Saturday, December 5, 2009

சண்டிகேஸ்வரர்


நம்மில் பலருக்குக் கோயில்களில் பல மூர்த்திகளைப் பற்றித் தெரிவதில்லை. தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வமும் காட்டுவதில்லை. அம்மூர்த்திகளுள் சண்டிகேஸ்வரரும் ஒருவர்.அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான அவரைப்பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் அவரிடம் கையைத் தட்டிவிட்டு வர மட்டும் நமக்குத் தெரியும். காரணம் தெரியாமலே கையைத் தட்டுகிறோம். பஞ்ச மூர்த்தி புறப்பாட்டில் சண்டிகேஸ்வரரும் ஒரு மூர்த்தியாக சுவாமியுடன் தீர்த்தவாரிக்கு வருகிறார். அவருக்கு அந்தப்பதம் எப்படிக் கிடைத்தது என்று தெரிந்து கொள்ளவேண்டாமா?

திருப்பனந்தாளுக்குப் பக்கத்தில் திருச் சேய்ஞலூர் என்ற ஊர் இருக்கிறது. இங்கு முருகன் சிவபூஜை செய்ததாக ஸ்காந்த புராணம் சொல்கிறது. இவ்வூரில் காச்யப கோத்திரத்தில் வேதியர் வம்சத்தில் எச்சதத்தன் என்பவனுக்கு உலகம் உய்யும் பொருட்டு விசாரசர்மன் என்ற குழந்தை பிறந்தது. ஏழு வயதில் உபநயனம் ஆனவுடன் வேதம் முறையாகப் பயின்று வரும் நாளில் ஊரிலுள்ள பசு மாடுகளை மண்ணி ஆற்றங்கரை அருகில் மேய்த்து ஆற்று மணலால் சிவலிங்கம் செய்து அதை பசும் பாலால் அபிஷேகம் செய்து வந்தான் அச்சிறுவன் .ஊரார் புகார் செய்ததால் தந்தை எச்சதத்தன் மரத்தின் பின் நின்று இதைப் பார்த்துக் கோபம் கொண்டு சிவபூஜைக்காக அங்கு வைத்திருந்த பால் குடத்தைக் காலால் உதைத்தான். சிவத்தியானம் நீங்கிக் கண் விழித்த பாலகன், சிவாபராதம் செய்தது தந்தை என்றாலும் தண்டிக்கப்படவேண்டியவர் என்று தீர்மானித்து அருகில் இருந்த மாடு மேய்க்கும் கோலை கையில் எடுத்தவுடன் அது மழுவாக மாற , அதைக் கொண்டு தகப்பனாரின் உதைத்த காலை வெட்டி வீழ்த்தினார். அடுத்த கணமே சிவபூஜையைத் தொடர ஆரம்பித்தார்.
பால் உகந்த நாதனாகிய பரமேச்வரன் உமா தேவியோடு வ்ருஷப வாகனத்தில் அக்குழந்தைக்குமுன் காட்சிஅளித்தார். ரிஷிகள் வேத கோஷம் செய்யவும் பூத கணங்கள் அருகில் நிற்கவும் பரம கருணையுடன் வெளிப் பட்ட புண்ணிய மூர்த்தியைக் கண்டு ஆனந்தத்தின் எல்லைக்கே சென்ற அப்பாலகன் சுவாமியின் பாத மலர்களை நமஸ்கரித்தான்.

அக்குழந்தையை எடுத்த ஈச்வரன் ,"என்னிடம் வைத்த பக்தியால் தகப்பனாரின் காலை வெட்டின உனக்கு அடுத்த தந்தை இனி நானே " என்று சொல்லி அப்பாலனைத் தழுவி கருணையோடு தடவி உச்சி மோந்து ,
"உனக்கு சண்டேசப் பதம் தந்தோம். இனி நாம் உண்பதும் உடுப்பதும் சூடுவதும் உன்னிடமே வந்து சேரும் " என்று சொல்லித் தனது சிரத்தில் இருந்த கொன்றை மாலையை எடுத்து அக்குழந்தைக்குச் சூட்டினார்.

எனவேதான் கோயில்களில் சிவ நிர்மால்யம் வரும் கோமுகத்தின் அருகில் (வடக்குப் பிராகாரத்தில்) தெற்கு நோக்கியவாறு சண்டிகேஸ்வரர் சன்னதி இருக்கிறது. இவரை தரிசித்தால்தான் சிவ தரிசனம் செய்த பலன் கிடைக்கும். சதா சிவத்யானத்தில் இருக்கும் இவருக்கு அஞ்சலி செய்ய கையை லேசாகத் தட்டி அவரிடம் சிவாலய தரிசன பலனைப் பெறுகிறோம்.

ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீச்வரர் கோவிலில் வடக்குப் பிராகார சுவற்றில் சுவாமியும் அம்பாளும் அமர்ந்த கோலத்தில் கொன்றை மாலையை ஒப்பற்ற பக்தனுக்குச் சூட்டும் பெரிய சிற்பத்தைக் கண்டு மகிழ ஒரு தடவையாவது அங்கு நேரில் செல்ல வேண்டாமா?

Wednesday, November 18, 2009

திருப்புன்கூரில் சனி மகா பிரதோஷம்





தற்காலத்தில் ஜனங்களிடம் சிவ பக்தி அதிகமாகிறது என்பதை பிரதோஷங்களில் சுவாமி தரிசனம் செய்யப் போகிறவர்கள் ஒத்துக்கொள்வார்கள். உத்சவ காலங்களிலும் இதே போல் கூட்டம் தான்,அண்மையில் துலா உத்சவத்தின் போது மயிலம்மன் நடராஜர் சன்னதியில் ஆடியதை மயிலாடுதுறையில் பக்தர் கூட்டம் வழிபடுவதை இங்கு காண்கிறீர்கள்.

எத்தனையோ கவலைகளும் பிரச்சினைகளும் நிம்மதி இன்மையும் அதிகமாகிக் கொண்டு இருப்பதாலோ என்னவோ ஒவ்வொரு சிவாலயத்திலும் கூட்டம் அதிகமாகிக் கொண்டு போகிறது. சனி மகா பிரதோஷ மகிமையைத் தெரிந்துகொண்டவர்களது எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதில் எல்லோருக்கும் சோம சூத்திர பிரதட்சிணம் முதலிய விதிமுறைகள் ஒருவேளை தெரிந்திருக்காவிட்டாலும் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்திருப்பதே சிவானுக்ரகம் தான். பசும் பாலுக்குப் பதிலாக பாக்கெட் பால் கொடுப்பதை நிறுத்தினால் விசேஷம்.

நந்திகேச்வரருக்கு விசேஷமாக விளங்கும் ஆலயங்களில் பிரதோஷ தரிசனம் செய்வது இன்னமும் ஆனந்தம் அளிக்கிறது.வைத்தீஸ்வரன் கோயிலுக்கு அருகிலுள்ள திருப்புன்கூர் ஸ்ரீ சிவலோகநாத சுவாமி கோயிலுக்கு சனி மகா பிரதோஷம் செய்யும் பாக்கியம் கிடைத்தது.ராஜ கோபுர வாயிலுக்கு நேராக இல்லாமல் சற்று விலகிய நிலையில் (நந்தனாருக்காக)நந்தி பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறார். ஸ்ரீ சிவலோகநாத சுவாமி ஸ்வயம்பு மூர்த்தி.மூவராலும் தேவாரம் பாடப்பெற்றவர். மழை பெய்வதற்காகவும் வெள்ளம் நிற்பதற்கும் கலிக்காம நாயனாரிடம் நிலம் பெற்ற மூர்த்தி. அம்பிகை சௌந்தர நாயகி என்ற பெயரில் தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறாள்.



ஸ்தல விருக்ஷம் புங்க மரம் வெளி பிராகாரத்தில் இருக்கிறது. மேடையில் பஞ்ச லிங்கங்கள் இருப்பதைக் காணலாம்.



சுமார் நான்கு மணி அளவில் நந்திக்கு அபிஷேகம் ஆரம்பிக்கிறது. சாரத்தில் நின்றுகொண்டு சிவாசாரியார் அபிஷேகம் செய்கிறார். குடம் குடமாக பால், தயிர், சந்தனம் முதலிய திரவியங்கள் அபிஷேகம் செய்வதைக் காண ஆயிரம் கண் வேண்டும். தீபாராதனைக்குப் பிறகு மலர் மாலைகளால் அற்புதமாக அலங்காரம் செய்கிறார்கள். சுமார் பத்து நபர்கள் கீழே நின்று கொண்டு திரவியங்களை எடுத்துக்கொடுத்தும் தரையை சுத்தப்படுத்தியும் பக்தர்களுக்கு விநியோகம் செய்தும் உதவுகிறார்கள். சிவ பஞ்சாக்ஷரம் எழுத தாள்களை விநியோகம் செய்கிறார்கள்.பள்ளிக் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அதில் பஞ்சாக்ஷரம் எழுதிப் பூர்த்தி செய்த தாள்களைதிருப்பிக் கொடுக்கிறார்கள். ஆறரை மணிக்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது.

