Monday, October 19, 2009

தீபாவளி சிந்தனை

தீபாவளி என்றவுடனேயே காசியும் கங்கையும் நினைவுக்கு வரும். முன்பெல்லாம் காசிக்குப் போய்விட்டு வந்தவர்கள் சில பழங்களையும் காய் கறிகளையும் மீதி உள்ள தங்கள் ஆயுள் காலத்தில் சேர்த்துக்கொள்வதில்லை என்று வைராக்யமாக இருந்தார்கள். சிலர் தங்களிடம் உள்ள கெட்ட குணங்களை விட்டு விடுவது என்று தீர்மானிப்பார்கள். தீர்மானம் ஒரு பக்கம் இருக்கட்டும். கோபம் முதலிய கெட்ட குணங்கள் நம்மை விட்டுப் போவது அவ்வளவு சுலபமா என்ன ? துர்வாச மகரிஷி என்றவுடன் அவரது கோபமும் சாபமும் நினைவுக்கு வரும். ரிஷிக்கே தன்னை திருத்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. திருக்களர் என்ற க்ஷேத்ரத்தை அடைந்து தபஸ் பண்ணினார். இந்த ஊர் திருத்துறைப் பூண்டிக்கு அருகில் இருக்கிறது. சுவாமிக்குப் பெயர் பாரிஜாத வநேச்வரர் என்பதாகும். ஸ்ரீ பரமேச்வரன் ரிஷிக்கு தரிசனம் அளித்து ஆனந்த தாண்டவம் காட்டி அவரை ஆனந்த மயமாக்கிணன் என்பது அந்த ஊர் புராணம்.

இப்பொழுது பார்த்தால் கெட்ட குணங்கள் இருப்பதாக யாரும் ஒத்துக்கொள்வதில்லை. நாம் செய்வது எல்லாம் சரி என்ற எண்ணம் (ஆணவம் என்று கூட சொல்லலாம்) முட்டுக்கட்டையாக இருக்கிறது. நிலைமை இப்படி இருக்கும்போது ஒருக்கால் இவர்கள் காசிக்குப் போய்விட்டு வந்தாலும் எதையும் த்யாகம் செய்யப் போவதில்லை. இவர்கள் வரும் தலைமுறைக்கும் நல்ல வழியைக் காட்டாமல் போகிறார்களே என்பதைப் பார்க்கும்போது சொல்லாமல் இருக்க முடியவில்லை.

இந்தக் காலப் பெரியவர்கள் காயையோ பழத்தையோ த்யாகம் செய்வதை விட தாங்கள் அனுதினமும் ச்ரத்தையுடன் பார்க்கும் டிவி சீரியல்கள் பலவற்றில் சிலவற்றையாவது பார்க்காமல் இருந்தால் பெரிய புண்ணியமாகப் போகும். பொழுது போகவில்லை என்பதால் கண்டவற்றையெல்லாம் பார்க்காமல் ஆத்மா லாபத்திற்கு வழி தேடவேண்டும். குழந்தைகளுக்கு முன் உதாரணமாக இருந்து காட்ட வேண்டும்.

தீபாவளி செய்தி என்று வருஷா வருஷம் நரகாசுரன் கதையை மட்டும் சொல்லி விட்டுப் பக்ஷணம் சாப்பிட்டுவிட்டு டிவிநிகழ்ச்சிகள் ஒன்று விடாமல் பார்த்துக்கொண்டு தீபாவளியை கொண்டாடுவதைத்தானே நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்! பண்டிகை என்பது நம்மை மேலும் புனிதப் படுத்துவதற்காக ஏற்பட்டது என்பதை மறந்து உல்லாசமாகப் பொழுது போக்குவதாக மாறி விடக்கூடாது. இந்த எண்ணம் எல்லோருடைய மனதிலும் தோன்றுமாறு ஸ்ரீ பரமேச்வரன் அனுக்ரகம் செய்ய வேண்டும்.