள்ள திருவேரக நவரத்னமாலையில் ஒரு பாடல், பலவகையான துரோகங்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது. மனத்தில் கொஞ்சம்கூடப் பயம் இல்லாமல் அதர்ம வழியில் சென்று சிவதுரோகம் செய்பவர்கள் இதில் அடங்குவர். கோயில் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு, கோவிலுக்குரிய நெல்லைக் கொடுக்காமல் ஏமாற்றுபவர்கள் பலர். ஆலயங்களில் உள்ள பொருள்களைக் கொள்ளை அடிப்பவர்கள் பலர். கோயில் நிலங்களில் உள்ள வீடுகளில் வசித்துக்கொண்டு வாடகை தராமல் ஏமாற்றுபவர்களும் உண்டு. பலர் நெடுங்காலமாக அவற்றில் இருந்துகொண்டு ரூ பத்து முதல் முப்பது வரை வாடகை கொடுப்பவர்களும் உண்டு. முக்கிய நகரங்களின் பிரதான இடங்களில் கோவில் வீடுகளில் இப்படி ஆக்கிரமித்துக்கொண்டும் ,வாடகையை நிர்வாகம் கேட்டால் ,கோர்ட்டுக்கு இழுத்தடிப்பதுமாக அநியாயங்கள் தொடர்கின்றன. கோயில் வீடுகளை அவற்றில் வசிப்பவர்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்று விட வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கிறார்கள். கோயில் நிலங்களை சிலர் பிளாட் போட்டு விற்கத் துணிந்துவிட்டார்கள்.

தெய்வத்தை ஏமாற்றி விடலாம் என்று நினைப்பவர்கள் இப்படிப்பட்ட பாவங்களை செய்ய முன்வருகிறார்கள். இவர்களை " மாபாவம் செய்த கொடிய பஞ்சமாபாவிகள்" என்கிறார் நவரத்தின மாலை ஆசிரியர். சிவன் சொத்து குல நாசம் என்று ஒரு பழமொழி உண்டு. சிவசொத்தை அபகரித்தவர்களின் குடும்பங்கள் வேரோடு அழிந்து நாசமாவதைப் பலர் கண்டும் கேட்டும் இருக்கலாம்.

கோட்புலி நாயனார் என்ற சிவபக்தர் திருவாரூருக்கு அருகிலுள்ள நாட்டியாத்தாங்குடி என்ற ஊரில் வசித்து வந்தார். சிவாலய நெல்லைத் தனியாகவும் தனது குடும்பத்திற்கான நெல்லைத் தனியாகவும் சேகரித்து வைத்திருந்தார். யுத்த காலத்துக்கு அவர் போயிருந்தபோது கடும் பஞ்சம் வந்தது. வீட்டுக்காக வைத்திருந்த நெல் பூராவும் செலவழிந்துவிட்டது. மறுபடியும் நெல் விளைந்தவுடன் கோவிலுக்குத் திருப்பித்தந்து விடலாம் என்று எண்ணிய குடும்பத்தினர், சிவாலயத்தின் நெல்லை எடுத்துச் செலவழிக்க ஆரம்பித்தனர். போர் முனையிலிருந்து திரும்பிய நாயனார்,இதைக் கேள்விப்பட்டவுடன் கோபம் கொண்டு, அவர்களை சிவ துரோகிகள் எனக்கருதி தனது வாளால் ஒவ்வொருவரையும் வெட்டினார். கடைசியாக இருந்த குழந்தையையும் ,சுவாமியின் நெல்லை சாப்பிட்ட தாயின் பாலைக் குடித்த பாவம் செய்ததாகக் கருதி உடை வாளால் வெட்டினார். அப்போது ஆகாயத்தில் விருஷப வாகனத்தில் உமா தேவியோடு ஸ்ரீ பரமேச்வரன் காட்சி கொடுத்து அவரையும் அவரது குடும்பத்தையும் உய்யக்கொண்டார் என்று பெரிய புராணம் கூறுகிறது.