பிரதோஷ தரிசனம் ஆரம்பித்ததிலிருந்து பலத்த மழை பெய்தது. பக்தர்களும் அக்கருணை மழையில் நனைந்தனர். ஆயுட்காலத்தில் ஒரு தடவையாவது சிவலோகனாதனின் பிரதோஷ தரிசனத்தை சிவ பக்தர்கள் அவசியம் செய்ய வேண்டும்.












Monday, October 19, 2009

தீபாவளி சிந்தனை

தீபாவளி என்றவுடனேயே காசியும் கங்கையும் நினைவுக்கு வரும். முன்பெல்லாம் காசிக்குப் போய்விட்டு வந்தவர்கள் சில பழங்களையும் காய் கறிகளையும் மீதி உள்ள தங்கள் ஆயுள் காலத்தில் சேர்த்துக்கொள்வதில்லை என்று வைராக்யமாக இருந்தார்கள். சிலர் தங்களிடம் உள்ள கெட்ட குணங்களை விட்டு விடுவது என்று தீர்மானிப்பார்கள். தீர்மானம் ஒரு பக்கம் இருக்கட்டும். கோபம் முதலிய கெட்ட குணங்கள் நம்மை விட்டுப் போவது அவ்வளவு சுலபமா என்ன ? துர்வாச மகரிஷி என்றவுடன் அவரது கோபமும் சாபமும் நினைவுக்கு வரும். ரிஷிக்கே தன்னை திருத்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. திருக்களர் என்ற க்ஷேத்ரத்தை அடைந்து தபஸ் பண்ணினார். இந்த ஊர் திருத்துறைப் பூண்டிக்கு அருகில் இருக்கிறது. சுவாமிக்குப் பெயர் பாரிஜாத வநேச்வரர் என்பதாகும். ஸ்ரீ பரமேச்வரன் ரிஷிக்கு தரிசனம் அளித்து ஆனந்த தாண்டவம் காட்டி அவரை ஆனந்த மயமாக்கிணன் என்பது அந்த ஊர் புராணம்.

இப்பொழுது பார்த்தால் கெட்ட குணங்கள் இருப்பதாக யாரும் ஒத்துக்கொள்வதில்லை. நாம் செய்வது எல்லாம் சரி என்ற எண்ணம் (ஆணவம் என்று கூட சொல்லலாம்) முட்டுக்கட்டையாக இருக்கிறது. நிலைமை இப்படி இருக்கும்போது ஒருக்கால் இவர்கள் காசிக்குப் போய்விட்டு வந்தாலும் எதையும் த்யாகம் செய்யப் போவதில்லை. இவர்கள் வரும் தலைமுறைக்கும் நல்ல வழியைக் காட்டாமல் போகிறார்களே என்பதைப் பார்க்கும்போது சொல்லாமல் இருக்க முடியவில்லை.

இந்தக் காலப் பெரியவர்கள் காயையோ பழத்தையோ த்யாகம் செய்வதை விட தாங்கள் அனுதினமும் ச்ரத்தையுடன் பார்க்கும் டிவி சீரியல்கள் பலவற்றில் சிலவற்றையாவது பார்க்காமல் இருந்தால் பெரிய புண்ணியமாகப் போகும். பொழுது போகவில்லை என்பதால் கண்டவற்றையெல்லாம் பார்க்காமல் ஆத்மா லாபத்திற்கு வழி தேடவேண்டும். குழந்தைகளுக்கு முன் உதாரணமாக இருந்து காட்ட வேண்டும்.

தீபாவளி செய்தி என்று வருஷா வருஷம் நரகாசுரன் கதையை மட்டும் சொல்லி விட்டுப் பக்ஷணம் சாப்பிட்டுவிட்டு டிவிநிகழ்ச்சிகள் ஒன்று விடாமல் பார்த்துக்கொண்டு தீபாவளியை கொண்டாடுவதைத்தானே நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்! பண்டிகை என்பது நம்மை மேலும் புனிதப் படுத்துவதற்காக ஏற்பட்டது என்பதை மறந்து உல்லாசமாகப் பொழுது போக்குவதாக மாறி விடக்கூடாது. இந்த எண்ணம் எல்லோருடைய மனதிலும் தோன்றுமாறு ஸ்ரீ பரமேச்வரன் அனுக்ரகம் செய்ய வேண்டும்.

Tuesday, September 22, 2009

சிவ தருமம்

தர்மங்களில் உயர்ந்தது சிவ தர்மம் என்று பெரியவர்கள் சொல்வார்கள். செய்யும் செயல்கள் எல்லாம் ஒ சம்புவே , உனக்குச் செய்யும் ஆராதனை என்று கொள்வாய் என ஆதி சங்கரரும் பிரார்த்திக்கிறார். சங்கீதமும் ஈச்வர உபாசனை ஆகிறது என்று ஸ்ரீ தியாகராஜசுவாமிகளும் பாடுகிறார். ராஜாக்கள் சிவ தர்மம் தொடர்ந்து நடப்பதற்காக நிலங்களை அளித்தார்கள். ராஜாங்கத்தோடு தொடர்பு கொண்ட கோவிந்ததீக்ஷிதர் ,சிறுத்தொண்டர் ஆகியோரும் சிவ தர்மம் தழைக்கப் பணிசெய்தார்கள். பிற்காலத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் செய்த ஆலயத் திருப்பணிகளும் சிவ தருமங்களும் எல்லோருக்கும் தெரியும்.

நாளடைவில் இந்த தர்ம காரியங்கள் சிறிது சிறிதாகக் குறைய ஆரம்பித்தன. கோயில் நிலங்களில் இருந்து குத்தகை பாக்கி வசூல் ஆகாமல் பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டது. தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் ஆலயங்களில் பொறுப்பு ஏற்று நிலைமை இன்னும் மோசமானது. பொது மக்களோ அரசாங்கமோ தட்டிக் கேட்பதில்லை. அர்ச்சகர்கள் தங்கள் சொற்ப சம்பளத்தையும் பல மாதங்கள் கழித்தே பெறுகிறார்கள். பிரார்த்தனை ஸ்தலங்கள் உண்டி வருமானத்தில் இந்த நிலையில் இருந்து தப்பிக்கின்றன. கிராமக் கோயில்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. வெளியூருக்குப் பிழைக்கச் சென்றவர்கள் பலர் தங்கள் கிராமத்தை திரும்பிப்பார்பதில்லை.

நமக்கு சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கி இருப்பவர் சிலர். பகவான் பார்த்துக்கொள்வார் என்று சிலர். இதில் குளிர் காய்பவர்கள் குத்தகைக் காரர்களும் வோட்டு வங்கிக்காக அலையும் அரசியல்வாதியும் தான். ஆன்மீக நாட்டம் உண்டு என்று சொல்லிக்கொள்ளும் சிலரும் தங்களுக்குப் பிரச்னை வந்தால்தான் சுவாமியைப் பற்றி நினைக்கிறார்கள். இந்த நிலை நீடித்தால் கிராமக் கோயில்களில் பூஜை செய்பவர்கள் மிகவும் குறைந்து விடுவார்கள். கோயில்களும் சீரழிந்து போகும்.
இந்த நிலை மாற விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் சம்பளத்தில் மாதம் தோறும் இயன்ற தொகையை சிவ தர்மமாக ஒதுக்க வேண்டும். பல வழிகளில் பணம் தண்ணீராகச் செலவழியும் இக்காலத்தில் இது ஒன்றும் சிரமான காரியமே இல்லை. மனதில் தர்ம சிந்தனை வந்தாலே போதும். ஆலய திருப்பணியோடு அர்ச்சகர்களின் நல்ல வாழ்க்கைக்கும் உபகாரம் செய்தால் அந்த தர்மம் குடும்பத்தையே காப்பாற்றும். கல்யாணங்களில் வீண் டாம்பீகமாக செலவாகும் தொகையில் சிறிய பங்கை சிவ தர்மம் செய்தால் தம்பதிகளின் வாழ்க்கை குறைவில்லாமல் இருக்கும். செய்து பார்த்தால்தான் இதன் அருமை புரியும்.

ஸ்தல யாத்திரை செய்பவர்கள் எத்தனை ஊர்கள் பார்த்தோம் என்று எண்ணி கொள்கிறார்களே தவிர அந்த ஊர் கோயில் களுக்கும் சிப்பந்திகளுக்கும் உதவி செய்தோமா என்று நினைப்பதில்லை. சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்துகிறார்களே என்று கவலைப்படுவதில்லை. கோவில்கள் மரம் முளைத்து இடிந்திருந்தால் பாவம் என்று சொல்லிவிட்டுப் போய் விடுகிறார்கள்.