எனவே, இனிமேலாவது, சிவத்ரோகம் செய்யாமல் தர்ம வழியிலேயே சம்பாதித்து, அதன் பயனாக சிவ தர்மங்கள் செய்ய , தவறு செய்தவர்கள் மனம் திருந்தி முன் வரவேண்டும். "குற்றம் பொறுத்த நாதர்" என்று கருப்பறியலூர் என்ற ஸ்தலத்தில் சுவாமிக்குப் பெயர் உண்டு. பிழை பொறுக்கும்படி மனம் உருகி வேண்டினால் நிச்சயமாக மன்னிப்பும் பெறலாம்.

Wednesday, April 14, 2010

வேண்டும் வரம்


சுவாமியிடம் தனக்கு வேண்டியதை எல்லாம் கேட்பது ஒரு வகை. தனக்கு எப்பொழுது என்ன தர வேண்டும் என்று சுவாமிக்குத் தெரியாதா என்ன என்று ஸ்வாமியிடமேவிட்டுவிடுவது இன்னொரு வகை. குழந்தைகள் தாயார் தகப்பனாரிடம் கேட்டு வாங்கிக்கொள்வதைப்போலஉலகத்துக்கே மாதாபிதாவாக விளங்கும் உமா மகேச்வரர்களிடம் வேண்டிக்கொள்வதில்தவறு இல்லை தான். ஆனால் ஒன்று மட்டும் முக்கியமாகச் சொல்லத் தோன்றுகிறது. நியாயமானவைகளை மட்டுமாவது பிரார்த்திக்கலாம் என்பதே அது.இதைத்தான் "வேண்டத்தக்கது" என்றார் மாணிக்கவாசகர்.


வேண்டுவது அத்தனையும் சுவாமி அருளுவார் என்பதால், சூரபத்மனைப்போல் வரம் கேட்கக்கூடாது. கிரிக்கெட் மேட்ச் ஜெயிக்க வேண்டும் என்று கூட சிலர் வேண்டுவதைப் பார்த்தால் சிரிப்புத் தான் வருகிறது. இன்ன பலன் கிடைக்கும் என்பதால் மட்டுமே பாராயண நூல்களைப் படிப்போர் பலர். அப்படியாவது படிக்கிறார்களே என்றுதான் சந்தோஷப் பட வேண்டியிருக்கிறது. இத்தனை தடவை வந்தால் கேட்டது எல்லாம் கிடைக்கும் என்று கோயில்களுக்கு வருபவர்களும் உண்டு. கூட்டிக் கழித்துப் பார்த்தால் இவற்றில் சுயநலமே ஓங்கி இருப்பதைப் பார்க்கலாம்.


லோகா சமஸ்தா சுகினோ பவந்து என்று பூஜை முடிவில் உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்காகவும் பிரார்த்திப்பது உண்டு. தமிழிலும்,"குறைவு இல்லாது உயிர்கள் வாழ்க " என்றும் "வையகமும் துயர் தீர்கவே" என்றும் பிரார்த்திப்பார்கள். நடைமுறையில் ஒன்றை அனுபவ ரீதியில் சொல்கிறேன். பிறருடைய கஷ்டங்கள் நிவர்தியாகும்படி பிரார்த்தித்தால் பலன் கை மேல் கிடைப்பதையும் நமக்காக மட்டும் வேண்டிக் கொண்டால் காலம் தாழ்ந்தோ அல்லது பலன் தராமலோ போவதைப் பார்க்கலாம்.


ஏயர்கோன் கலிக்காம நாயனார் என்று அறுபத்து மூவரில் ஒருவர். ஒரு சமயம் மழை இல்லாமல் கடும் பஞ்சம் வந்தது. அருகில் இருந்த திருப்புன்கூர் சிவலோகநாத சுவாமியிடம் நாயனார் என்ன வேண்டிக்கொண்டார் தெரியுமா? இந்தப் பஞ்சம் நீங்கும் படி மழை பெய்வித்தால் கோவிலுக்கு நிலம் தருவதாக வேண்டிக்கொண்டார். மழையும் நிறையப் பெய்தது. ஆனால் கூடவே வெள்ளமும் வந்து பயிர்கள் நீரில் மூழ்கின. வெள்ளம் நின்றால் மீண்டும் நிலம் தருவதாகப் பிரார்த்தித்தார் கலிக்காம நாயனார். வெள்ளமும் நிற்கும்படி அருளினார் சுவாமி. இப்படியாக,பன்னிரண்டுவேலி நிலத்தைக் கோயிலுக்கு வழங்கினாராம் நாயனார். இது நடந்தபிறகு அங்கு வந்த சுந்தரமூர்த்தி நாயனார், இவரது சிவபக்தியை சிறப்பித்து திருப்புன்கூர் தேவாரத்தில் பாடியிருக்கிறார்.


தனக்காகப் பிரார்த்தனை செய்வதிலும் உயர்ந்தவை சிலவற்றை சொல்லலாம். காரைக்கால் அம்மையார் செய்த பிரார்த்தனையே முதலில் நினைவுக்கு வருகிறது. "உன்னிடம் இறவாத /மாறாத/மறையாத பக்தி வேண்டும். பிறவாத நிலை ஏற்படவேண்டும். ஒருவேளை பிறந்துவிட்டால் உன்னை என்றும் மறவாத வரம் தந்து அருள வேண்டும். அந்தப்பிறவியில் நான் உன்னைப் பாடவேண்டும்.அப்பாடலைக் கேட்டுக் கொண்டே நீ ஆடும்போது உன்னுடைய தூக்கிய திருவடியின் கீழ் நான் இருக்க வேண்டும் . " என்பதே அவர் வேண்டிய வரம். இதற்குமேல் உயர்ந்த பிரார்த்தனை இருக்கமுடியுமா?


கடல் போலவும் நதி போலவும் பகவானின் கருணை வெள்ளம் இருக்கும்போது அதை வாரி விழுங்கிக்குடிக்காமல் நாய் நக்கிக் குடிப்பதுபோல இருக்கிறேனே என்று மனம் உருகிப் பாடுகிறார் மாணிக்கவாசகர். இக பர சௌபாக்கியம் அத்தனையும் தரும் ஈச்வரனிடம் நாமும் உலகத்திலுள்ள அல்ப சுகங்களை வரமாகக் கேட்காமல் எல்லோரும் இன்புற்று வாழவும் பிறப்பு-இறப்பு இல்லாத மோக்ஷத்தைப் பெறவும் பிரார்த்திப்போமாக.

Tuesday, March 16, 2010

சாக்ஷிநாதன்

ஸ்ரீ பரமேச்வரனே சாக்ஷி சொன்னதாகச் சில ஸ்தல புராணங்களில் இருந்து தெரிந்து கொள்கிறோம். வன்னி மரமும் கிணறும் சுவாமியுடன் வந்து சாட்சியாக நின்றதைத் திருவிளையாடல் புராணம் சொல்கிறது. அம்பாளும் திருவாமாத்தூர் என்ற ஸ்தலத்தில் சத்யத்தை நிலை நாட்டி இருக்கிறாள். தம்பியை ஏமாற்றி அத்தனை நாணயங்களையும் ஒரு மூங்கில் குழாய்க்குள் போட்டுவிட்டு ஏமாற்றினானாம் அண்ணன். தம்பிக்கோ முக்தாம்பிகையைத் தவிர சாட்சி சொல்ல யாரும் இல்லை. எனவே அம்பாள் முன்னால்இப்படிச் சொல்லுவாயா என்று அண்ணனிடம் கேட்க "முக்தாம்பிகை கொத்தி விடுவாளா" என்று அகம்பாவத்தோடு கேட்டானாம். அடுத்த நிமிடமே பூமி பிளந்து ஒரு பாம்பு வெளியில் வந்து அவனைக் கொத்தியதும் அவன் மாண்டான். அவன் ஒளித்துவைத்திருந்த காசுகள் மூங்கில் குழாயிலிருந்து வெளியில் கொட்டின. இப்பொழுதும் எத்தனையோ குடும்பங்களுக்கு அம்பாள் சாட்சியாக இருந்து காப்பாற்றி வருகிறாள்.