நவீன வாழ்க்கை நடத்தும் நாம் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும். பிறருக்காக உதவ முன்வர வேண்டும். ஏதாவது ஒரு வகையில் சிவ தர்மம் செய்வதை குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். அவர்களின் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சி நம்மை வாழ்வாங்கு வாழ்விக்கும். இது வரை செய்யாவிட்டால் இன்று முதல் செய்யத் தொடங்குவோம். அதுவே ஆலயங்களில் பூஜை செய்பவர்களுக்கு நம்பிக்கை தருவதாக அமையும்.

Wednesday, August 5, 2009

காயத்ரி ஜபம்

கண்ணை மூடிக்கொண்டு த்யானம் செய்பவர்கள் சிவானந்தம்பெறுவதாகத் திருமூலர் என்ற சித்தர் சொல்கிறார் தற்காலத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டே ஜபம் செய்பவர்களைப் பார்த்து என்ன சொல்வது? ஜபம் என்பது மனத்தை லயப்படுத்தி நிர்மலம் ஆக்குவது. இப்போதெல்லாம் அதை எப்படி செய்வது என்று பணம் கொடுத்துக் கற்றுக்கொள்கிறார்கள். நாம் இதை த்யான சுலோகம் சொல்லி அந்த தெய்வத்தின் உருவத்தை மனதில் த்யானித்து மந்திரம் மூலம் திரும்பத் திரும்பத் த்யாநிக்கிறோம். இந்த ஜபத்தை குருவின் மூலம் உபதேசம் பெற்று செய்ய ஆரம்பிக்கிறோம்.

நாம் முதன்முதலில் உபதேசம் பெறுவது தகப்பனாரிடமிருந்து காயத்ரி மந்திரத்தையே.ஆகவே தகப்பனார் முதல் குரு ஆகிறார். எந்த ஒரு உபதேச மந்திரமும் கொஞ்ச நாள் மட்டும் பண்ணிவிட்டு விட்டுவிடுவதற்கு அல்ல. ஆயுள் முழுவதும் செய்ய வேண்டியது மந்திர ஜபம். தனது குமாரனுக்கும் தகப்பனரே காயத்ரியை உபதேசிக்கிறார். நாம் தினமும் செய்யத் தவறியதை குமாரனுக்கு உபதேசம் செய்ய என்ன யோக்யதை இருக்கிறது என்று சந்த்யா வந்தனம் செய்யாத ஒவ்வொரு தகப்பனும் எண்ணிப் பார்க்கவேண்டும். சந்த்யை செய்யவேண்டும் என்று புத்திரனைப் பார்த்து அவன் சொன்னால் நீங்கள் மட்டும் பண்ணாமல் இருக்கலாமா என்று பதில் வரும். உபநயனம் செய்து தரும் வாத்யாரும் பிரம்மோபதேசம் ஆனவுடன் தக்ஷினையை வாங்கிக்கொண்டு புறப்படுவதிலேயே கவனமாக இருக்கிறார்களே தவிர உபதேசம் பெற்ற வடுவுக்கு சந்த்யா மந்திரங்களை சொல்லிக்கொடுக்காமல் சென்று விடுகிறார். அந்தப் பையனின் நிலையோ பரிதாபம். சொல்லிக்கொடுப்பவரைத் தேடி அலைகிறான். வீட்டில் யாரும் சந்த்யாதி கர்மாக்களைப் பண்ணாவிட்டால் தானும் செய்யாமல் விட்டு விடுகிறான். நேரம் இல்லை என்ற சாக்கு வேறு. ரிடையர் ஆனவர்களுக்கே சந்த்யை செய்ய நேரம் இல்லாமல் இருக்கும் போது படிக்கும் குழந்தை சாக்கு சொல்வதில் ஆச்சர்யமில்லை. இதற்காகத்தான் பெரியவர்கள் குழந்தைகளுக்கு முன் உதாரணமாக இருந்து காட்ட வேண்டியது முக்கியம் ஆகிறது.