தஞ்சாவூருக்குப் பக்கத்தில் அவளிவணல்லூர் என்ற தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலத்தில் சுவாமிக்கு சாட்சிநாதர் என்று பெயர். அந்த ஆலயத்தில் பூஜை செய்து வந்த சிவாச்சாரியாருக்கு இரண்டு பெண்கள் இருந்தனர். மூத்தவளை கல்யாணம் பண்ணிக்கொண்டவன் காசிக்குப் போய் விட்டுத் திரும்பி வந்தபோது தனது மனைவி வைசூரி போட்டியதால் அழகு இழந்து காணப்பட்டதைக் கண்டு அவளது தங்கையே தனது மனைவி என்று சாதித்தான். இதனால் மிகவும் துக்கம் அடைந்த அர்ச்சகர் சுவாமியிடம் சென்று முறையிட்டுக் கதறினார். அகில உலகங்களுக்கும் சாட்சியாக விளங்கும் ஈச்வரன் தன்னை தினமும் பூஜிக்கும் பக்தனைக் கை விடுவானா? சிவலிங்கத்திலிருந்து வெளிப்பட்ட சுவாமி தனக்கு முன்னால் கண்ணீரும் கம்பலையுமாக நின்றுகொண்டிருந்த மூத்த மகளைச் சுட்டிக்காட்டி "அவள் இவள்" என்று சாக்ஷி சொன்னதால் ஊர் பெயரும் அவளிவ நல்லூர் என்று ஆனது. அப்பெண்ணும் கோயில் குளத்தில் (தை அமாவாசை அன்று) ஸ்நானம் செய்தவுடன் முன்னை விட அழகுடன் கரை ஏறினாள்.

அரக்கோணத்திற்கு அருகில் உள்ள திருவாலங்காட்டிலும் சொன்ன சொல்லைக் காக்க வேண்டித் தீப் பாய்ந்த வேளாளர்களுக்கு சுவாமி சாட்சியாக விளங்கி முக்தி தந்து சாக்ஷி பூதேச்வரனாகக் காட்சி அளிக்கிறான்.


தெரிந்தும் தெரியாமலும் எத்தனையோ பாபங்களைத் தினமும் செய்கிறோம். வாக்காலும் மனத்தாலும் செய்யும் பாபங்களுக்கு அளவே இல்லை. தெய்வக் குற்றங்களே செய்யத் துணிந்துவிட்ட காலம் இது. தெய்வ சொத்தைத் தனது என்று கோர்ட்டிலும் பொய் சாட்சி செய்யத் துணிந்து விட்டார்கள். தெய்வமாவது தண்டிப்பதாவது என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. சாட்சிகளின் அடிப்படையிலே நீதி மன்றங்களும் நடைபெறுவதால் தவறு செய்பவர்கள் தண்டிக்கப் படுவதிலிருந்து தப்பிக்க வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது.நியாயமாகப் பார்த்தால் இவ்வளவு பாபங்கள் செய்யும் நமக்கு சாப்பாடு கிடைப்பதே சுவாமியின் பரம கருணையை காட்டுகிறது என்று காஞ்சிப் பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அக்கிரமங்கள் செய்பவர்கள் நன்றாக இருக்கிறார்களே என்று அலுத்துக்கொள்ளும் பலருக்கு இதுவே பதில். அடுத்தவன் அதிகமாக பாவம் செய்தால் நாம் ஒருக்கால் சற்றுக் குறைவாகப் பாவம் செய்கிறோமோ என்னவோ. குறைவே இல்லாத நிறைவாக ஈச்வரன் ஒருவனே விளங்குகின்றான் என்று திருவாசகம் சொல்கிறது.சுவாமி எல்லோரையும் உடனே தண்டிப்பது என்று ஆரம்பித்தால் எவ்வளவு பேர் மிஞ்சுவார்கள்? அதனால்தான் வேத மாதா நமக்காகப் பரம கருணையுடன் பரமேச்வரனை வேண்டிக்கொள்கிறாள். "ஹே சம்போ உன்னுடைய கோபத்துக்கு நமஸ்காரம்" என்று ஸ்ரீ ருத்ரம் ஆரம்பிக்கிறது

ம்ருடன் , சங்கரன் என்றெல்லாம் ஆராதிக்கப் படும் பகவானை வேதம் மேலும் கேட்கிறது: "எங்களிடம் நீ பரம கருணையோடு அருளவேண்டும். அதனால் பினாக பாணியான நீ வில்லையும் அம்புகளையும் இறக்கி வைத்துவிட்டு வர வேண்டும். பிரதம வைத்யனான நீ எல்லா நலன்களையும் அருள வேண்டும் " என்றெல்லாம் பிரார்த்திக்கிறது.

Thursday, February 25, 2010

பன்னகாபரணன்


ஸ்ரீ பரமேச்வரனுக்குப் பன்னகாபரணன் என்று ஒரு நாமம் உண்டு.திருவாரூருக்குப் பக்கத்தில் உள்ள திருச்சாட்டியக்குடி என்ற ஊரில் மூலவருக்கு இந்தப் பெயர்தான் வழங்கப்படுகிறது. பல ஊர்களில் மூலவருக்கு வெள்ளியில் நாகாபரணம் சார்த்திப் பார்க்கிறோம். பன்னகம் என்றால் நாகம் அல்லது பாம்பு என்று அர்த்தம். ஆதிசேஷனால் சிவராத்திரி பூஜை செய்யப்படும் திருப்பாம்புரம் என்ற ஸ்தலத்தில் மூலவர் மீது பாம்பு சட்டை உரித்துவிட்டுச் சென்றதை சில வருஷங்கள் முன்பு பத்திரிக்கைகளில் பார்த்தோம். திருநாகேஸ்வரத்தில் நாகராஜா (ராகு பகவான்) சன்னதியிலும் இரவில் பாம்பு விட்டுச்சென்ற சட்டையை மறுநாள் காலை அநேகர் பார்த்திருக்கிறார்கள்.ஆனால் சென்ற கிரகண தினத்தன்று தேப்பெருமாள் நல்லூர் என்ற ஊரில் நடைபெற்ற அதிசயம் யாரும் கேள்விப் படாததொன்று

கும்பகோணத்திற்கு சமீபத்திலுள்ள திருநாகேஸ்வரத்தின் அருகில் உள்ளது தேப்பெருமாள் நல்லூர் என்ற கிராமம். தேப்பெருமாள் நல்லூர் சிவன் என்ற மகா சிவபக்தரைப் பற்றி காஞ்சிப் பெரியவர்கள் மிகவும் புகழ்ந்துள்ளார்கள். காரணம் தான் ஒருவராகவே கையில் செம்பு ஏந்தியவராகத் திரவியங்களை
சேகரித்து , கும்பகோணத்தில் மரங்கள் முளைத்துக் கிடந்த ஸ்ரீ நாகேஸ்வர சுவாமி கோபுரத்தைத் திருப்பணி செய்ததோடு பல சிவ க்ஷேத்திரங்களில் அன்ன தானம் ஏராளமாக செய்ததால் எல்லோரும் அவரை அன்னதான சிவன் என்றே அழைத்தனர். அப்படிப்பட்ட மகானைத் தந்தது தேப்பெருமாநல்லூர்.

இந்த ஊர் சிவாலயத்தில் சென்ற கிரகணத்தன்று ஒரு நல்ல பாம்பு வில்வ இலைகளை சிவ சன்னதிக்குள் நுழைந்து சுவாமியின் சிரசில் வைப்பதை அர்ச்சகர் பார்த்துவிட்டு, போட்டோ எடுப்பவரை அழைத்துக் காட்டியிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட படங்களைத்தான் நீங்கள் இங்கு பார்க்கிறீர்கள்.