ஆவணி அவிட்டம் காயத்ரி ஜபம் வந்தால் வேறு வழி இல்லையே என்று மனதில் திட்டிக்கொண்டு வேண்டா வெறுப்போடு பண்ணிவிட்டு ஆபீசுக்கு ஓடுகிறான். ஒரு சமயம் பார்த்தால் இப்படி வேஷம் போடுகிறார்களே என்று வேதனையாக இருக்கிறது.கண்டதுக்கு எல்லாம் லீவு போட முடிகிறது.உபாகர்மா அன்று மட்டும் லீவு போட மனம் இல்லை. வாத்தியார்களும் இந்த அவசரத்திற்கு உடந்தை.ஹோமம் செய்யாமல் பூணலை மாட்டி விட்டு ஆபீசுக்கு அனுப்பி விடுகிறார்கள்.எப்படியோ தக்ஷிணை வந்தால் சரி.

இதை எல்லாம் ஹாச்யத்துக்காக எழுதுவதாக நினைக்க வேண்டாம். பிராயச்சித்த கர்மாவை இப்படி வீணடித்து விட்டார்களே என்ற ஆதங்கத்தால் எழுத வேண்டி இருக்கிறது. இனிமேலும் பெரியவர்களை திருத்த முனைந்து நேரத்தை வீணடிக்காமல் அடுத்த வாரிசுகளுக்கு நல்ல வழியைக் காட்டுவோம். பெரியவர்கள் பிரதோஷ வேளையிலும் டிவி சீரியல்களைப் பார்த்துக்கொண்டு இருக்கட்டும். குழந்தைகளாவது விழித்துக்கொண்டு நம் தர்மத்தைக் காப்பாற்ற முன் வரும்படி வேத மாதா அனுக்ரகம் செய்ய வேண்டும்.

நாளைய தினம் காயத்ரி ஜபம் செய்யும்போது ஸ்ரீ பரமேச்வரனிடம் இந்த பிரார்த்தனையை எல்லோரும் செய்ய வேண்டும்.

Sunday, July 5, 2009

தெய்வங்களின் வாகனங்கள்





ஒவ்வொரு மூர்த்திக்கும் ஒவ்வொரு வாகனம் இருப்பது எல்லோருக்கும் தெரியும் . பிள்ளையாருக்கு மூஷிகமும் முருகனுக்கு மயிலும் விஷ்ணுவுக்கு கருடனும் அம்பாளுக்கு அன்னபக்ஷியும் இருப்பதைப் பார்த்து பலருக்கு இவை எப்படி சுவாமியை தாங்க முடியும் என்ற சந்தேகமும் கூடவே வருகிறது. தத்துவ ரீதியில் இதற்குவிளக்கம் சொன்னாலும் நடைமுறையில் விளக்கம் சொல்லுவது பலருக்கும் பலன் அளிக்கும் என்று தோன்றுகிறது.

வெளி நாட்டு நபர் ஒருவர் பல வருஷங்களுக்கு முன் காஞ்சிபெரியவரை தரிசிக்க போனபோது பெரியவர் பல்லக்கில் பிரயாணம் செய்து கொண்டு இருந்தார். பல்லக்கு தூக்கிய ஆட்களிடம் அவர் பேசியபோது ஆச்சர்யமான விஷயம் தெரியவந்தது. பெரியவாள் பல்லக்கில் இருந்தால் தூக்குவதற்கு மிகவும் சுலபமாகவும் தனி பல்லக்கை தூக்கும் போது மிகவும் கனமாகவும் இருப்பதாக அவர்கள் சொன்னார்களாம். தன்னைத் தூக்குபவர்களுக்கும் சிரமம் தரக்கூடாது என்று பெரியவாள் மனதில் தோன்றிஇருக்கலாம்.

அஷ்டமா சித்திகள் எட்டில் உடம்பை அணு அளவில் ஆக்கிக் கொள்வதுஒரு சித்தி. மகான்கள் இந்த சித்தியை மற்றவர்களுக்கு அருள் செய்யும் போது உபயோகிப்பார்கள். இப்போது பிள்ளையார் விஷயத்திற்கு வருவோம். சுவாமி அணுவாகவும் அதற்கு அப்பால் பட்டவராகவும் இருக்கிறார் என்று அவ்வை பாட்டி சொல்கிறார் இல்லையா? அசுரனை சம்காரம் செய்த பிறகும் அவனுக்கு அனுக்ரகம் செய்ய வேண்டி தன்னை அவன் தூக்கும் அளவுக்கு மெல்லிசாக ஆக்கிக் கொள்கிறார் சுவாமி. இப்போது சொல்லுங்கள். ஒரு நெட்டி பிள்ளையாரை மூஷிகம் தூக்குவது சாத்தியம் ஆகி விடுகிறது அல்லவா?