முதல் படத்தில் பிராகாரத்தில் உள்ள வில்வ மரத்தில் பாம்பு வில்வ இலையை எடுப்பதைக் காண முடிகிறது.அடுத்ததாக, அப்பாம்பு,கர்ப்பக்ருகத்தின் கோமுகி வழியாக சுவாமி சன்னதிக்குள் நுழைவதைத் தெளிவாகக் காணலாம். அடுத்த படங்களில் அது மூலவருக்கு முன் வந்துவிட்டதையும்,அதன் வாயில் வில்வ தளம் இருப்பதையும் கவனிக்கலாம். கடைசியாக , சுவாமியின் பாணத்தைச் சுற்றி சிரத்தை அடைந்து வில்வ அர்ப்பணம் செய்துவிட்டுப் படம் எடுத்து நிற்பதையும் பார்க்கும் போது,பரவசம் அடைகிறோம்.
புகைப்படத்தைப்பார்த்தும் நம்பாதவர்கள் இருக்கிறார்கள்.பல ஊர்களில் சுவாமியின் மீது பாம்பு சுற்றிக் கொள்வதையும் சட்டையை விட்டுவிட்டுப் போவதையும் எவ்வளவோ பேர் பார்த்திருந்தும்,போட்டோ எடுத்திருப்பது இதுவே முதல் முறையாக இருக்கலாம். திருக்குரக்குக்கா(வல் ) என்ற பாடல் பெற்ற ஸ்தலம் மாயூரம் அருகில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டு தோறும் ஒரு குரங்கு (ஊர்ப் பெயருக்கு ஏற்ற மாதிரி) கருவறைக்குள் சென்று இலைகளாலும் மலர்களாலும் சுவாமியை அர்ச்சிக்கிறது. இதைப் படம் எடுத்தாலும் நம்பமாட்டேன் என்று சொல்பவர்கள் இருப்பார்கள். பாம்பு,குரங்கு இவற்றிற்கு ஆறறிவு ஏது என்பார்கள். அவை சாதாரண பாம்போ குரங்கோ அல்ல. யாரோ சாப விமோசனத்திற்காக இந்த உருவங்களில் வந்திருக்கக் கூடும். நமது அறிவுக்குத் தெரியாதவற்றை மறுப்பது அறிவீனம்.

யக்ஷர்,கின்னரர்,யமன்,வருணன்,அக்னி,வாயு,சூர்யன்,வசுக்கள்,தேவர்கள்,மனிதர்கள் ஆகியோர் மட்டுமல்லாமல் ,வானரமும்,நாகமும் அயர்வே இல்லாமல் உன்னை பூஜித்து,வரங்கள் எல்லாம் பெறுவதைக் கண்டு,அடியேனும் உன் திருவடிகளை அடைந்தேன் என்று திருப்புன்கூர் தேவாரப் பதிகத்தில் ஸ்ரீ சுந்தர மூர்த்தி சுவாமிகள் பாடுவதைப்போல், நாமும் நாகம் செய்யும் பூஜையைப் பார்த்தாவது, ஈச்வரனை வில்வ தளங்களால் பூஜிப்போமாக.

Tuesday, February 9, 2010

கயிலையில் மகாசிவராத்திரி


கயிலை பாதி காளத்திபாதி அந்தாதி என்று ஒரு பிரபந்தம் பாடியிருக்கிறார் நக்கீரர். அதில் ஒரு பாட்டு கயிலையைப் பற்றியும் அடுத்த பாட்டு காளத்தியைப்பற்றியும் மாறி மாறி வரும். கயிலைக்கு நிகரான ஸ்தலம் என்பதால் தக்ஷிண கைலாசம் எனப்படும் இந்த ஸ்தலத்தில் நடைபெறும் மகா சிவராத்திரியை தரிசிக்கப் பல்லாயிரம் ஜனங்கள் இங்கு வருகிறார்கள்.


சிலந்தி,பாம்பு,யானை,கண்ணப்பர் ஆகியோரது பூஜையை ஏற்றுக் கொண்டுள்ள காளத்திநாதனைமூவரும் தேவாரம் பாடியிருக்கிறார்கள். சாந்த்ர மாதக் கணக்கில் இந்த வருஷம் பிப்ரவரி மாதம் 12 தேதி மகாசிவராத்திரி இங்கு கொண்டாடப்படுகிறது.(தமிழ் நாட்டில் சௌரமாதக் கணக்கு அனுசரிப்பதால் மார்ச் 13 அன்று பெரும்பாலான சிவாலயங்களில் நடைபெறுகிறது).


29 ஆண்டுகளாக தேவகோட்டை ராமநாதன் செட்டியார் என்பவர் இந்த ஸ்தலத்திற்கு வந்து மகாசிவராத்திரியை தரிசித்து வந்தார். அப்போது ஆலய குருக்களாக இருந்தவருக்கு 20 வருஷங்களாக புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. அவரது வேதனையைப் புரிந்துகொண்ட செட்டியார்,அந்த ஆண்டு மகாசிவராத்திரி ஆறு கால பூஜை செலவுகளையும் தானே ஏற்று விரதம் இருந்து குருக்களுக்காகப் பிரார்த்தனை செய்தார். அவரது பிரார்த்தனை வீண் போக வில்லை.பரமேச்வரனுடைய கருணையால் பிள்ளைக் குழந்தை பிறந்தது.


செட்டியார் மகா சிவபக்தர் ஆதலால் காளத்தி நாதனின் கோயிலைத் திருப்பணி செய்யத் தொடங்கினார். சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற பிரமாண்டமான அத்திருப்பணி ஒன்பது லட்சத்தைத் தாண்டியதாம். 1912 ல் மகா கும்பாபிஷேகமும் நடத்தி மகிழ்ந்தார் செட்டியார். அதனால் மக்கள் அவரைத் திருப்பணிச் செட்டியார் என்று அழைத்தார்கள்.


தனது முப்பதாவது ஆண்டு மகாசிவராத்திரியைக் கொண்டாட 1942 ல் அங்கு சென்ற செட்டியார் காலம் தோறும் தன் மனைவியுடன் சுவாமியின் அபிஷேக ஆராதனைகளைத் தரிசித்துவிட்டு ஆறாவது காலத்தின் இறுதியில் அருகே நின்ற மனைவியிடம் தாலியைக் கழற்றி ஸ்ரீ ஞானப்ப்ரசூனாம்பிகையின் கழுத்தில் அணிவிக்கும்படிக் குருக்கள் கையில் கொடுக்கச் சொன்னார். அம்பாளுக்கு அது சார்த்தப் பட்டுக் கற்பூர தீபம் நடந்தது. தனது இடத்தை வந்து அடைந்ததும் சிவசிவ என்று சொல்லிக்கொண்டே விபூதி இட்டுக் கொண்டவுடன் மனைவி கொண்டுவந்த தண்ணீரைக் குடித்து விட்டு மீண்டும் ஒருமுறை சிவசிவ என்று சொல்லிக் கொண்டே கண்களை மூடினார். அடுத்த நிமிடம் அவரது ஜீவன் ஸ்ரீ காளத்தி நாதனின் பாதாரவிந்தங்களை அடைந்தது. இன்றும் கோயில் வாயிலில் சிலாரூபமாகத் திருப்பணிச் செட்டியார் கைகளைக் கூப்பியபடிக் காட்சி அளிக்கிறார்.


தன் நினைவாகவே இருக்கும் பக்தர்களைக் கடைசி வரையிலும் கூட இருந்து என்றும் காப்பாற்றும் பரமேச்வரன் சர்வ மங்களங்களையும் அளிக்க வேண்டும்படி ஸ்ரீ மகாசிவராத்திரி தினத்தில் பிரார்த்திப்போமாக.

Monday, January 25, 2010

தெய்வ சோதனை

நமக்கு அடிக்கடி வரும் சந்தேகங்களில் ஒன்று , பக்தர்களை சுவாமி ஏன் சோதிககிறார் என்பது. இதற்கு பதில் கேள்வியிலேயே இருக்கிறது என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். உண்மையான பக்தர்களையே சுவாமி சோதிக்கும் போது , எண்ணியது எல்லாம் நிறைவேற வேண்டும் என்று எதிர்பார்த்து சுவாமியை வழிபடும் நமக்கெல்லாம் ஏன் சோதனை வரக்கூடாது?