இன்னொரு விஷயத்தையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சுவாமியை தூக்குவது அந்த வாகனத்திற்குப் பாக்கியமே தவிர சுவாமிக்கு அதனால் பெருமை இல்லை. உத்தர மாயூர ஸ்தல புராணத்தில் பரமேஸ்வரனுக்கு வாகனமானதில் நந்திதேவர் கர்வம் கொண்டவுடன் ஈஸ்வர ஆக்யையால் மாயூர க்ஷேத்ரத்திற்கு வந்து தவம் செய்த பிறகு ஈஸ்வரனே அவருக்கு உபதேசம் செய்ததாக சொல்லப்படுகிறது. ஸ்ரீ மேதா தக்ஷிணா மூர்த்திக்கு எதிரில் நந்தி இருப்பதை இன்றும் அங்கு பார்க்கலாம்.
மதுரையில் சுவாமி செய்த 64 திருவிளையாடல்களில் எல்லாம் வல்ல சித்தரான திருவிளையாடலில் பல சித்திகளை செய்து காட்டுவதை அறியலாம். எனவே இந்த வாகன விஷயம் ஒன்றும் சுவாமிக்குப் பெரியது இல்லை. நம்மால் முடியாததையும் கண்ணால் காணாததையும் வைத்துக்கொண்டு இதெல்லாம் சாத்தியம் இல்லை என்று விடை தெரியாமல் குழம்பிப்போய் பதில் தெரியாமலும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இல்லாமலும் நாளைக் கழிக்கிறோம்.


ஈஸ்வரனுக்குத் தனது ஸ்ருஷ்டியில் எல்லாம் சமமே. தேவர்கள் முதல் எறும்பு வரை எல்லா ஜீவ ராசிகளுக்கும் அனுக்ரகம் செயவதால் தான் சுவாமியை விஸ்வநாதன் என்றும் அம்பாளை அகிலாண்டேஸ்வரி என்றும் சொல்கிறோம்.
(தொடரும்)

Tuesday, May 26, 2009

ஸ்ரீ மகா கணபதி


मंगलम दिशतुमे विनायको मंगलम दिशतुमे षडाननः



मंगलम दिशतुमे महेश्वरी मंगलम दिशतुमे महेश्वरः



-- Sri Skaandha Maha Puranam



உலகங்கள் எல்லாவற்றையும் படைத்து , காத்து ,அருளி ,கருணையால் முக்தி வரம் தந்து உய்விக்கும் முழுமுதல் கடவுளை நாம் அறிய முயல்வது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போல ஆகும். தெய்வத்தை ஆராய்ச்சியின் மூலம் அறியமுடியாது. அனுபவத்தாலும் அவன் அருளாலும் மட்டுமே உணர முடியும். எல்லாவற்றிலும் நிறைந்து விளங்கும் இறைவனை இப்படிப்பட்டவன் என்று வரையறைக்குள் கொண்டுவர முடியாது.



இறைவன் உருவமும் அருவமும் உருவாருவமும் ஆனவன் என்பதை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். அருவமாக இருக்கும் பரம்பொருள் நமக்கு எளிமையாக உருவம் கொண்டு காட்சி அளிக்கிறான். எத்தனையோ கடவுள் வடிவங்களில் தோன்றுவதைக் கண்டு இத்தனை கடவுள் வடிவங்கள் எதற்காக என்று கேட்பது அறியாமை. அவரவர்களது பக்குவத்திற்கும் விருப்பத்திற்கும் ஏற்றபடி வடிவம் கொண்டு விளங்குகிறான் என்பதே நாம் அறிய வேண்டுவதாகும்.



சிறு வயதிலிருந்தே ஏற்படும் பக்தி வளரக்கூடியது. நிலைத்து நிற்பது. குழந்தைகளும் விரும்பும் வடிவில் இறைவன் விநாயகர் வடிவில் அருளுகிறான். ஆகவே அக்குழந்தை தெய்வம் பெரியவர்களையும் தன்னிடம் ஈர்ப்பதில் ஆச்சர்யம் இல்லை. குழந்தைகள் அப்பால கணபதியைத் தங்களைப்போல் ஒரு குழந்தையாக பார்ப்பார்கள். பெரியவர்களோ அவனிடம் எல்லாத் தத்துவங்களையும் பார்ப்பார்கள். குழந்தைகளுக்குத் தத்துவமோ மந்திரமோ தெரியாவிட்டாலும் பெரியவர்களுக்கே இல்லாத கள்ளம் கபடம் இல்லாத மனம் இருப்பதால் தானோ என்னவோ அவர்களுக்கு இறைவன் எளியவனாகிறான்.