திருமுருகன் பூண்டி என்ற சிவஸ்தலம் திருப்பூருக்குப் பக்கத்தில் இருக்கிறது. ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சிவ பூஜை செய்ததால் மூலவருக்கு முருக நாதர் என்று பெயர். தன்னுடைய ஆப்த நண்பரான சேரமான் பெருமாள் நாயனார் தந்த காணிக்கைகளை எடுத்துக்கொண்டு ஸ்ரீ சுந்தர மூர்த்தி சுவாமிகள் இந்த ஊர் வழியாகப் போகும்போது நடந்த சம்பவம், நமக்கு உணர்த்துவதற்காக நடந்ததாகக் கொள்ளவேண்டும். நம்முடைய சொத்து சுகம் எல்லாம் சுவாமி தந்தது என்றா நினைக்கிறோம்? நாம் சம்பாதித்தது என்று தானே நினைக்கிறோம்? சுந்தரர் மூலம் நமக்காகவே ஒரு பாடம் உணர்த்தப்படுகிறது. சிவபூதங்கள் வேடர்கள் உருவத்தில் போய் சுந்தரரை மிரட்டி அவரிடம் இருந்த பொருள்களைப் பறித்துக்கொண்டு போய் விடுகின்றன. சுந்தரருக்கு வருத்தம் தாங்கமுடியவில்லை. நேராகத் திருமுருகன்பூண்டிக் கோவிலுக்குப் போய் சுவாமி மீது தேவாரப் பதிகம் பாடுகிறார்.(சுவாமியும் இதைக் கேட்க வேண்டும் என்ற ஆசையால் தானே இப்படி நாடகம் நடத்தினார்!) வழிப்பறித் திருடர்கள் இருக்கும் இந்த ஊரில் அந்த பயத்திலிருந்து பக்தர்களைக் காப்பாற்றாமல் நீயும் அம்பிகையும் எதற்காக இங்கு இருக்கிறீர்கள் என்று நிந்திப் பதைப் போலப் பாடியவுடன் சுவாமி அத்தனை பொருள்களையும் பூத கணங்கள் மூலம் சுந்தரரிடம் திரும்ப சேரும்படி செய்தார். இப்பொழுது சுவாமி கொடுத்த பொருள் என்று சொல்வதுதானே நியாயம்!

நம்மிடம் உள்ள ஐச்வர்யம் மற்றவர்களுக்கு உதவி செய்யவே ஈச்வரனால் கொடுக்கப் பட்டது என்பதை அறிய வேண்டும். அப்படிக் கொடுக்காத உலோபிகளுக்குக் கடுமையான நரகங்களை சுவாமி வைத்துள்ளதாக அப்பர் சுவாமிகள் பாடியிருக்கிறார்.

இன்னொரு விஷயம். தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் தங்களை கேட்டுக் கொள்ளலாம். இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்காமல் கண்ணீர் மல்க என்றைக்கு சுவாமி சன்னதியில் நிற்கிறோம்? சோதனை வந்தால் சுவாமியிடம் கோபிக்க மட்டும் தவறுவதில்லை. என்ன பூஜை பண்ணி என்ன பிரயோஜனம்? சுவாமி கண் திறக்கவில்லையே என்று அலுத்துக் கொள்பவர்கள் பலர். எது நடந்தாலும் நடக்கட்டும். ஈச்வர சங்கல்பப் படியே நடக்கும் என்று திடமாக இருப்பவர்கள் மிகச் சிலரே. அவர்கள் சோதனைகளைக் கண்டு அஞ்ச மாட்டார்கள். அவர்கள் சோதனைகளை வென்றவர்கள் ஆகிவிடுகிறார்கள். அப்படிப் பட்ட பக்தி நமக்கு உண்டாகும்படி ஸ்ரீ பரமேச்வரன் அருள வேண்டும்.