சிதம்பரத்துக்கு அருகில் திருநாரையூர் என்று ஒரு ஊர். அங்கே உள்ள சிவாலயத்தில் பூஜை செய்பவர் வெளியூர் சென்றதால் அவரது பிள்ளை பூஜை செய்யப் போனான். பிள்ளையார் நைவேத்தியத்தை சாப்பிடுவர் என்று நம்பினான் அந்த நம்பி. தனது பூஜையில் ஏதோ குறை இருப்பதாலேயே பிள்ளையார் சாப்பிடவில்லை என்று நினைத்து தன் தலையை அருகிலிருந்த கல்லில் மோதிக்கொள்ள ஆரம்பித்தான். அப்போது காட்சி தந்த விநாயகர் அவன் அளித்த மோதகாதிகளைத் தும்பிக்கையால் எடுத்து சாப்பிட்டதோடு அந்தக் குழந்தைக்கு எல்லாக் கலைகளையும் உபதேசித்தார். சிதம்பரத்தில் திருமுறை சுவடிகள் இருக்கும் இடத்தையும் நம்பிக்கு அருளியவர் இந்த விநாயக வள்ளல்.



ஆதிதம்பதிகளான பார்வதி பரமேஸ்வர குமாரனாக கணபதி தோன்றியதைக் குறிக்கும் கதைகள் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஞானப்பழத்தைப் பெறுவதற்காக முருகன் மயிலேறி உலகை வலம் வரும் முன்பு தந்தையையும் தாயையும் வலம் வந்து பழம் பெற்றார் பிள்ளையார். உலக வலம் முடிந்த தம்பியை அப்பழத்தை தந்து சமாதானமும் செய்கிறார். உமாமகேச்வரர்களுக்குள் உலகத்தை கண்டவர் விநாயகர். உலகத்தையே உமாமகேச்வர வடிவமாகக் கண்டவர் முருகப்பெருமான்.


இனிக் கதைகளை விட்டுக் கொஞ்சம் விநாயக வடிவங்களையும் சில அடிப்படைத் தத்துவங்களையும் பற்றிக் காண்போம்.


அப்பாலுக்கு அப்பாலாய் இருக்கும் இந்த குழந்தை சுவாமி அணுவுக்குள் அணு வாகவும் இருப்பவர்.மஞ்சளில் பிடித்துவைத்து மகா கணபதிம் த்யாயாமி ஆவாஹயாமி என்றால் அதற்குள் காக்ஷி அளிக்கிறார். அதே சமயத்தில் 32 விதமான ரூபங்களும் அவருக்கு உண்டு. shreeganesh.com என்ற இணைய தளத்தில் இம் மூர்த்தி ரூபங்களை காணலாம்.


விநாயகருக்குள் சிவசக்தி அம்சங்களையும் மனித மிருக ரூபங்களில் கலப்பையும் காண முடிகிறது. மகேச்வர புத்திரன் என்பதற்காக பின் வலது கையில் மழு (பரசு) வும் உமா புத்திரன் என்பதற்காக பின் இடது கையில் பாசமும் வைத்திருக்கிறார்.நெற்றியில் இளம் சந்திர கலை விளங்குவதால் பால சந்திரர் என்று போற்றப்படுகிறார். (பாலம் என்றால் நெற்றி என்பது பொருள்).

தலைக்கு மேல் மிருகத்தையும் கீழே மனித உடலும் உள்ள சங்கமமாக காக்ஷி தருகிறார். வலது புறம் உள்ள தந்தத்தை (மகா பாரதம் எழுதவும் /அசுரனை அழிக்கவும்) கையில் ஏந்தியுள்ளார். இடது முன்கையில் மாம்பழம்/மோதகம் இருக்கிறது. தும்பிக்கையில் தாய் தந்தையை பூஜிக்க அபிஷேக கலசம் ஏந்தியுள்ளார். எல்லா அண்டங்களும் இவருக்குள் அடக்கம் என்று காட்ட வயிறு பெரிதாகத் தோன்றுகிறது. மொத்தத்தில் இவர் உருவம் ஓம்கார வடிவில் விளங்குகிறது. இவரே மூலாதார மூர்த்தி.

கணேச மகிமை தொடரும்